நாடு கடந்து, மொழி கடந்து, உலக மக்களால் கொண்டாடப்படும் பொது விழாவாக மாறியிருக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு. அதே நேரத்தில், ஆங்கிலப் புது வருடத்தைப் போலவே, 1000க்கும் அதிகமான புதுவருடங்கள் பல்வேறு மொழி பேசும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும், எல்லா இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுவாக வலியுறுத்தப்படும் கருத்து, தீயன கழிதலும், நல்லன புகுதலும் என்கிற சான்றோரின் வாக்குதான். பண்டைய காலத்தின் புதுவருடங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
முதல் தீர்மானம்!
நைல் நதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கையே, புதுவருடமாக ஒரு காலத்தில் கொண்டாடியிருக்கின்றனர் எகிப்து மக்கள். இந்தப் புதுவருட கொண்டாட்டம் பெரும்பாலும் செப்டம்பர் மாத இறுதியிலேயே நிகழ்ந்திருக்கிறது. வசந்த காலத்தில் வரும் முதல் அமாவாசை தினத்தை புதுவருடமாக கொண்டாடும் வழக்கத்தை வைத்திருந்தனர் பாபிலோனியர்கள். இவர்களின் புதுவருடக் கொண்டாட்டங்கள் 11 நாட்கள் நீடிக்கும் வகையில் இருந்தன. ஒவ்வொரு நாள் கொண்டாட்டமும் தனக்கென தனியாக சிறப்புகளைக் கொண்டிருந்தது. புதிய பயிர்களை நடுவதற்கு ஏற்ற காலமான வசந்த காலம் தங்கள் வாழ்விலும் வசந்தத்தை தரும் என்று நம்பினர் பாபிலோனியர்கள். இப்போது புதுவருட தீர்மானங்கள் எடுப்பது போலவே, பாபிலோனியர்களும் புதுவருடத்தின் போது தீர்மானங்கள் எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். கடன் வாங்கிய விவசாயக் கருவிகளைத் திருப்பித் தருவதே, அதில் முதல் தீர்மானமாக இருக்கும்.
வாசக்கதவு தெய்வம்!
பண்டைய நாட்களில் மக்கள் பெரும்பாலும் அறுவடையுடன் தமது புதுவருடத்தைக் கொண்டாடியிருக்கின்றனர். பழையதை மறந்து புதுவருடத்திற்கு தம்மை தூய்மையாக்கும் வகையில் கிரியைகளையும் செய்திருக்கின்றனர். உதாரணமாக, தாங்கள் உபயோகித்து வந்த பழைய நெருப்பை அணைத்துவிட்டு, புதுவருடத்தில் புதிதாகத் தீ வளர்த்தனர். பண்டைய ரோமானியர்கள், வசந்த காலத்தில் புதிதாகத் துளிர்த்த புனித மரங்களின் கிளைகளை ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கினார்களாம். பிறகு இதுபொன் முலாம் பூசப்பட்ட விதைகள் அல்லது ஜானுஸின் படம் பொறிக்கப்பட்ட நாணயங்களைக் கொடுத்து வாங்குவதாக மாறியது. ஜானுஸ் என்பது வாசல் கதவுகள், ஆரம்பம் ஆகியவற்றின் தெய்வமாக கருதப்பட்டது. ஜனவரி மாதம் இத்தெய்வத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டே உருவாகியிருக்கிறது. ரோமானியர்கள் தங்களது சக்கரவர்த்திகளுக்கு புதுவருட பரிசுகள் வழங்குவதையும் வழக்கமாக வைத்திருந்தனர்.
"Pin Money' பிறந்த கதை! ஒரு கட்டத்தில் ரோம சக்கரவர்த்திகள் மக்கள் தங்களுக்கு புத்தாண்டின் போது கட்டாயம் பரிசுகள் தர வேண்டும் என்று வற்புறுத்த ஆரம்பிக்கவே, கி.பி.,567ல் கிறிஸ்துவ தேவாலயம் இந்த பரிசளிப்பு முறையையும், மற்ற பண்டைய முறைகளையும் ஒழித்தது. ஆனாலும் கி.பி.,12ம் நூற்றாண்டு கால கட்டத்தில் இங்கிலாந்தில் அரசர்கள் மக்களிடம் புதுவருட பரிசுகளை வற்புறுத்திக் கேட்டனர். அந்தப் பரிசுகள் தங்கக் கட்டிகள் அல்லது தங்க நகைகளாக இருந்தன. முதலாம் எலிசபெத் ராணி அழகிய பூவேலைப் பாட்டால் செய்யப்பட்ட அல்லது தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கையுறைகளைப் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. பிறகு பொதுமக்கள் மத்தியிலும் புதுவருட பரிசுகள் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் காணப்பட்டது. கணவர்கள் தங்கள் மனைவியருக்கு ஊசி போன்ற பொருட்களை வாங்க பணம் கொடுத்தனர். அந்த முறை பின்னர் மறைந்தாலும் Pin Money என்ற சொல்வழக்கு இன்றும் குறைவாகச் செலவழிப்பதற்கு வழங்கப்படும் சிறிய தொகையைக் குறிக்கிறது. பண்டைய பாரசீக மக்கள், உற்பத்தியின் அடையாளமாக முட்டைகளை புதுவருடத்தில் பரிசளித்தனர்.
தமிழில் எழுதப்பட்ட பைபிள்!
புதுச்சேரியில் 125 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்ட பைபிள் ஒன்று தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் ஆவணங்கள் காப்பகத்துக்கு அன்பளிப்பாக வந்துள்ளது. இந்த பைபிளை அன்பளிப்பாக கொடுத்தவர் ராசம்மாள் நாதன். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவருடைய கொள்ளுத் தாத்தா இந்தியாவில் பிறந்தவர். ஒப்பந்த தொழிலாளியாக தென் ஆப்பிரிக்கா சென்றவர் அங்கேயே செட்டிலாகி விட்டார். 1880ல் புதுச்சேரியில் பிரெஞ்சுக் காரர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் பைபிள் தமிழில் எழுதப்பட்டுள்ளது. ராசம்மாளின் கொள்ளுத் தாத்தா டர்பன் சென்ற போது அந்த தமிழ் பைபிளையும் தன்னுடன் எடுத்துச் சென்றார். தனக்கு பின் அந்த பைபிள் குடும்ப சொத்தாக பராமரிக்கப்பட வேண்டும் என்று விரும்பி ராசம்மாளின் தாத்தாவிடம் வழங்கியுள்ளார். அவர் மறைவுக்குப் பிறகு அந்த பைபிள் ராசம்மாளின் தந்தையிடம் வந்தது. தந்தை இறப்பதற்கு முன் ராசம்மாளிடம் பைபிளை கொடுத்து பாதுகாக்கும்படி சொல்லிக் கொடுத்துள்ளார். இப்படியாக தலைமுறை தலைமுறையாக குடும்பச் சொத்தாக பாதுகாக்கப்பட்டு வந்த தமிழ் பைபிளை தற்போது டர்பனில் உள்ள ஆவணக் காப்பகத்துக்கு வழங்கியுள்ளார். "இத்தனை ஆண்டுகளாக அந்த பைபிள் எங்கள் குடும்பத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. அரிய பாரம்பரிய குடும்பச் சொத்தான பைபிளை எனக்கு பின் என்னுடைய சந்ததிகள் பாதுகாப்பாக காப்பாற்றுவர் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் தான், இந்த பைபிளை டர்பன் ஆவணங்கள் காப்பகத்துக்கு அன்பளிப்பாக வழங்க முடிவு செய்தேன். நான் இறந்தாலும் எனக்குப் பின் இந்த பைபிள் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும். எனக்கு அதுபோதும். என் வீட்டில் வைத்திருப்பதை விட அன்பளிப்பாக வழங்கினால், பைபிளை மற்றவர்கள் அனைவரும் பார்த்து பாராட்டுவர். அதுதான் என் விருப்பம் என்று சொல்லும் ராசம்மாளுக்கு 5 குழந்தைகளும், 19 பேரக்குழந்தை களும், 12 கொள்ளுப் பேரன்களும் உள்ளனர். தனது பரம்பரை சொத்தாக 125 வருடங்கள் பாதுகாக்கப்பட்ட பைபிள், தனது பிள்ளைகளால் தொடர்ந்து பாதுகாக்கப்பட மாட்டாது என நினைத்து ஆவணக் காப்பகத்துக்கு அளித்த ராசம்மாளின் செயல் பாராட்டத்தக்கது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.