குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி, ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
திடீரென குரு கால் வழுக்கி, நிலைதடுமாறி ஆற்றில் விழப்போனார். அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், "சட்'டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான். அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், ஆற்றில் விழுந்த அவர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்.
குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடனுக்கு, நன்றி தெரிவித்தனர்.
இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது.
பார்ப்பவர்களிடமெல்லாம், "ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன். இல்லாவிட்டால், இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார்' என்று கூறத் தொடங்கினான்.
இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது. ஆனாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்.
மறுநாள் குரு அதே சீடர்களை அழைத்துக் கொண்டு, அதே ஆற்றின் கரையோரம் நடந்து சென்றார்.
அன்று சம்பவம் நடந்த இடம் வந்ததும், முன்பு தன்னைக் காப்பாற்றிய சீடனிடம், ""என்னை ஆற்றில் தள்ளிவிடு!'' என்றார்.
அந்த சீடன் திகைத்தான்.
""ம்! தள்ளு!'' என்றார் குரு.
""அது... வேண்டாம் குருவே!'' என்றான் சீடன்.
""இது குருவின் உத்தரவு. கேட்டு நடப்பது உன் கடமை. ம்... என்னை ஆற்றில் தள்ளு!'' என்றார்.
மிரண்டுபோன சீடன் அவரை ஆற்றில் தள்ளி விட்டான்.
மற்ற சீடர்கள் என்ன நடக்கப்போகிறதோ? என்று திகிலுடன் பார்த்தனர்.
ஆற்றில் விழுந்த குரு, எந்தவித பதட்டமும் படாமல், அமைதியாக நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்.
அதைப் பார்த்த சீடர்கள் அனைவரும் திகைத்தனர்.
குரு கரை மேலே ஏறி வந்தார்.
தள்ளிவிட்ட சீடனைப் பார்த்தார்.
""இப்போதும் நீதான் என்னைக் காப்பாற்றினாயா?'' என்று கேட்டார்.
அந்த சீடன் தலைகுனிந்தான்.
""ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!'' என்றார் குரு.
தற்பெருமை கொண்ட சீடன், குருவிடம் மன்னிப்புக் கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக் கைவிட்டான்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.