சென்னையில் டிசம்பர் சீசன் என்றாலே, ரசிகர்களுக்கு படு குஷி. சென்னையின் பல்வேறு சபாக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும், இங்கு, இந்த சீசனில் கச்சேரிகள் ஏற்பாடு செய்து சபாக்களும், தற்போது, போட்டி போடுவதில் கர்நாடக இசையும், நடனக்கலையும் பல்கிப் பெருகி உள்ளன. சிங்கப்பூர் இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி முதலில் இசை, நடன நிகழ்ச்சிகளை, ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்ய துவங்கி, தற்போது, அகடமியாக மிக சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
கர்நாடிக் ரேடியோ டாட்காம் அமைப்பு முழுக்க, முழுக்க இளம் தலைமுறையினருக்கு, இசையின் பெருமையை அறியச் செய்யும் அமைப்பு. சிங்கப்பூரின் இந்த இரண்டு அமைப்புகளும், அண்மையில் சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் அமைந்துள்ள, தத்வலோகா ஆடிட்டோரியத்தில் உள்ள ஜகத்குரு ஸ்ரீ அபிநவவித்யாதீர்த்தர் மெமோரியல் ஹாலில், இருபதுக்கும் மேலான இசை நாட்டிய நிகழ்ச்சிகளை அளித்தன.
இந்த நிகழ்ச்சிகளில் இரண்டு அம்சங்கள் மனம் கவரும் விதத்தில் இருந்தன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே, மறைந்த இசை மேதைகளான சங்கீத கலாநிதிகள் டி.பிருந்தா- மதுரை மணி அய்யர் - பாலக்காடு மணி அய்யர் -ஆகியோருடைய நூற்றாண்டு நினைவஞ்சலிகளாக இருந்தன. சங்கீத கலாநிதி மதுரை மணி அய்யர் மறைந்து தற்போது, 44 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும், ரசிகர்கள் அவரை, அவர் இசையை மறக்கவில்லை.
அதே வழியில் இன்று சங்கீத கலாநிதி, "டி.வி. சங்கர நாராயணனுடைய சிஷ்யர் ஆர்.சூர்யபிரகாஷ் இசை வழங்கி பிரபலமடைந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க மதுரை மணியை நினைவூட்டும் வகையில், சூர்யபிரகாஷ் பாடினார். அவசர அடியாக இல்லாமல், கர்நாடக சங்கீதத்தின் அத்தனை பரிமாணங்களையும், அழகாக பட்டியல் போட்டு உணர்த்திய நிகழ்ச்சியாக இனித்தது.
பேகடா வர்ணமே நிகழ்ச்சியின் சிறப்பான துவக்கமாக இருந்தது. நாட்டை ராகத்தின் ஒரு சிறிய விரிவிலேயே, மனதில் இடம் பிடித்த சூர்யபிரகாஷ் பாடிய அதிகம் கேட்டிராத சிவத்ரய மகா கணபதிம் (நாட்டை) (ஆதி) - உயர்வான சங்கதிகளுடன் அமைந்திருந்தன. கன்னட கௌளையில் ஸ்ரீ தியாகராஜருடைய சொகசு ஜுட தரமா பரம சாம்பவா எடுப்புடன் சரச சாம பேத தண்ட (காபி நாராயணி) இதில், குறிப்பாக சூர்யபிரகாஷின் ஸ்வரப்ரஸ்தாரங்கள், மதுரை மணியை நினைவூட்டும் வகையில் பெரிதும் ரசிக்க வைத்தன.
பாபநாசம் சிவனுடைய கற்பக மனாகரா(மலயமாருதம்) (கண்ட ஜம்பை) ஸ்வரங்கள் ஜொலிப்புடன் இருந்தன. பிரதானமான தோடியில், பாபநாசம் சிவன் இயற்றிய" கார்த்திகேயகாங்கேய கவுரி தனயா'வில் மெருகுடன் சங்கதிகள் அமைந்தன. இந்த இசை நிகழ்ச்சியில், பக்கவாத்தியங்கள் வாசித்த சூப்பர் ஸ்டார் கலைஞர்கள், வயலினில் எம்.ஆர்.கோபிநாத், மிருதங்கத்தில் திருவாரூர் நந்தி கலைமாமணி திருவாரூர் பக்தவத்சலம்- வி.சுரேஷ் கடம்.
-மாளவிகா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.