ஹாய்... ஹாய்.. குட்டீஸ்... இது ஒரு துப்பறியும் கதை. இந்த சம்பவத்தை படித்து சரியான குற்றவாளியை கண்டுபிடிக்கணும் நீங்க. உங்களது துப்பறியும் மூளை எப்படி வேலை செய்யுதுன்னு பார்ப்போம்? நன்கு துப்பறிபவர்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற பட்டத்தை கொடுப்போம். சரியா!
ஹனி அன்று பள்ளிக்கூடம் போக வில்லை. வீடு மாறி இருப்பதால், புதிய வீட்-டில் சாமான்களை ஒழுங்குபடுத்தி வைக்க, அவள் அம்மாவுக்கு உதவினாள்.
அவள் ஸ்கூலுக்கு வராததினால், அன்று மாலை அவளைத் தேடிக் கொண்டு லதா வந்து விட்டாள். ஹனியின் உயிர்த் தோழி லதா. அன்று பள்ளியில் நடந்த பாடங்களைப் பற்றிக் கேட்ட பிறகு, தோழிகள் அரட்டையடிக்கலாயினர்.
""இன்றைக்கு மேரியும் ஸ்கூலுக்கு வரவில்லை?'' என்றாள் லதா. அவர்களுடைய தோழிகளில் மேரியும் ஒருவள். அவள் ஆங்கிலோ இந்தியப் பெண்.
""ஏன் என்னாச்சு அவளுக்கு?'' என்றாள் ஹனி.
""பாவம்டீ... அவள் அண்ணன் ஜானியை நேற்று அரெஸ்ட் செய்துட்டாங்க. அவங்க வீடே அழுதுகிட்டிருக்கு,'' என்றாள் லதா.
மேரியின் வீட்டுக்கு அருகில்தான் லதாவின் வீடு.
""ஏன்? கைது செய்யும்படியா, ஜானி என்ன குற்றம் செய்தான்?''
""மேரி வீட்டு மாடி போர்ஷன்ல, சாமுவேல் இருக்காரில்லையா? அதான் உனக்குத் தெரியுமே. வயசானவர்; சொந்தம் பந்தம் கிடையாது. ஆனா, பணக்காரர். தனியாக தான் இருந்தார். வீட்டு வேலைக்கு, சமையலுக்கு லில்லின்னு ஒரு அம்மா. வீட்டு வேலைகளை முடிச்சுட்டு போயிடு வாங்க. சாமுவேலோட உறவுன்னு ஒரு பையன் ராபர்ட் அடிக்கடி அவரைப் பார்க்க வருவான். சில சமயம் அங்கேயே தங்கிடுவான். மேரியோட அண்ணன் ஜானியும் மாடிக்குப் போய், சாமுவேல் ஏதாவது வாங்கி வரச் சொன்னா, வாங்கி வந்து கொடுப்பான். உதவியாக இருப்பான். அனேகமாக ஜானி சாமுவேலின் பிள்ளை போல, பாதி நேரம் மாடியிலே தான் இருப்பான்!''
""இந்தக் கதையெல்லாம் உன்னை யார் கேட்டது. ஜானியை ஏன் கைது செய்யணும்? அதைச் சொல்லு,'' என்று அலுத்துக் கொண்டாள் ஹனி.
""அவசரப்படறீயே... அவனை விடுவிக்க, நீ ஏதாவது உதவி செய்வேன்னு தான் வந்திருக்கேன். அதனால்தான் விவரமாக எல்லாம் சொல்றேன். அவருக்கு அதாவது சாமுவேலுக்கு, ரெண்டு மூணு நாளா உடல் நிலை சரியில்லே. பேச்சு மூச்சில்லாமக் கிடந்தார். அந்தக் கஞ்சப் பிரபு, தலையணைக்குக் கீழே பெருந்தொகையை வைத்திருப்பாராம். அதைக் காணல்லே. அதை ஜானி தான் எடுத்திருக்கணும்னு அவனை அரெஸ்ட் செய்திருக்காங்க. ஜானி பாவம், அப்பாவி; அவன் திருடியிருக்க மாட்டான்...'' என்று புலம்பினாள் லதா.
""அது சரி போலீசுக்குத் தெரிவித்தது யார்?''
""சாமுவேல்தான்! ஜுரம் தணிஞ்சு, கண் விழித்ததும் தலையணைக்கடியிலே கை விட்டிருக்கார். பணத்தைக் காணோம். பதறிப் போய், உடனே போலீஸை வரவழைத்து கம்ப்ளைண்ட் கொடுத்தவர், அந்த அதிர்ச்சியிலேயே செத்தும் போயிட்டார். பணம் பறிபோன ஷாக். போலீஸ் விசாரணை செய்து, ஜானி தான் அடிக்கடி அங்கு போகிறவன், அவரோடயே இருக்கிறவன்னு அவனைக் கைது செய்திருக்காங்க,'' என்றாள் லதா.
""தடையம் ஏதாவது கிடைச்சுதாமா, ஜானிதான் குற்றவாளிங்கறதுக்கு?''
""ம் ஹும்... ஆனா கிழவர் சாகறதுக்கு முன்னால் ஒரு காரியம் செய்திருக்கார். தன் படுக்கைக்கு அருகிலுள்ள டீப் பாயிலே கூல்டிரிங்க் சாப்பிட்ட ஸ்டராவைத் துண்டு துண்டாக் கிள்ளி எதையோ தெரிவிக்க, அதை வரிசைப்படுத்தி இருக்கார். எழுதித் தெரிவிக்க பேப்பர் பென்சில் இல்லையோ அல்லது எழுந்து அதை எடுக்க அவர் உடல் நிலை இடம் தரலியோ தெரியலே,''
""ஸ்ட்ரா துண்டிலே என்ன காட்டி இருந்தார்?''
"717' என்று எழுதி காண்பித்தாள் லதா.
"எழுநூத்தி பதினேழு-ஏன், ஏழு ஆச்சரியக்குறி ஏழுன்னு இருக்கக்கூடாதா? ஆனா அதிலே அர்த்தமில்லே' என்று சந்தேகத்துக்குத் தானே விளக்கமும் கூறிக் கொண்டாள் ஹனி.
""போலீஸ் விசாரணையில் ஜானி கூறிய தகவலே அவனைக் குற்றவாளியாக்கிட்டுது. சாமுவேலோட உறவுக்காரப் பையன் ராபர்டைப் பார்த்துவரும்படி கிழவர் சொன்னாராம். அவனைப் பார்த்துவிட்டு, 717 லோகல் டிரைனில்தான் திரும்பியதாகக் கூறினான். ஆகவே, போலீஸ் சாமுவேல் அந்த வண்டியைக் குறிப்பிடவே, அப்படி ஸ்ட்ராத் துண்டை அமைத்துக் காட்டி, இருக்கணும்னு ஜானியை அரெஸ்ட் செய்திருக்காங்க!''
ஹனி சிறிது நேரம் சிந்தனையில் இருந்தாள். ஏதேதோ மனதுக்குள் கணக்குப் போட்டாள். காகிதத்தில் எழுதிப் பார்த்தாள்.
""அடியே லதா இது ரொம்ப சிம்பிள் கேஸ். சாமுவேல் உண்மைக் குற்றவாளியைக் கூறிவிட்டுத்தான் உயிரை விட்டிருக்கிறார்...'' என்று அவள் காதோடு கூறினாள். குற்றவாளி யார் என்று.
விடைகள்: டீப்பாயில் ஸ்டாராவைக் கிள்ளி அவர் அமைத்த 717 ஐத் திருப்பிப் பாருங்கள். நடுவிலுள்ளது ஆச்சரியக் குறியல்ல. ஆங்கில எழுத்து லில்லி என்பதைக் கூற முற்பட்டு, LILLY என்று அமைப்பதற்குள் இறந்து விட்டார். அரை குறை நினைவில், தன் தலையணைக்குக் கீழே வீட்டுக்காரம்மா கைவிட்டுத் துழாவியதை அவர் உணர்ந்திருக்கிறார். உடல்நிலை மோசமாகி விடவே, பேச முடியாத நிலையில் ஸ்ட்ராவைக் கிள்ளி அவள் பெயரைத் தெரிவிக்க முயன்றிருக்கிறார். திருட்டைச் செய்தவள் லில்லி. லில்! எதிர்ப்பக்கமிருந்து நீங்கள் காணும் போது 717 ஆகத் தெரிகிறது. இதைத்தான் அந்த சமத்து ஹனிகுட்டி சொல்லியிருக்கிறாள்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.