எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப் போட்டு, "மாடி வீட்டு ஏழை' என்ற திரைப்படத்தை, தாமே டைரக்ட் செய்து, தயாரிக்கத் தொடங்கினார் நடிகர் சந்திரபாபு. முதல் நாள் படப்பிடிப்பிலேயே, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., மேற்கொண்டு நடிக்க வரவேயில்லை.
அப்போது, "கலை' என்ற பெயரில், ஒரு சினிமாப் பத்திரிகை வெளிவந்தது. அதில், சந்திரபாபு அளித்த பேட்டியில், "உங்களுக்குப் பிடித்த நடிகர்?' என்ற கேள்விக்கு, "இரண்டு பேர், ஒன்று - நான். மற்றொருவர் - சிவாஜிகணேசன்' என்று பதில் அளித்தார். எம்.ஜி.ஆரை கோபமூட்டுவதற்காகச் சொன்ன பதில்! சுவற்றில் அடித்த பந்து திரும்பி வந்தது. எம்.ஜி.ஆரின் அண்ணன், எம்.ஜி.சக்கரபாணி, சந்திரபாபுவிடம் கேட்டார்...
"என்ன, ஒரு பத்திரிகையில், உனக்குப் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன் தான் என்று சொல்லியிருக்கிறாய்?'
சந்திரபாபு சூடாகச் சொன்னார்: "பின்னே... உங்கள் தம்பி பெயரை சொல்வேன் என்று நினைத்தீர்களா? நெவர்!'
விளைவு - "மாடி வீட்டு ஏழை' படம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. சந்திரபாபு உண்மையிலேயே ஏழையாகிப் போனார்.
ஒருபடத்தில் நடிக்க, ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார் சந்திரபாபு. (அந்தக் காலக்கட்டத்தில் அரசு ஊழியரின் ஒரு மாதச் சம்பளமே, 150 ரூபாய் தான்) அடுத்த ஏழு, எட்டு ஆண்டுகளில், வயிற்றுக்குச் சோறின்றி, வாழ வழியின்றி, வீட்டு மின்சாரக் கட்டணம் செலுத்தாமல், மின்வாரியத்தினர் வந்து, "பீஸ்' பிடிங்கிவிட்டுப் போன நிலையில், மெழுகு வர்த்தி வாங்கவும் காசில்லாமல், மூன்று இரவுகள் இருட்டிலேயே வாழ்ந்தார்.
எந்த சிவாஜி கணேசனை உயர்த்திக் பேசியதற்காக எம்.ஜி.ஆரின் பகையாளி ஆகி, ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி வதைபட்டாரோ, அதே சிவாஜி கணேசனை, ஒரு நாள் தேடிப் போனார் சந்திரபாபு.
"கணேசா... இப்போது நான் பட வாய்ப்பு இல்லாமல், பட்டினி கிடக்கிறேன். உன் படங்களில் எனக்கு சிபாரிசு செய்து, வாய்ப்பு வாங்கி கொடு. ஏதோ, பிழைத்துக் கொள்கிறேன்...' என்றார்.
சிவாஜி கணேசன் சாவதானமாகச் சொன்ன பதில், "உனக்கு என்னப்பா கஷ்டம்? ஏன் பட்டினி கிடக்கிறாய்? தினமும் என் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு போ. உனக்கென்று தனியாகவா உலை வைக்கப் போகின்றனர். என் வீட்டில் எத்தனையோ பேர், வேலைக்காரன், தோட்டக்காரன், சமையல்காரன் சாப் பிடுகின்றனர். அதுபோல, நீயும் ஒருத்தனா சாப்பிட்டுவிட்டுப் போயேன்...'
பதில் சொல்லாமல், கிளம்பிப்போன சந்திரபாபு, விரைவில் காலமானார்.
***
கவர்னர் ஜெனரல் பதவிக்காலம் முடிந்ததும், ராஜாஜி, சென்னை புறப்பட்டார். அவர் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம், சென்னைக்கு அனுப்பப்பட்டன.
எல்லாப் பொருட்களையும் அனுப்பி விட்டனரா என்று பார்ப்பதற்கு, பிரதமர் நேருவே, ராஷ்டிரபதி பவனத்துக்கு வந்தார்.
அங்கே ஒரு இரும்புக் கட்டில் இருந்தது. அது, ராஜாஜி பயன்படுத்திய கட்டில். சாய்வாக உட்கார்ந்து எழுதவும், படிக்கவும் வசதியுள்ள கட்டில். அது, ராஜாஜியின் கட்டில் என்றும், ராஷ்டிரபதி பவனத்தின் கவனக்குறைவால், தங்கி விட்டது என்றும் கருதிய நேரு, அதை சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். கட்டிலும், சென்னைக்கு வந்து விட்டது.
"இதை, சென்னைக்கு அனுப்புமாறு நான் சொல்லவில்லையே; அரசு பணத்தில் வாங்கிய இக்கட்டில், எப்படி சென்னைக்கு வந்தது?' என்று ராஜாஜிக்கு வியப்பு; பிறகு விசாரித்தார். நேருஜியின் உத்தரவின்படி கட்டில் அனுப்பி வைக்கப்பட்ட விவரம் தெரிந்தது.
பிறகு, நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார் ராஜாஜி.
"தங்கள் அன்புக்கு நன்றி. ஆனால், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த கட்டில், என்னுடையது அல்ல; அது அரசாங்கப் பணத்தில் வாங்கப்பட்டது. எப்படியோ, அது என்னிடம் வந்துவிட்டது. அந்த கட்டிலின் உத்தேச விலைக்கு, ஒரு செக் அனுப்பியிருக்கிறேன். அரசு கஜானாவில் அத்தொகையை சேர்ப்பித்து விடுங்கள்...' என்று, அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார் ராஜாஜி.
***
நடுத்தெரு நாராயணன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.