பிரும்ம கான சபையின் நாட்டிய விழா ஆழ்வார்பேட்டை, சிவகாமி பெத்தாச்சி கலையரங்கில் நடைபெற்று வருகிறது. இதில், இளம் நாட்டிய கலைஞர் ராதே ஜக்கியின் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. "குனித்த புருவமும்' பாடலுடன் தன் நிகழ்ச்சியை துவக்கினார். நடனத்திற்கு ஏற்ற களையான முகம், உடல் அமைப்புடன், தான் எடுத்துக் கொண்ட பாடலை போலவே, நம் கண்களுக்கு நடன விருந்தளித்தார்.
தேவிசர்வேச்வரி, பகவதி திரிபுரகாரணி விமலே தவபதகமலே என்று தேவி பகவதியாகும். அனைத்து தேவி வடிவமாக, நமக்கு நடனத்தின் மூலம் காட்சியளித்து அதைத் தொடர்ந்து, "துங்கதரங்கே தேவி' என்ற ஹம்ஸத்வனி ராகப்பாடல். இதில், கங்கையாக மாறி நம்மை மார்கழி மாதத்தில் புனித நீராடச் செய்துவிட்டார்.
நம்மில் பலர் கங்கையை நேராக பார்த்திருப்போமோ, இல்லையோ ராதே ஜக்கி கங்கையின் பெருமைகளையும், அதன் பிரவாகம், அதன் சீற்றம் அதனால், சிவன் எப்படி அவளை அடக்கி, தன் தலையில் இறுத்திக்கொண்டார் என்பதையும், மீண்டும் சிவனின் கேசத்திலிருந்து, நமக்கு காட்சியளித்து ஜீவமுக்தி தருகிறாள் என்பதை, மிக அழகாக ஆடி சிறப்பித்தார்.
அடுத்து, பிரதான உருப்படியாக, வர்ணம் சங்கராபரண ராகத்தில் அமைந்தது, "மனவிசேகொளராதா' என்ற, மிக அழகான நடன வடிவத்தை ஆடினார். இதில், அனைத்து கால ஜதிகளும் மிக அழகாக கொடுத்து, ரசிகர்களின் கைத்தட்டலை பெற்றார்.
சஞ்சாரியில் நாயகன், நாயகியின் ஊடல், அதில் அவளைப் பிரிந்த சோகம் தான், எப்படி பரிதவித்து நிற்கிறாள் என்பதை கிளியிடம் தூது விட்டு, தன் செல்லக்கிளியை அனுப்பி விட்டு, இவர் சோகக்கிளியாக நின்றது மனதை வருடியது.
வர்ணத்தின் உத்ராங்க பகுதி ஸாமிற்சாடி தோர சரணவரிகளும், அதன் சிட்டை ஸ்வரமும் மிக அழகாக அமைந்ததை, மிக அற்புதமாக ஆடினார். மிகவும் சுத்தமாக இருந்தது, மனதுக்கு நிறைவை தந்தது.
இறுதியாக, ஹிந்தோள ராகத்தில் அமைந்த தில்லானா எடுத்து ஆடினார். தில்லானா மிக சம்பிரதயமாகவும், நாட்டிய இலக்கணத்தை ஒட்டி அழகுற ஆடினார். பொதுவாக, நடனம் ஆடும் பலர், இப்போது மிக விறுவிறுப்பாய் ஆடும் டிரெண்டை உருவாக்கி வைத்துள்ளனர்.
நின்று, நிதானமாக, புரியும்படி ஆடுவதும், மார்க்கமாக ஆடுவதும் போய்விட்டது. அப்படி இருக்க, ராதே ஜக்கி மிக பொறுமையாக, அமைதியாக ஆடியது நமக்கு ஆறுதலைக் கொடுத்தது. மிதமான உடை மற்றும் ஆபரண அலங்கார ஒப்பனை, கனகச்சிதமாக அமைந்து, நடனத்திற்கு பெருமை சேர்த்தது. ராதே ஜக்கி கலாஷேத்ரா மாணவி. மேலும், ஸ்ரீஜித் கிருஷ்ணா மற்றும் நம்பியார், புஷ்பா, அருண்சங்கர், ப்ரகாபௌல், நிர்மலாநாகராஜ் ஆகியோரிடம் பயின்றுள்ளார்.
யோக கலை பயின்றுள்ளதால், நல்ல உடலுழைப்புடன் ஆட முடிகிறது. அவருக்கு பக்கபலமாக தீபு நாயர் குரலிலும், சுதர்சனி நட்டுவாங்கத்திலும், ஸ்ரீநிவாசன் மிக அழகாக வயலினிலும், பார்த்தசாரதி மிருதங்கத்திலும் வெகு சிறப்பாக வாசித்து, ராதே ஜக்கியின் நடனத்திற்கு உயிரோட்டமளித்தனர்.
- ரசிகப்ரியா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.