அவர் ஓய்வு பெற்ற போலீஸ் ஏ.எஸ்.பி., போலீஸ் துறையில், 35 வருடங்கள் வேலை செய்தவர். அவர் ஓய்வு பெற்றே பல வருடங்களுக்கு மேலாகிறது. தம் பணி காலத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் எனப் பிறர் சொல்லக் கேள்விப் பட்டுள்ளேன்.
பொது இடம் ஒன்றில் சமீபத்தில் சந்தித்தபோது, போலீஸ் துறையின் மதிப்பு படு பாதாளத்துக்கு போய்விட்டது பற்றி வருத்தப்பட்டு பேசினார்...
ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாகப் புகழப்பட்டு வந்த தமிழ் நாடு காவல் துறையின் செல்வாக்கு இப்படி சரிந்து விட்டதே, இதற்கு காரணம் தான் என்ன என நீங்கள் ஒரு முறை எழுதியதைப் படித்த பின், சிந்தித்து பார்த்தேன்...
முதலமைச்சராக ராஜாஜி இருந்த போது, சட்டமன்ற விவாதத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை செய்தித்தாளில் படித்ததைச் சொல்கிறேன்... சட்டமன்ற உறுப்பினர் கோசல்ராம் முதலமைச்சரிடம் புகார் சொன்னார். அதாவது, அவர் ஒரு காவல் நிலையத்திற்கு சென்றதாகவும், அந்த நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அவரை தகுந்த மரியாதை கொடுத்து வரவேற்க வில்லை என்பதும் புகார். அதற்கு, "நீங்கள் ஏன் காவல் நிலையம் செல்ல வேண்டும்? உங்கள் பிரச்னையை என்னிடம் சொன்னால், நியாயமாக இருப்பின், காவல்துறை தலைவரிடம் சொல்லி நிவர்த்தி செய்வேனே...' என்றாராம் ராஜாஜி. இது, அந்த பொற்காலம். இப்பொழுது நடப்பது என்ன என்பது ஊர் அறியும்; நான் விளக்கத் தேவையில்லை.
மற்றுமொரு நிகழ்ச்சி... 1960ல், நான் பரமக்குடி சப் - இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்த சில நாட்களில் அங்கு தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது. ஈ.வி.கே.சம்பத், நெடுஞ்செழியன் போன்றோர் கலந்து கொண்டனர். இரவு 10 மணி ஆனதும் நான் ஒலி பெருக்கியை அணைக்கச் சொன்னேன். இளைஞர்கள், கூச்சல் போட்டு ஆர வாரம் செய்தனர். "ஆளும் கட்சியை (காங்கிரஸ்) தடுக்க மாட்டீர்கள். எங்களை மட்டும் விரட்டுகிறீர்கள்!' என்றனர். "நான் கட்சிப் பாகுபாடு கண்டிப்பாக பார்க்க மாட்டேன்...' என்று சொல்லி, ஒலி பெருக்கியை அணைக்க வற்புறுத்தவும், தலைவர்கள் தலையிட்டு, "போலீசாரோடு தகராறு வேண்டாம்!' என்று கூறி, பொதுக் கூட்டத்தை முடித்தனர்.
இதற்கு சில நாட்கள் கழித்து, அதே இடத்தில் காங்கிரஸ் பொதுக் கூட்டம் நடந்தது. உள்ளூர் எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமை. அதில் கலந்து கொண்டார் அமைச்சர் கக்கன். கூட்டம் ஆரம்பிக்கும் முன்பே, தலைவர் சீனிவாசனிடம் தி.மு.க., பொதுக்கூட்டத்தில் நடந்த சம்பவத்தை சொல்லி, 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கியை நிறுத்தி விடக் கேட்டுக் கொண்டேன்; அவரும் ஒப்புக் கொண்டார். பல கிராம நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு, 9.30 மணிக்கு மேல் தான் கூட்டத்திற்கு வந்தார் அமைச்சர்.
அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, 10 மணியைத் தாண்டவும், நான் மேடைக்குப் பின்னால் நின்று தலைவர் சீனிவாசனைத் தொட்டேன். அவர் திரும்பிப் பார்க்கவும், என் கை கடிகாரத்தைக் காட்டி சமிக்ஞை செய்தேன். அதே சமயம், உரையாற்றிக் கொண்டிருந்த அமைச்சர் தற்செயலாக பின் பக்கம் திரும்பிப் பார்க்க, தலைவருக்கு நான் காட்டிய சமிக்ஞையைப் பார்த்து விட்டார்.
உடனே கூட்டத்தை நோக்கி அமைச்சர் சொன்னார்: "பாருங்கள்... நான் போலீஸ் மந்திரி பேசிக் கொண்டிருக்கிறேன். தலைவரிடம் கடிகாரத்தைக் காட்டி 10 மணி ஆகிவிட்டது. மைக்கை நிறுத்துங்கள் என்று சொல்கிறார் உள்ளூர் சப் - இன்ஸ்பெக்டர். இந்த மைக் உத்தரவு போட்டது நான் தான். நான் போட்ட உத்தரவை நானே மீறக் கூடாது இல்லையா... அதனால், மைக்கை நிறுத்தி விட்டுப் பேசுகிறேன்!' என்றார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், என்னுடைய மேலதிகாரி இன்ஸ்பெக்டர் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்தவர், அமைச்சர் என்னைப் பற்றி சொன்னவுடன், மிகவும் ஆக்ரோஷத்துடன் என்னை நோக்கி பாய்ந்து வந்தார். ஆனால், அடுத்த சில வினாடிகளில் என்னை பாராட்டும் விதத்தில் அமைச்சர் பேசவும், அப்படியே நின்று விட்டார்.
இன்றைய நிலைமையில் இப்படி ஒரு நிகழ்ச்சியை நினைத்தாவது பார்க்க முடியுமா... சொல்லுங்க... நீங்களே நான் சொல்றதை நம்ப மறுப்பீங்க...
நான் சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அந்த காலத்தில் பொதுவாக, சட்டத்தை மதித்து மரியாதை செய்தனர் மக்கள். சட்டத்தை மீறுபவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் கண்டிப்பாக காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பர் என்ற அச்சம் மக்கள் மனதில் இருந்தது.
ஒரு சப் - இன்ஸ்பெக்டரின் திறனை, அவர் நிலைய எல்லையில் நடக்கும் நிகழ்ச்சியை வைத்தே பெரும்பாலும் மதிப்பீடு செய்வர். நெடுஞ்சாலையில் தானியங்களை காய வைத்தும், சூடடித்தும் கொண்டிருந்ததைப் பார்த்த மேலதிகாரி, அந்த சரக சப் - இன்ஸ்பெக்டருக்கு தண்டனை வழங்கினார். காவல் நிலையம் இருந்த தெருவில், சற்று தொலைவில், ஒரு கொலை நடந்து விட, பதவி நீக்கம் செய்யப் பட்டார் அந்த சப் - இன்ஸ்பெக்டர். காரணம், காவல் நிலையம் உள்ளதே என்ற பய உணர்வு ஏற்படும் வகையில் செயலாற்றவில்லை என்பது.
சைக்கிளில், "டபுள்ஸ்' செல்பவர்கள், தூரத்தில் போலீசாரைப் பார்த்தால் இறங்கி செல்வர். லாரி கேபினில் பயணி இருந்தால், போலீசாரை தூரத்தில் பார்த்தாலே, இறக்கி விட்டு செல்வர். அனுமதிக்கப்பட்ட எண்ணிற்கு மேல் பஸ்களில் பயணிகளை ஏற்ற மாட்டார்கள். அப்படியே, தப்பித் தவறி, ஒன்றிரண்டு பயணிகளை ஏற்றினாலும், காவல் நிலையத்திற்கு தொலைவிலேயே இறக்கி விடுவர்.
கண்டிப்புடன் காவல் துறை செயலாற்றிய முறையும், இடையில் அரசோ, வேறு சக்திகளோ புகுந்து தடைகள் செய்யாத காரணமும் இந்த மரியாதையை காவல்துறைக்கு தேடித்தந்தன. காலப் போக்கில் படிப்படியாக காவல்துறையின் பணிகளில் குறுக்கீடுகள் அதிகரிக்க அதிகரிக்க, அதன் செயல்பாடும் பாதிப்படைந்து விட்டது!
எவ்வித ஆடம்பரம் இன்றி எளிமையாகவும், சேவையை கடமையாக கருதியும் செயலாற்றிய ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை போன்ற தலைவர்கள் இனி வரும் வாய்ப்பு தோன்றவில்லை. எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த கட்சியின் எம்.எல்.ஏ., மாவட்ட, வட்ட, நகர, கிராம உறுப்பினர்கள் பயனடைய வழி செய்யாவிட்டால், அந்த கட்சி ஆட்சியில் நீடிக்க முடியாது. ஆகவே, காவல் துறையின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்வதற்கு அவசியம் ஏற்படுகிறது.
போலீஸ் துறையை பொறுப்பில் வைத்துள்ள அமைச்சர், அவர் இஷ்டம்போல் துறை அதிகாரி களை ஆட்டிப் படைக்க வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகையில், 1971ல், மத்திய அரசு நியமித்த உயர்மட்ட வல்லுனர்களைக் கொண்ட, "தேசிய போலீஸ் கமிஷன்' பரிந்துரைகள் வழங்கியது. நாடு பூராவும் வெகுவாக இந்த பரிந்துரைகள் பாராட்டப்பட்டன. ஆனால், இன்று வரை செயல்படுத்தப்படவில்லை.
பரிந்துரைகளில் ஜீவ நாடியாக உள்ளது இது தான்: ஒவ்வொரு மாநில அரசும் ஒரு குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவிற்கு காவல் துறையை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் தலைவராகவும், காவல்துறையின் தலைவர் செயலராகவும் இருப்பர். அந்த குழுவிற்கு ஆறு உறுப்பினர்கள், அவர்களில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஒருவர், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ஒருவர். மற்ற நான்கு பேர் ஓய்வு பெற்ற நீதிபதி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., போன்ற அதிகாரி, பொது ஜன சேவையில் நாட்டம் கொண்ட நபர்கள். காவல்துறையின் நிர்வாகம், செயல்பாடுகள் எல்லாம் இந்த குழுவின் கண்காணிப்பில் வரும். அமைச்சரோ, வேறு எந்த நபரோ தன் இஷ்டப்படி காவல்துறையின் செயல்பாடுகளில் குறுக்கிட முடியாது.
ஆனால், இந்த பரிந்துரையை இதுவரை எந்த மாநிலமும் செயல்படுத்தவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் வரை, இதை பாராட்டி வரவேற்றுப் பேசும் அரசியல் கட்சிகள், ஆட்சியைப் பிடித்ததும் அதை மறந்து விடுகின்றன.
இதை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அடுத்த பொதுத் தேர்தலில் இந்த பரிந் துரையை செயல்படுத்த வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிக்கு ஓட்டளிக்கும்படி எழுதுங்கள்! மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங் கள் என்றார்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அன்ன அவுக கொஞ்சநாள்தான் இருந்தாக. அதற்குள்ளேயே கேன்சர் தாக்கிட்டுது avathipattaaru . அவருக்கு பிள்ளைகள் இல்லே. ஆனாலும் தன் மனைவி, வளர்ப்பு மகனையும் கூட அரசியலில் இழுக்கல. சொத்தும் சேர்க்கல. எவரையுமே கேவலமா எண்ணாதவர், சுயநலமும் இல்லாதவர், , எப்போ காவல்துரைலே இருப்பவா தன்னிலை தடுமாறி போதைலே
வுழுந்தாகளோ அப்போவே அவுக மதிப்பு மரியாதை எல்லாம் பூடுச்சு , டாஸ்மாக் என்னும் அரக்கன் ஒழிஞ்சாத்தான் நாடு உரு(முக்கியமா தமிழ்நாடு) நல்லகதி அடையும்
ராஜாஜி காமராஜர் சரி அது என்ன அண்ணாதுரை.அவர் எத்துணை ஆண்டுகள் பதவியில் இருந்தார், என்ன நல்லவை செய்தார் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.சத்தியமாக தெரியாது,அதுதான் கேட்கிறேன். தவறாக எண்ண வேண்டாம். ஒருமுறை சட்ட மன்றத்தில் முதல் அமைச்சராக இருந்தபொழுது இவ்விதம் பேசியதாக பத்திரிகைகளில் படித்தேன்.அது உண்மையா என்று எனக்கு தெரியவில்லை? உண்மைதானா? அவரது வரிகளிலேயே அதை பதிவு செய்கிறேன். நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல.அந்த நடிகை (ஒரு நடிகையின் பெயரை சொல்லி)படிதாண்டா பத்தினியுமல்ல என்றாராம்.இவரை தாழ்த்தி பேச இவருக்கு உரிமையுள்ளது.அவரை எப்படி தரம் குறைத்து சொல்லலாம்.
தனி மனித ஒழுக்கமும் கட்டுப்பாடும் வராதவரை எத்தனை ராஜாஜி,கக்கன்கள், வந்தாலும் வொன்றும் வேலைக்கு ஆகாது
ராஜீவ் காந்தி அமரராகி சுவர்க்கம் சென்றாராம் அங்கு மகாத்மா காந்தியும் இந்திரா காந்தியும் அவரை வரவேற்று இந்தியாவை பற்றி விசாரித்தார்களாம்.
பாரதம் பயங்கர முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது என்று ராஜீவ் சொல்ல எப்படி என்று வினவியிருக்கிறார்கள் இருவரும்
ராஜீவ் சொன்னாராம் தாத்தா வுங்களை ரிவால்வரால் சுட்டார்கள் அம்மா வுங்களை மெசின் கன்னால் சுட்டார்கள் என்னை பாம் வைத்து அனுப்பி விட்டார்கள்
தேசத்தின் முன்னேற்றம் எப்படி பார்த்தீர்களா? ( இது ஒன்றும் ஜோக் அல்ல நாட்டின் நிலைமையை வயிற்றெரிச்சலுடனும் கண்ணீருடனும் எழுதுகிறேன் )
இதைப் படித்ததும் இராஜாஜி அவர்கள் ஒரு அரசாங்கத்தின் கடமை என்னவாக இருக்க வேண்டும் என்று கூறியது நினைவுக்கு வருகிறது. சட்டம், இராணுவம், நாணயச் செலாவணி இந்த மூன்று துறைகள்
மட்டுமே அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழிருக்க வேண்டும்.மற்றவை அனைத்தும் ( வணிகம் , போக்குவரத்து, தொழிற்சாலை போன்றவை ) சமூகத்திடம் விடப்பட்டு விட வேண்டும் என்று அவர் சொன்னதால் அவரை முதலாளித்துவ ஆதரவாளர் முத்திரை குத்தி அவரது ஆலோசனையைப் புறக்கணித்தோம்.. இதன் விளைவு அரை வேக்காட்டு அரசியல்வாதிகள் எல்லாம் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு அறிவுரை சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் .
அவரது கருத்தின்படி,அரசாங்கமும் அமைச்சர்களும் நம்மால் நியமிக்கப்பட்ட வேலைக்காரர்கள் , நமக்கு அறிவுரை சொல்லும்படி அவர்களை நாம் அனுமதிப்பது நம்முடைய சுயமரியாதைக்கு நாமே தேடிக் கொள்ளூம் அவமானம் .அவரது கருத்தின்படி,அரசாங்கம் கொடுக்கும் இலவசப்பொருட்களுக்கு ஏங்குவது , நமது வேலைக்காரன் நமக்குப் பிச்சை போட மாட்டானா என்று ஏங்குவதற்குச் சமம்.
முதலில் தன் கருத்தை தெருவித்த முன்னால் காவல் துறை அதிகாரிக்கு நன்றி. இதற்கு எல்லாம் காரணம் நம்முடய நாட்டிலுள்ள சட்டங்கள் தான். பழைய காலங்களில் ஒருவர் நாட்டிற்கு தலைவராக வந்தால் அவர் வீட்டை கூட வெறுத்து விட்டு நாட்டிற்கு வேண்டி உழைப்பார். அதனால் தான் அந்த நமபிக்கையில் சட்டம் எழுதபட்டது. அது சுதந்திரம் கிடைத்த புதுசு, பண புழக்கங்களும் மிக குறைவு, மக்கள் தொகை குறைவு,வெளி நாட்டு தொடர்புகள் குறைவு, வறுமை, வேலை வாய்ப்பின்மை, போன்ற நிலைமையாக இருந்தது. அனால் இன்று நிலைமை எல்லாம் மாறி விட்டது. காரணங்கள் பல உள்ளன,, ஊழலில் தமிழகம் இன்று நாட்டிற்கே முன்நோடியாக திகள்கிறது, இது எல்லோருக்கும் தெரிந்த நவர்கள் தான் இதற்கு காரணம். இதை புது சட்டங்களை வைத்து தான் சரி படுத்த முடியும். இது கடுமையான காரியம் தான் இருந்தாலும் ஒரு நல்ல திறமையான, ஒரு மனிதர் மத்தியில் முழு ஆட்சி பலத்தோடு வந்தால் சரி படுத்த முடியும். சட்டங்களை நாளை உள்ள நிலைமைகளை புரிந்து திருத்த வேண்டும். இது தான் இதற்கு ஒரே தீர்வு.....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.