நண்பர் ஒருவர், "டைம் மானேஜ்மென்ட்' —நேரத்தை பயனுள்ளபடி செலவு செய்வது எப்படி என்பது குறித்து கூறியதை இங்கே தருகிறேன்.
"நேரமே போத மாட்டேங்குது... அந்த வேலையை முடிக்க முடியலே... இந்த வேலையை முடிக்க முடியலே... அங்கே போக முடியலே... இங்க போக முடியலே...' என்று நம்மில் பலர் கூறுவது எல்லாம் வெறும், "ஹம்பக்' - அவ்வேலை களைச் செய்வதற்கு, அவ்விடங்களுக்குச் செல்வதற்கு, மனது வைக்கவில்லை என்பது தான் உண்மையான காரணமாக இருக்க முடியும்! ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என உளப்பூர்வமாக நினைத்தால் அதற்கு கண்டிப்பாக நேரம் கிடைக்கும்!
ஒரே நேரத்தில் இரண்டு செயல்களைச் செய்ய முடியும். சிலர் ஒரே நேரத்தில் மூன்று, நான்கு செயல்களை கூட செய்கின்றனர். உதாரணமாக, பாட்டுக் கேட்டுக் கொண்டே, தோட்ட வேலை செய்யலாம், "டிவி' பார்த்துக் கொண்டே சலவை செய்த துணிகளை மடித்து வைக்கலாம்.
"சனிக்கிழமை வரட்டும், ஞாயிற்றுக் கிழமை வரட்டும், இல்லே, ஆயுத பூஜை லீவு வரட்டும்... குப்பையாகக் கிடக்கிற இந்த துணி, "பீரோ'வை சரி செய்து விடுகிறேன்... ஒரு நாள் முழுக்க இந்த வேலைக்காக ஒதுக்கப் போகிறேன்...' என்றெல்லாம் சிலர் சபதம் எடுப்பர்.
சனிக்கிழமை வரும், ஞாயிற்றுக் கிழமையும் வரும்; இவர் எதிர்பார்த்தது போல அரசு விடுமுறை நாளும் வந்து போகும்... ஆனால், கலைந்து கிடக்கும், "பீரோ'வை சரி செய்ய முடியாமல் வேறு வேலை ஏதாவது வந்து சேர்ந்து இருக்கும். கலைந்து கிடக்கும், "பீரோ'வோ — மேசையோ அதே நிலையில் தான் இருக்கும்.
ஒவ்வொரு நாளும் பத்து அல்லது 15 நிமிடங்கள் ஒதுக்குங்கள். ஒவ்வொரு தட்டாக பீரோவை சரி செய்யுங்கள். சுலபமாக வேலையை முடிக்கலாம்! உங்கள் நேரடிப் பார்வையோ, உதவியோ, ஆலோசனையோ தேவையில்லாத - மற்றவர்களால் முடிக்கக் கூடிய வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டு நேரத்தை வீணாக் காதீர்கள்.
சென்னையில் உள்ள மிகப் பெரிய புத்தக வெளியீட்டாளர் ஒருவரை சந்திக்க நான் சென்று இருந்த போது, வெளியூருக்கு அனுப்ப வேண்டிய புத்தகங் களை அவரே, "பண்டல்' செய்து கொண்டிருந்தார். "என்ன சார்... இந்த வேலையைப் போய் நீங்கள் செய்கிறீர்கள்?' என கேட்டதும், கடும் கோபம் கொண்டார் அவர். "எந்த வேலையிலும் உயர்வு, தாழ்வு பார்க்காதவன் நான்... "பண்டல்' போடுவதில் என்ன இழிவு வந்துவிட்டது எனக்கு?' என உரத்த குரலில், "ஆச்சா... போச்சா' எனக் கத்த ஆரம்பித்து விட்டார்.
"நான் அந்த பொருளில் சொல்ல வில்லை... "பண்டல்' போடுவதில் நீங்கள் செலவிடும் இந்த நேரத்தில், அடுத்த புத்தகத்திற்கான, "சப்ஜெக்டை' யோசனை செய்யலாம், அந்த புத்தகங்களை எழுத உள்ள ஆசிரியர்களிடம் விவாதித்து, "சப்ஜெக்ட்டுக்கு' இன்னும் மெருகு ஏற்றலாம். "பண்டல்' செய்வதற்கு சாதாரண ஒரு ஆபீஸ் பையன் போதுமே... என்று தான் குறிப்பிட்டேன்...'எனக் கூறவும், தன் தவறை புரிந்து கொண்டார்.
அறுவை ஆசாமிகள் பலர் நம் நேரத்தை களவாட துடித்துக் கொண்டு வருவர். அவர்கள் மனமும் புண்படக்கூடாது; அவர் களிடமிருந்து தப்பிக்கவும் வேண்டும். இதற்கான வழிமுறை களையும் கற்றுக்கொண்டால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்!
ஒரு அறுவை ஆசாமி உங்களைத் தேடி அலுவலகத்திற்கு வந்து விட்டதாகவே வைத்துக் கொள்ளுங் கள். அவரிடம், "இன்னும் பத்து நிமிடம் தாமதமாக வந்திருந் தால் என்னைப் பார்த் திருக்க முடியாது நீங்கள்... அவசர வேலையாக வெளியே கிளம்பிக் கொண்டிருக் கிறேன்...' எனக் கூறலாம்! இதன் மூலம் பத்து நிமிடத்திற்கு மேல் உனக்காக என்னால் நேரம் ஒதுக்க முடியாது என்பதை நாசூக்காக புரிய வைத்துவிட முடியும்.
ஆசாமி அதையும் புரிந்து கொள்ள வில்லை என்றால் ஒன்பதாவது நிமிடமே நீங்கள் கிளம்புவதற்கான அறிகுறிகளை காட்டி, ஆசாமியிடம், "அப்போ... பார்க்கலாம்...' எனக் கூறி அனுப்பி வையுங்கள்!
இதே போல் டெலிபோனில் வரும் அறுவைகளை சமாளிக்க, அவர்கள் கூப்பிடும் போது, மற்ற வரைவிட்டு ஏதாவது சமாளிப்பை கூறச் சொல்லுங்கள். "ஐயா பாத்ரூமில் இருக்கிறார். வாக்கிங் சென்றுள்ளார்...' போன்ற சமாளிப்பு கள்... "ஐயா வந்ததும் போன் செய்யச் சொல்கிறேன்!' என்றும் கூறச் சொல்லுங்கள். ஐந்து நிமிடம் சென்றபின் அறுவை ஆசாமிக்கு நீங்களே போன் செய்யுங்கள். நீங்களே போன் செய்வதால் பேச்சைக் குறைத்து, நீங்கள் விரும்பும்போது போனை வைத்து விடலாம்!'
— இதுபோன்ற பயனுள்ள பல குறிப்புகள் மற்றும் நேரத்தை சிக்கனம் செய்து, அதை பயனுள்ளதாக்கிக் கொள்வது எப்படி என்பது பற்றி கூறி முடித்தார்.
***
நாம் அறிந்தவரை பால் கலப்படம் என்பது, பாலில் தண்ணீர் கலப்பது தான். ஆனால், தற்போது, வட மாநிலங்களில் நடக்கும் பால் கலப்படம், உயிரையே பறித்து விடும் ஆபத்து கொண்டது எனக் கூறினார் இத்துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவர்.
உ.பி., ராஜஸ்தான், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் இந்த கொடுமை அதிக அளவில் நடந்து வருவதாகவும் கூறினார் நண்பர்!
"சிந்தெடிக்' பால் - செயற்கைப் பால் என அழைக்கப்படும் இந்த பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா?
* காஸ்டிக் சோடா.
* தண்ணீர்.
* ரீபைன்ட் ஆயில்.
* உப்பு.
* சர்க்கரை.
* யூரியா.
இவ்வகையாகத் தயாரிக்கப்பட்ட பாலை, நிஜமான பாலுடன் கலந்து விட்டால், இத்துறையின் நிபுணர்களால் கூட வித்தியாசம் காண முடியாதாம்!
பாலை சோதனை செய்யும் நிமித்தம், ராஜஸ்தான் மாநிலத்திற்கு செல்ல பணிக்கப்பட்டு இருக்கிறார் நண்பர். அந்த மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு, "டிடர்ஜென்ட்' சோப் பவுடருக்கு ஏக, "டிமாண்ட்' இருப்பதைக் கண்டு இருக்கிறார். இந்த கிராக்கிக்கு என்ன காரணம் என்பதை ஆராயும் போது தான் உண்மை புலப்பட்டுள்ளது.
இந்த சோப்புப் பொடியில் தண்ணீர் கலந்தால், அதில் இருந்து வரும் வாசனை, பால் வாசனை போலவே இருந்ததாம். இந்த சோப்புத் தண்ணீரை, பாலுடன் கலந்து விற்பனை செய்து விடுகின்றனராம்! ராஜஸ்தான் மாநிலத்தில் சோதனை மேற் கொண்ட, 200 கிராமங்களில், 41 கிராமங்களில் இது போன்ற கலப்படம் நடப்பதை நண்பர் கண்டு பிடித்துள்ளார்!
பாலில் இருந்து வெண்ணெயைப் பிரித்தெடுத்து விட்டு, கொழுப்பு இருப்பது போல காட்ட, பாமாயில் கலந்து விடுகின்றனராம்!
இந்த கலப்படம் எளிதில் வெளியே தெரியாமல் இருக்க, "ஹோமோஜினைஸ்' என்ற தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தி, பாமாயிலை, "குளோபுயூல்ஸ்' - சிறு, சிறு துளிகளாக மாற்றி விடுகின்றனராம்!
நம்மூர் பால்காரர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்கிறீர்களா?
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அருமையான கட்டுரை, எந்த வேலையையும் அப்புறம், நாளை என்று தள்ளிப் போடவே கூடாது, எதுவானாலும் உடனுக்குடன் முடித்தால் நேர விரயம், தேவையில்லாத பதட்டத்தைத் தவிர்க்கலாம். சிலர் காலை வேளையில் நன்றாகத் தூங்கி விட்டு அடித்துப் புரண்டு எழுந்து எல்லார் மேலும் எரிந்து விழுந்து தன் குறைகளை மறைத்து நேரம் போதவில்லை என்று பதட்டப்படுவார்கள், பெண்ணானாலும் சரி, ஆணானாலும் சரி, நேரத்திட்டமிடல் இருந்தால் எதுவும் சாத்தியம்.. உதாரணமாக முந்தின் நாளே வீட்டு வேலைகளை(பாத்திரம் அலம்புதல், குழந்தைகளுக்கான பள்ளிக்குச் செல்லும் பொருட்களை அவர்களை விட்டே எடுத்து வைக்கச் சொல்லி நல் ஒழுக்கத்தைப் பழக்குதல் )முடித்து விட்டு காலையில் என்ன செய்யப் போகிறோம் என்பதையும் திட்டமிட்டு அதன் படி காலையில் சீக்கிரம் எழுந்து முடித்து விட்டால் நேரத்தை அழகாகப் பயன்படுத்தலாம், இதே தான் ஆணிற்கும் பொருந்தும், அலுவலகத்திற்குச் செல்பவர்கள் வழக்கமான நேரத்திற்குப் பத்து நிமிடங்கள் முன்பே கிளம்பினால் போக்குவரத்து நெரிசல், வீண்பதட்டம், எரிச்சலைத் தவிர்க்கலாம். அதே போல் விடுமுறை நாட்களிலும் இன்று விடுமுறை தானே மெதுவாக எழுவோம் என்றில்லாமல் வழக்கம் போல் எழுந்து வேலைகளை முடித்து விட வேண்டும், இதனால் முழு நாளும் கலகலப்பாக வேறு வேலைகளுக்கோ வெளியில் செல்வதற்கோ ஒதுக்கிக் கொள்ளலாம், விடுமுறை நாட்களிலும் சரியான நேரத்திற்கு உறங்கச் செல்வதையும் பழக்கப்படுத்துவது அவசியம்.நேரச்சிக்கனம், திட்டமிடல், அதனைச் செயல்படுத்துவதில் உறுதி கடைபிடித்தாலே போதும்.நேரத்தைக் கையாளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே சாதனைகள் சாத்தியம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.