பாரதி நூற்றாண்டு விழா. அன்றாடம் காலை, மாலை இரு வேளைகளிலும், தூத்துக்குடியிலிருந்து எட்டயபுரத்திற்கு வந்து விழாவில் கலந்து கொள்வார், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., அப்படி ஒரு நாள் மாலை வரும் போது, அதிக ஜனநடமாட்டமில்லாத இடத்தில், ஒரு கைக்குழந்தையுடன் நடுத்தர வயது கிராம பெண்மணி நின்றிருந்தார். காரை நிறுத்தி, விவரம் கேட்டார்.
"எம்.ஜி.ஆர்., ஐயா வருவதாக கூறினார்கள். குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்...' என்று அந்த பெண்மணி கூறினார். கள்ளமில்லாத அந்தப் பெண்ணைப் பார்த்து, எம்.ஜி.ஆர், உருகி விட்டார். பல கேள்விகள் கேட்ட பிறகு, அந்தக் குழந்தைக்கு, "அன்புமணி' என்று பெயர் வைத்ததோடு, சட்டைப் பையில் இருந்து, யாருக்கும் தெரியாமல் பணம் எடுத்துக் கொடுத்தார்.
இதற்குள் மக்கள் கூடிவிட்டனர். அப்போது, அந்த குழந்தை சிறுநீர் கழித்ததால், எம்.ஜி.ஆர்., சில்க் சட்டை நனைந்து விட்டது. அதிகாரிகள் பதட்டமடைந்தனர். குழந்தையின் தாயோ, நடுங்கி விட்டாள்.
ஆனால், சுற்றி இருந்தவர்களை கடிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்., "சின்னஞ்சிறு குழந்தை... அதற்கு என்ன தெரியும்? அந்த தாய் என்ன செய்வாள்?' என்று சகஜமாக கூறிவிட்டு, கைக்குட்டையால் அந்தக் குழந்தையின் உடலை துடைத்து விட்டார். வேறு கைக்குட்டை எடுத்து, சட்டையைத் துடைத்துக் கொண்டு, புறப்பட்டார்.
பல நேரங்களில், அழுக்குடன், எண்ணெய் பிசுக்குடன் பலர் குழந்தைகளைக் கொடுப்பர். அவற்றை ஒரு தாயைப் போல மெல்லக் கையில் ஏந்துவார்; கொஞ்சுவார்; விளையாட்டுக் காட்டுவார். அவருடைய இந்தச் செயல்களில் துளிகூட பாசாங்கு இருக்காது. பக்கத்தில் இருந்து பார்க்கும் பெற்றோர் நெஞ்சு நெகிழும்.
— "எம்.ஜி.ஆர்., என்ற மாமனிதர்' நூலிலிருந்து...
திரு.வி.க., "என் வாழ்க்கைக் குறிப்புகள்' நூலில், "திருப்பூரில், 1922ல், தமிழக காங்., கூடியபோது, நாடார் முதலியோர் கோவில் நுழைவை பற்றி, ராமசாமி நாயக்கரால், (ஈ.வெ.ரா.,) ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அத்தீர்மானம், என்னால் ஆதரிக்கப்பட்டது. மதுரை வைத்தியநாதய்யரும், கிருஷ்ணசாமி ஐயங்காரும் எதிர்த்தனர். (இந்த வைத்தியநாதய்யர் தான் பிற்காலத்தில், 1946ல், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், முதன் முதலில், "அரிஜன்' ஆலயப் பிரவேசத்தைத் தொடங்கி வைத்தார். காலத்தின் கட்டாயம்) திரு.வி.க., மேலும், எழுதுகிறார்: "சிறையில் கூட பிராமணர்கள், தங்களுக்கு சமையல் செய்ய, பிராமணர்களை நியமித்துக் கொண்டனர். ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார், வட ஆற்காடு ஜில்லா காங்., தலைவராயிருந்தவர். அந்நாளில், யான் வேலூர் போகும் போதெல்லாம், எனக்குச் சாப்பாடு வசதி பெரிதும் அவரே செய்வார். ஆனால், அவர் என்னுடன் அமர்ந்து சாப்பிடுவதில்லை.
திருநெல்வேலியில், காங்கிரஸ் சார்பிலே, "தீண்டாமை ஒழிப்பு மாநாடு' நடை பெற்றது. மதியம் தடபுடலான விருந்து. பிரபல தேசபக்தர் என்று பெயர் பெற்ற விருதுநகர் கோவிந்தசாமி நாடார் என்பவர், சாப்பாட்டு பந்தலுக்குள் நுழைந்தார். அப்போது, அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பிராமணர்கள் கூறினர்: "நாடாரே... உங்களுக்கு சாப்பாடு இங்கு இல்லை; அங்கே செல்லவும்' என்றனர். அதற்கு அவர், "நானும் சைவம் தானே?' என்றார். "சைவத்திற்காக இல்லை; நீங்கள் அங்கே செல்லுங்கள்' என்று, அந்தப் பிராமணர்கள் உரக்க சத்தம் போட்டுக் கூறினர். கோவிந்தசாமி நாடாருக்கோ, ஆத்திரம் தாங்கவில்லை. உடனே, மாநாட்டை விட்டு வெளியேறி, விருதுநகர் புறப்பட்டு வந்தார். தான் போட்டிருந்த கதர் சட்டையை நடுரோட்டில், தீ வைத்துக் கொளுத்தினார்.
காங்கிரசிலும், காந்தியடிகளிடமும் பற்றுக் கொண்டு, தேச சேவை செய்து வந்த ஈ.வெ.ரா.,வுக்கும், மன மாறுதல் ஏற்படுவதற்குக் காரணம் என்ன? செல்வக் குடும்பத்தில், தீவிர வைணவக் குடும்பத்தில் பிறந்து, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த அவருக்கே, என்ன நிலை நேர்ந்தது! அவரே, கூறுகிறார்:
நானும், சீனிவாச அய்யங்காரும், காங்கிரஸ் பிரசார விஷயமாய், திண்டுக்கல்லுக்குப் போன போது, ஒரு பிராமணர் வீட்டுக்கு சென்றிருந்தோம். அவர் வேறாக, நான் வேறாக வைத்து சாப்பாடு போடப்பட்டது. பகலில் சாப்பிட்ட எச்சில் இலை அப்படியே இருக்க, அதன் பக்கத்தில் தான் இரவும், இலை போடப்பட்டு, சாப்பாடு போடப்பட்டது. பெரிய குளத்திற்கு போனபோது, ஒரு வக்கீல் பிராமணர் வீட்டிலும், எனக்கு காலைப் பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்தில், பகல் சாப்பாடும், பகல் சாப்பாடு சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்தில், இரவு சாப்பாட்டிற்கு இலை போடப்பட்டு, எறும்புகளும், பூச்சிகளும் ஊறிக் கொண்டிருக்கவே சாப்பிட்டு வந்தேன்...
காந்திக்கு நேர்ந்த இழிவு, இந்திய விடுதலைக்குக் காரணமானது. அம்பேத்கருக்கு ஏற்பட்ட இழிவு, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்கு உதவியது. ஈ.வெ.ரா.,வுக்கு ஏற்பட்ட இழிவு, சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கி விட்டது.
—"சுயமரியாதை இயக்கம்'
நடுத்தெரு நாராயணன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.