தமிழின் மீதும், தமிழன்னையின் மீதும் உள்ள ஈடுபாட்டின் காரணமாக, ஒருவர், தன் சொந்த பணத்தில் கடந்த, 22 வருடங்களாக, தமிழன்னையின் சிலைக்கு விழா எடுத்து வருகிறார்.
ஜன, 7, 1981ல், மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின் போது, தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., தமுக்கம் மைதானத்தின் முன் தமிழன்னை சிலையை திறந்து வைத்தார். (அநேகமாக இன்றுவரை தமிழன்னைக்கு உள்ள ஒரே சிலை இது ஒன்றுதான் என்றும் கூறப்படு கிறது.) அப்போது பேசும்போது, 'இது வெறும் சிலையல்ல; நமது மொழியின் தாய். ஆகவே, தமிழ் பேசும் ஒவ்வொரு வரும், இந்த தாயை, தங்களால் முடிந்த அளவு சிறப்பிக்க வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும், பத்து ஆண்டுகளாக இந்த சிலை யாருடைய கவனிப்புமின்றி கிடந்தது.
எம்.ஜி.ஆர்.,திறந்து வைத்த தமிழன்னை சிலை, இப்படி கேட்பாரின்றி கிடக்கிறதே என, தினமலர் இதழில் சுட்டிக்காட்டப் பட்டதும். மதுரையில் அமுதசுரபி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் தலைவர் வீ.பாலகிருஷ்ணன், தமிழின் மீது கொண்ட பற்றாலும், தமிழன்னை மீது கொண்ட பாசத்தாலும், தானே முன்வந்து, அந்த இடத்தை சுத்தம் செய்து, தமிழன்னை சிலைக்கு பட்டுப்புடவை சார்த்தி, கல்லூரி, பள்ளி மாணவியரை வரச்சொல்லி, தமிழன்னை சிலை முன் திருவிளக்கு வழிபாடு நடத்தி, வந்திருந்த, 500 பேருக்கும் திருக்குறள் புத்தகம் பரிசாக கொடுத்து, வெகு விமரிசையாக தமிழன்னையை வழிபடும் விழாவை நடத்தினார்.
அன்று தொட்டு இன்று வரை, தமிழன்னை சிலை நிறுவப்பட்ட நாளில் இவர் நடத்தும் இந்த விழா தொடர்ந்து தொய்வின்றி இதுவரை, 22 வருடங்களாக நடந்து வருகிறது. இதற்கான செலவு முழு வதையும், இவர் தன் சொந்த பணத்தில் இருந்தே செய்து வருகிறார்.
தமிழன்னை சிலைக்கு, மாலை போட வசதியாக, ஏணிப்படிகள் அமையப் பெற்றதும், தமிழன்னையை இரவிலும் பார்க்கும் வகையில், ஒளி வெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் அமைந்ததும், இவர் எடுத்த முயற்சியின் காரணமாகத்தான்.
சமீபகாலமாக, தமிழில் முதல் மார்க் எடுக்கும் மாணவர்களை, தமிழன்னை சிலை முன் வரச்செய்து, பணமுடிப்பு கொடுத்து கவுரவித்து வருகிறார்.
கடந்த, 37 ஆண்டுகளாக ஆண்டுதோறும், மூவாயிரம் பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கி வரும் பாலகிருஷ்ணன், வருகிற ஜனவரி மாதம் 10ந்தேதி, 23 ஆண்டாக தமிழன்னை சிலையை வழிபடும் விழாவை ஏராளமான தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து செய்ய வேண்டும் என்று விரும்பியுள்ளார். இவருடைய இன்னொரு விருப்பம், சென்னை கடற்கரையில் தமிழன்னை சிலை ஒன்றை நிறுவ வேண்டும் என்பதாகும்.
***
எல். லட்சுமண ராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.