மகாராஷ்டிராவின் ரெய்காட் மாவட்டத்தில், கர்ஜித்தக்சல் என்ற நகருக்கு அருகில் மாதெரன் என்ற கோடை வாசஸ்தலம் உள்ளது. இது இந்தியாவின், மிகச்சிறந்த கோடை வாசஸ்தலம். மேற்கு மலைத் தொடரில் கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில், இந்த ஊர் அமைந்துள்ளது. இதன் மொத்த நீளம் 7.2 கிலோமீட்டர். அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியை, மத்திய அரசு 2002ல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவித்தது. இந்த மலைப் பிரதேசத்தில் பல அரிய மூலிகைகள், வேர்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
மும்பை (90 கி.மீ), பூனே (120), சூரத் (140 கி.மீ) ஆகிய மூன்று மெட்ரோ நகரங்களுக்கும் இது ஒன்றுதான் கோடை வாசஸ்தலம். இதனால், வருடம் முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருப்பினும், இங்கு அமைதி தவழ்கிறது. இதற்கு காரணம், மாதெரன் பகுதியில் வாகனத்தடையுள்ளது. நகராட்சியின் ஆம்புலன்ஸ் மட்டுமே ஓட அனுமதி. இதனால் இங்கு ஒன்று சுற்றி நடந்து வர வேண்டும் அல்லது குதிரை மற்றும் கை ரிக்ஷாக்களில் பயணிக்க வேண்டும். இங்கு 460 பயணக் குதிரைகள் உள்ளன. 94 கை ரிக்ஷாக்கள் உள்ளன. இவர்கள் மணிக்கணக்கில் பேசி, சுற்றுலா பயணிகளை ஏற்றி, ஊரை வலம் வந்து காட்ட வேண்டிய காட்சிகளை காட்டுகின்றனர். இங்கு மொத்தம் 38 இடங்கள் பார்க்க வேண்டியவை. இவற்றில் மிகச் சிறந்தது, "பனோரானிக் பாயிண்ட்' இங்கு நின்று மலையின் சுற்றுப் பகுதியை 360 டிகிரிக்கு பார்த்து மகிழலாம். சூரியன் எழுதல், மறைதல் பார்ப்பதற்கு மிகவும் சிறந்தது. நல்ல தெளிவான சுற்றுச்சூழல் இருப்பின், இரவில் 90 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் மும்பை கூட தெரியுமாம்.
1850ல்தான் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தானே கலெக்டர் ஷுக் பாண்டிஸ் மாலெட் என்பவர், இதனை பார்த்து மும்பை கவர்னரிடம் கூற, அவர் வந்து இதனை பிரபலமாக்க, அடிக்கல் நாட்டினார். அடிக்கடி வந்து தங்கினார். இந்த இடத்தின் விசேஷமே பொம்மை ரயில்தான்.
இது 1907ல் துவக்கப்பட்டது. 20 கி.மீட்டர் தூர ரயில்பாதை போட அன்று ஆன செலவு 16 லட்ச ரூபாய். காட்டு வழியாய், பல மலைத்தொடர்களின் பின்னணியில் திடீர் நீர் வீழ்ச்சிகள், பூ படுக்கைகளின் இடையில் இது பயணிக்கும் போது தனி அழகு! மொத்தமே, 250 இருக்கைகள்தான். அப்துல்ஹுசைன் ஆடம்ஜிபீர்பாய் என்பவர்தான், தன் தந்தை உதவியுடன் இந்த ரயில் பாதையை உருவாக்கினார். இந்த தந்தைக்கு மாதெரன் அடிக்கடி வந்து செல்வது ரொம்ப பிடிக்குமாம்!
மழைக்காலத்தில் 4 மாதம் இந்த ரயில் ஓடாது. 2011ல் கூட ஜூலை முதல் அக்டோபர் வரை இது ஓடவில்லை. இங்கு வெப்பம் வருடம் முழுவதும் மிதமாக (அதிகபட்சம் 32 டிகிரி குறைந்த பட்சம் 16 டிகிரி) இருக்கும். இதனால் வருடம் முழுவதும் கூட்டம் அலைமோதும். இருந்தாலும் மழைக்காலம், சற்று ஆபத்தானது; மண் சரிவுகள் சகஜம்!
ஜூலை 2005ல் கடும் வெள்ளம் ஏற்பட்டு, ரயில்பாதை 70 சதவீதம் நிர்மூலமானது . பிறகு 2.25 கோடி ரூபாய் செலவில், மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, 2007 ஏப்ரலில் மறுபடியும் ஓடத்துவங்கியுள்ளது.
இங்கு குரங்குகள் அட்டகாசம் அதிகம்; ராட்சச அணில்கள், கருப்பு புல்புல் பறவை, நீலகிரி மரக்கலர் புறா, போம்படூர் புறா, ராட்சச ஓணான், பல்லிகள் ஆகியவற்றையும் காணலாம். வண்ண மயமான காட்சிகளை 360 டிகிரியில் சுற்றி காண்பது கண்கொள்ளாக் காட்சி.
மாதெரன் மேலே சோட்டாபீம் என்ற வெள்ளைக்குதிரை மிகவும் பிரபலம். இதில் ஏறி பயணிக்க, குழந்தைகள் போட்டி போடுகின்றனர். இதனால் குதிரை வியாபாரிக்கு தினமும் நல்ல வருமானம்.
மாதெரனுக்கு சாமான்கள் குதிரைகளில் தான் வருகின்றனர். இதற்கு தனியாக 600 குதிரைகள் உள்ளன. உள்ளூர் மக்கள் தள்ளுவண்டியில் வைத்து பலபொருட் களை சுற்றுலா பயணிகளுக்கு விற்கின்றனர். நடந்தே வலம் வருவது உடம்புக்கு மட்டுமல்ல... மனதுக்கும் இதனமாது
வாங்களேன் மாதெரனுக்கு ஒரு எட்டு போயிட்டு வரலாம்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.