உலகப் புகழ் பெற்றது பிரான்ஸ் தேசத்துப் பாரிஸ் நகரின் நடு நாயகமாக விளங்கும், பாசிலி சிறைச்சாலை. டிக்கன்ஸின் எழுதிய "இரு நகரங்களின் கதை' என்ற நாவலில் இச்சிறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் சிறைக்குள் தள்ளப்பட்டவர்கள் திரும்பி வருவதென்பது கற்பனை கூடச் செய்ய முடியாத ஒன்று. ஆனால், பலமும் பாதுகாப்பும் வாய்ந்த இச்சிறையிலிருந்து இரு இளைஞர்கள் தப்பினார்கள். அவ்விருவரும் ராணுவ அதிகாரிகள். ஒருவரின் பெயர் "ஹென்றி டி லா டுடி' மற்றவர், "ஜீன் ட அலிக்ரி' பதினைந்தாம் லூயி மன்னருக்கு எதிராகச் சதி செய்ததாகப் பொய்யாகக் குற்றஞ்சாட்டி, பாசிலி சிறையில் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இது நடந்தது 1754ம் ஆண்டு மார்ச் மாதத்தின் காலைப் பொழுதில்.
உள்ளே தள்ளிய அந்த விநாடியே அவ்விருவரும், "இதிலிருந்து எப்படியும் தப்பிச் செல்வோம்' என்று சபதமெடுத்துக் கொண்டனர். ஆனால், வாய்ப்புகள் உற்சாகமூட்டும்படி இல்லை. அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறை, சிறைக் கூடத்தின் டவரில் இருந்தது. 12க்கு 14 அடியான ஓர் அறை. ஜன்னலுக்குப் பதில் சுவரில் குறுகலான இடைவெளி. அதில், உறுதியான இரும்புக்கழிகள் பதிக்கப்பட்டிருந்தன. அதுவும் கைக்கு எட்டாத உயரத்தில். சுவரின் கனம் என்ன தெரியுமா? ஆறு அடிகள்! ஆனால் அவ்வறையில் ஒரு புகைப் போக்கி இருந்தது. தங்கள் விடுதலைக்கான வாசல் அதுதான் என்று முடிவு கட்டினர் இருவரும்.
அந்தக் கணப்பை ஆராய்ந்த போது அதன் புகைப் போக்கியும் உறுதியான இரும்பு கிரில்லினால் சாந்து கொண்டு பதிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர். சிறை அறையிலிருந்த மேஜையிலிருந்து ஒரு இரும்புப் பட்டையை அகற்றி, அதை உளியாக மாற்றினர். இதைக் கொண்டு அந்த இரும்பு கிரில்லை அகற்ற முனைந்தனர். சுண்ணாம்புக் கலவையைச் செதுக்கி அகற்றி அதைப் பெயர்க்க, அவர்களுக்கு ஆறு மாதங்களாயிற்று.
கணப்புக்குப் பயன்படுத்தத் தரும் கட்டைகளை மிச்சப்படுத்தி நாற்பதடி உயரத்துக்கு ஓரு ஏணியை உருவாக்கினர். இதைப் பல பகுதிகளாகப் பிரித்துப் பூட்டும் வகையில் தயாரித்தனர். இல்லாவிட்டால் அவ்வளவு உயரமான ஏணியை எப்படி ஒளித்து வைக்க முடியும்? இதற்கான ரம்பத்தை உருவாக்க இரும்பாலான மெழுகுவர்த்தி ஸ்டாண்டு ஒன்று இருந்தது. கட்டிலின் கீலை, தமர் போடுவதற்குச் சாதகமாக்கித் துளைகளைக் குடைந்தனர். ஏணியில் குறுக்குக் கட்டைகளைப் பதிக்க படுக்கை விரிப்பையும், சட்டைகளையும் கிழித்துக் கயிறு திரித்தனர்.
இரு கைதிகளில், ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே எஸ்கேப்புக்கான இந்த ஏற்பாடுகளில் ஈடுபடுவார். மற்றவர், காவலாளிகளின் வருகையைக் கதவில் காது வைத்து உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பார். எச்சரிக்கை சமிக்கை கிடைத்ததும், ஆயுதங்களும் தயாரிப்புகளும் உடனே மறைக்கப்படும். இதற்காகவே, தளத்தில் ஒரு கல்லைப் பெயர்த்துக் குழி பண்ணி இருந்தனர்.
ஏற்பாடுகள் முடிய இரண்டு ஆண்டுகளாயிற்று. எல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 1756ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி, டி லா டுடி முதலில் புகைப்போக்கியினுள்ளே ஏறினார். ஐம்பதடி உயரம் அது. மேலே ஏறிய அவர் கயிற்றைத் தொங்கவிட்டார். ஏணியின் பகுதிகளை மூட்டையாகக் கட்டி மேலே தூக்கினார். அதைத் தொடர்ந்து அலிக்ரியும் மேலே ஏறிப் போனார்.
புகைப் போக்கியிலிருந்து மதில் சுவர் கொத்தளத்துக்குத் துணிக் கயிற்றின் மூலம் முதலில் இறங்கினார் டுடி. கொத்தளத்தில் குதித்ததும் ஒரு காவல் வீரர் தென்பட்டார். அவர் எச்சரிக்கைக் குரல் எழுப்பும்முன், அவரைத் தீர்த்துக் காட்டினர். மற்றொரு துணிக் கயிற்றைப் பீரங்கியில் கட்டி, அதன் மூலம் அகழியில் இறங்கினர். ஏணியின் பாகங்களோடு நீந்திச் சென்று, மறுகரைக்குப் போய், ஏணியின் பகுதிகளை இணைத்து, அதை மதில் சுவரில் சாய்த்து வைத்து ஏறி, மறுபக்கம் தெருவில் குதித்தனர்.
இதற்குள் கொல்லப்பட்ட காவல்காரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. ஆனாலும் அவ்விருவரும் குடியானவர்கள் போல உருமாறி, ஆம்ஸ் டர்டாம் போய் விட்டனர். பாசிலி சிறைச் சாலையிலிருந்து முதலும் கடைசியுமாகத் தப்பியவர்கள் இவ்விருவர் மட்டுமே!
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.