சிவகாசி - நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் உழைப்பாளர்கள் நிறைந்த ஊர். இந்த தேசத்தின் இன்னொரு பக்கம் கொஞ்சம் சோகமானது. சோகத்திற்கு காரணம், பராமரிக்க ஆள் இல்லாமல் சிரமப்படும் வயதானவர்கள். பென்ஷன், சேமிப்பு, வீடு, பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என, எதற்கும் பஞ்சமில்லை. ஆனால், அன்பாய் பார்க்க, பேச, கவனித்துக் கொள்ளத்தான் யாருக்கும் நேரமில்லை.
"எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர்றேன், ஆனா, உங்கள வீட்ல வச்சு பார்த்துக்க முடியாது. ப்ளீஸ் தனியா இருந்துக்குங்க. முதியோர் இல்லத்திலும் சேரக் கூடாது; குடும்ப மானம் போயிரும். ஆகவே, எப்படியாவது சமாளிச்சுக்குங்க...' என்று, நேருக்கு நேராக சொல்லி விட்ட பிள்ளைகளால், தனித்தும், தவித்தும் போனவர்கள் இங்கே நிறைய பேர்.
இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டனர். ஆனால், இந்த வயதில் பசியைத் தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நேர நேரத்திற்கு சமைக்க முடியாத தங்களுக்கு, யாராவது சாப்பாடு தர மாட்டார்களா என்று ஏங்கிப் போனார்கள். இவர்களின் ஏக்கத்தை போக்க வந்தவர்தான் எட்வின் சாலமன் ராஜ்.
சென்னையில் பெரிய உத்தியோகத்தில் கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தவர், ஒருமுறை முடியாமல் போன தன் தாய்க்கு, உணவு தரச்சொல்லி பலரை கேட்டபோது, அவர்களில் பலரும் பல காரணங்களை சொல்லி உணவு தரத் தயங்கினர்.
மனிதர்களின் சுய ரூபம் அறிந்து அதிர்ச்சியானவர், அந்த கணமே, தான் பார்த்து வந்த வேலையை தூக்கி எறிந்து விட்டு, சிவகாசிக்கு மனைவி ரோஸ்லின் மற்றும் பிள்ளைகளுடன் வந்து விட்டார். இங்கே, தன் தாயைப் போலவே, நிறைய வயதானவர்கள் பணம் இருந்தும், நேர நேரத்திற்கு நல்ல உணவு கிடைக்காமல் சிரமப்படுவதை பார்த்து, அவர்களுக்கும் உணவு வழங்க முடிவெடுத்தார்.
நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன், "ரெகோபத்' என்று ஒரு அறக்கட்டளை துவங்கி, அதன் மூலம், சிவகாசியின் மூலை முடுக்கில் உள்ள தனிமையில் வாழும் வயதானவர்களுக்கு, மூன்று வேளை உணவு வழங்கி வருகிறார். அறுபது வயதிற்கு மேலானவர்களுக்கு, என்ன மாதிரியான உணவு வழங்கலாம் என்று மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு, அதன்படி காலையில் இட்லி, ராகி, சேமியாபுட்டு, மதியம் காய்கறிகள் நிறைந்த சாப்பாடு, இரவு சப்பாத்தி, தோசை, பால் சாதம் என்று, எளிதில் ஜீரணிக்கக்கூடிய, சத்தான உணவை வழங்கி வருகிறார். விருப்பம் உள்ளவர்களுக்கு, வாரத்தில் இரண்டு முறை அசைவமும் உண்டு.
காலை ஏழு மணி, மதியம் ஒரு மணி, இரவு ஏழு மணி என்று சரியான நேரத்தில், "ஹாட் பாக்சில்' வைத்து சுவையான உணவை சுடச்சுட கொடுத்து வருகிறார். வருடத்தில், 365 நாளும் எவ்வளவு புயல், மழை அடித்தாலும், இந்த பணியை விடாமல், பல வருடங்களாக செய்து வருகிறார். "இது கடவுளின் காரியம், ஆகவே, உணவு வழங்க எப்போதும் காலதாமதம் செய்ய மாட்டேன்...' என்கிறார். இடைப்பட்ட நேரத்தில், இவரே காய்கறி வாங்கச் செல்கிறார். கிலோ ஐம்பது ரூபாய்க்கு விற்றாலும், பொன்னி அரிசியில்தான் Œõதம். இவரது மனைவி ரோஸ்லியின் தலைமையில் தான் உணவு தயாராகிறது.
இப்படி கொடுக்கப்படும் உணவிற்கு கட்டணம் உண்டு, ஆனால், பணம் தருகின்றனர் என்பதற்காக, எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்து விடுவது இல்லை. உண்மையிலேயே அவர்களை கவனிக்க ஆள் இல்லையா, அவர்களால் சமைக்க இயலாதா என்பதை எல்லாம் விசாரித்த பின்னரே உணவு வழங்குகிறார்.
அவ்வப்போது இவர்களிடம் நேரில் நிறைய மனம் விட்டு பேசி, அவர்களது பிரச்னைகளை தீர்த்து வைக்கவும் வழி காண்கிறார். அந்த வகையில், இன்று சிவகாசியில் உள்ள பல வயதானவர்களின் செல்லப்பிள்ளை இந்த எட்வின்தான். வருடத்தில் ஒரு முறை இவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு இடையே பல நிகழ்ச்சிகளை நடத்தி, பாராட்டி, பரிசு வழங்கியும் மகிழ்விக்கிறார். அதன் மூலம், தானும் மகிழ்கிறார்.
எட்வினுடன் பேசி அவரது புனிதமான பணியை பாராட்ட தோன்றுகிறவர்களுக்கு, தொடர்பு எண்:9442324424.
***
எல். முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.