ஒரு தம்பதியினருக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்தது. பணம் வந்தவுடன் கண், மண் தெரியாமல் துள்ளிய அந்த தம்பதியினர், அந்த பணத்தை கொண்டு என்ன செய்யலாம் என்று ஒரு நீண்ட திட்டம் போட்டனர்.
வீடு வாங்க வேண்டும்; கார் வாங்க வேண்டும்; நகைகள் வாங்க வேண்டும்; வீட்டுக்குத் தேவையான எல்லா வகையான நாகரிகப் பொருட்களையும் வாங்கிக் குவிக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டனர்.
""லாட்டரியில் பணம் விழுந்த வுடன் முதல் காரியமாக, நாம் யார் கண்ணுக்கும் தெரியாத இடத்தில் போய்தான் வீடு வாங்க வேண்டும். அப்போதுதான் நம்மைப் பரம்பரைப் பணக்காரர்கள் என்று பலரும் மதிப்பர்,'' என்று யோசனை கூறினாள் மனைவி.
கணவனும் அதற்கு ஒப்புக் கொண்டான். அதன்படியே விலை உயர்ந்த பங்களா ஒன்று வாங்கப்பட்டது. மேல் நாட்டு நாகரிக முறைப்படி கட்டப்பட்டிருந்த அந்த வீட்டை மனைவியே தேர்ந்தெடுத்தாள்.
அதன் பின்னர் மளமளவென்று ஆடம்பரப் பொருட்கள் வந்து சேர்ந்தன. டி.வி., டி.வி.டி., வாஷிங்மெஷின், கிரைண்டர், கேஸ் அடுப்பு, சமையல் அறை அதிநவீன உபகரணங்கள், அவன், பிரிட்ஜ், ஏ.சி., ஏர் கூலர், அறைக்கு அறை போன் என்று வீடு அமர்க்களப்பட்டது.
வால் பேப்பர்ஸ், கார்பெட், அலங்கார மின் விளக்குகள் என்று வாங்கிக் குவிக்கப்பட்டன.
ஒரு குட்டி அரசாங்கம் அங்கே நடை பெறுவதைப் போன்று பார்த்தவர்கள் பிரமித்தனர். சமையல் காரர்கள், தோட்டக் காரர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என்று பலரும் அதில் நிறைந்தனர்.
கூர்க்காக்கள் போடப்பட்டனர். அந்தப் பகுதி மக்கள் இவர்களைக் கண்டு பிரமித்தனர். விலை உயர்ந்த ஓவியங்கள், தஞ்சாவூர் கலைப் பொருட்கள், பாய்கள் போன்றவை சுவரில் அலங்கரிக்கப் பட்டன.
படுக்கை அறையில் வாட்டர் பெட்டும், ரொட்டேட்டர் பெட்டும் போடப் பட்டன. பாத்ரூமில் செய்யப்பட்ட அதி நவீன சமாச் சாரங்களைச் சொல்ல வார்த்தைகளே இல்லை!
அவர்களைப் பார்ப்பவர்களிடம் அவள் பெருமையாகச் சொல்வாள்!
""மற்ற பணக்காரர்களின் வீடுகளைப் போலல்ல எங்கள் வீடு. சமையல் எல்லாவற்றுக்கும் ஒரிஜினல் காராம் பசு நெய் தான் உபயோகிக்கிறோம். அவ்வாறு எங்களுக்கு ஒரிஜினல் கிடைக்க நாங்களே பதினைந்து காராம் பசுக்களை எங்கள் வீட்டில் வளர்க்கிறோம்!
""இப்படி எது எடுத்தாலும் ஒரிஜினல் தவிர, வேறு ட்யூப்ளிகேட்டோ, அதற்கு இணையாக ஒன்றோ நாங்கள் வாங்குவது இல்லை,'' என்று அவள் பெருமையுடன் பீற்றிக் கொள்வாள்!
ஒருநாள் அவள் கணவருக்குத் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் திணறினான். டாக்டருக்கு போன் செய்து வீட்டுக்கே வரவழைக்கப்பட்டார். கவலை தோய்ந்த முகத்துடன் அவளுடைய உறவினர்களும், தெரிந்தவர்களும், வேலைக்காரர்களும் கூடியிருந்தனர்.
டாக்டர் வந்தவுடன் விரைந்து செயலாற்றினார். பின்னர் அவர் மனைவிக்கு ஆறுதல் கூற எண்ணம் கொண்டவராய், ""பயப்படாதீர்கள்... இது லைட் அட்டாக், செயற்கை சுவாசம் கொடுத்தால் அவர் பிழைத்துக் கொள்வார்!'' என்றார்.
இதைக் கேட்ட அவள் கம்பீரமாகக் கூறினாள்.
""டாக்டர் செயற்கை, போலி, ட்யூப்ளிகேட் இதெல்லாம் எனக்குப் பிடிக்காது என்று உங்களுக்குத் தெரியும் இல்லையா? என் கணவருக்குச் செய்யப்படும் சிகிச்சை எல்லாமே ஒரிஜினலாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதுவும் வேண்டாம்,'' என்றாள்.
டாக்டர் திகைத்துப் போனார்.
டாக்டரே திகைத்து போயிட்டார் என்றால் அவளின் கணவரின் நிலையை என்னவென்று சொல்வது. வீண் கவுரவம் பார்த்து, கணவனின் உயிரை பறிகொடுத்தாள் மனைவி.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.