மதுரை வாசகி வித்தியாசமான சிந்தனையுடன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் இதோ:
...பெண் விடுதலை, பெண்ணியம், பெண்மை... என்று பேசும் ஆண், பெண் பேச்சாளர், எழுத்தாளர் முயற்சிகள், வீண் விரயமாக முடிவதற்கு காரணம், அவர்கள் செக்கு மாட்டை போல ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வளைய வருவது தான்.
முன்னோர் வழியையும் விடாது, புதுமையையும் விடாத இரு வாழ்வு தான் அதற்கு காரணம். ஏனெனில், கணவன் அல்லது சமுதாயம் தம்மை ஒதுக்கி விடுமோ என்று அஞ்சுகின்றனர்.
தற்பொழுது, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வரைமுறைகளை அமைத்தவர் யார்? ஒரு காலத்தில் முன்னேற வேண்டும் என்று உண்மையாகவே நினைத்த சிலர் தாம். அதை புரட்சி என்று கொள்வதில் அர்த்தமில்லை. அவர்கள் யோசித்து செயல்படுத்தியவற்றில் சில குறைபாடுகள் இருக்கலாம்.
உதாரணமாக, வேதங்கள் யார் சொல்லியோ அல்லது யார் மூலமாகவோ தோன்றியவை தாம். (எல்லா மத வேதங்களையும் சேர்த்து தான்) ஏவாளின் குற்றத்தாலேயே ஆதாம் பாவம் செய்து, மனித இனம் பாடுபட வேண்டியதாயிற்று என்பது, இன்றும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது தான்; ஆனால், அது உண்மையா என்று நாம் யோசிப்பதுமில்லை.
ஏவாள், ஆதாமின் வலது கை போல இருந்ததால், சைத்தான் அவளை முதலில் வெற்றி பெற இவ்வாறு செய்திருப்பான் என்றோ, சிறு பிள்ளைகள் சண்டை போடும் போது, பெரியவர்களிடம், இதற்கு காரணம் அவன் தான் முதலில் அடித்தான் அல்லது இவன் தான் அடித்தான் என்றோ சொல்வது போல, கடவுளிடம் ஆதாம் ஏன் முறையிட்டிருக்க மாட்டான் என்றோ, நாம் இதுவரை யோசிக்க கூட அஞ்சுகிறோம்.
சொல்பவரையும், சாமி கண்ணை குத்திவிடும் என்ற கதை தான். வடையும், காகமும் என்ற கதை மாறியது போல, இதுவும் என்று மாறும்? மாறாது என்றே உறுதியாக கூற முடியும். ஏனெனில், வேதம் என்ற அடிப்படையான பயம்.
ஆண் தான் மேல்; பெண் கீழ் என்றொரு பிரச்னை ஆரம்பமானதற்கு காரணமே, மேலே சொன்ன சிறு சண்டை தான். தான் கஷ்டப்படுவதற்காக மனிதன் கவலைப்பட்டான். அதற்கு காரணம், பெண் என்று அவனுள் ஒரு ஆதங்கம். அதன் தாக்கமே இப்போதைய நிலை. ஒரு வகையில் இது மனக்கோளாறு தான் என்பது என் வாதம். அதை நிவர்த்தி செய்ய அப்பொழுது யாருமில்லை. விளைவு? கடவுளின் சாபத்தோடு, மனிதன் கொடுத்த தண்டனையும் ஏவாளை இரட்டிப்பு தண்டனை பெற்றவளாக்கி விட்டது.
இதே மனக்கட்டுப்பாட்டுக்குள் (அதாவது, மெஸ்மரிசம் என்று கூட சொல்லலாம்) வளர்க்கப்பட்டவர்களாகவே ஆண்களும், பெண்களும் இன்றளவும் இருக்கின்றனர். சொல்லப் போனால், தாழ்வு மனப்பான்மையின் தாக்கம், ஆரம்பம் முதல் இன்று வரை பெண்களிடம் வழிவழியாய் தொடர் கிறது. அதை பெரிதுபடுத்த நடைபெறுகிற நிகழ்ச்சிகள் பெண்களுக்கு அநேகம். தாம் குற்றம் செய்தவர் என்ற இந்த நிலை, ஆயுள், மரண தண்டனை கைதிகளின் நிலையை விட கொடியது. இதை தம் வாரிசுகளுக்கு அள்ளி அள்ளி வழங்குவதில் பெண்களுக்கு நிகர் பெண்களே!
ஆசிரியருக்கு பயத்தோடு கூடிய மரியாதை தருவது அந்த காலம். அன்புடன் கூடிய போதனையையும், அதே அன்போடு கூடிய மரியாதையை ஆசிரியருக்கு தருவதையுமே மாணவர் சமுதாயம் இன்று எதிர்பார்க்கிறது. எனவே தான், அம்மாதிரியான முற்போக்கு கருத்துகளை கொண்ட பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
இதை போலவே தான், பெண் வர்க்கமும் எதிர்நோக்கியுள்ளது என்பதை ஓரளவு நாம் புரிந்து கொண்டாலும், வழிவிட மட்டும் நம் மனம் முழு சம்மதத்தையும் வழங்குவதில்லை.
இதை போக்க கல்வியால் முடியும் என்றால் அது தவறு. அது ஒரு அடிப்படை, ஒரு ஊன்றுகோல் தான் தவிர, அதுவே இதை நீக்கும் வழியாகி விடாது. ஏனெனில், கல்வி கற்றவர் எத்தனை பேர் முற்போக்குவாதிகள்? அதனால் தானே நாம், "டிவி'யிலும், வானொலியிலும் உதவி செய் உன் மனைவிக்கு, பெண் குழந்தையை காப்பாற்று, பெண்ணாய் பிறப்பதற்கு காரணமும் நீ தான் என்று ஒலி, ஒளிபரப்ப வேண்டியுள்ளது.
எனவே, மனரீதியான மாற்றத்தை இவ்வுலகில் புகுத்தினால் தவிர சம அந்தஸ்து என்ற நிலை வராது, நீ பெரியவன், நான் பெரியவள் என்ற தர்க்க ரீதியான நிலையே தொடரும் என்று நான் நினைக்கிறேன். இம்மனரீதியான மாற்றத்தை எவ்வாறு செய்யலாம் என்பதை தங்கள் கருத்துக்களின் மூலம் அறிய விரும்புகிறேன். மேற்கண்ட கருத்துக்களில் தவறுகள் இருப்பின் ஒப்புக்கொள்கிறேன். தங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்...
— என்று எழுதியுள்ளார். இவரது எண்ணம் பற்றி உங்கள் கருத்து என்னவோ?
***
அவர், தென் மாவட்டத்தில் வசிக்கும் ஜமீந்தார். மலை சூழ்ந்த பிரதேசம் அது... அதனால், அங்கு காட்டு விலங்குகள் அதிகம்! ஜமீந்தாரும், அவரது வாரிசுகளும் அவ்வப்போது வேட்டைக்கு சென்று வந்த காலங்கள் உண்டு. அரசின் மிகக் கடுமையான உத்தரவுகள், தண்டனைகளால் இப்போதெல்லாம் இவர்கள் வேட்டைக்குச் செல்வதில்லையாம்!
மேற்படி ஜமீந்தார், தம் சொந்த வேலை ஒன்றுக்காக சமீபத்தில் என்னை அணுகினார். விலங்கினங்களுக்கு திருமணம் செய்து வைத்தது பற்றி கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தவர், வன விலங்கினங்கள் பற்றி கூறியவை மிக சுவாரசியமானது. இதோ, அவர் கூறியவை:
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில், 106 வகை விலங்கினங்களை உலகம் இழந்திருக்கிறதுப்பா... இதில், 67 சதவீதம் இறுதி நூற்றாண்டுகளில் அழிந்திருக்கிறதுன்னு விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்...
சீதோஷ்ண நிலை, இதர காரணங்களால், இயற்கையாகவே விலங்குகள் மறைவதுண்டு. ஆனால், மனிதனின் வேட்டையாடும் குணமும், விஷம் வைக்கும் பழக்கமும், பல உயிரினங்கள் அழிந்து போகக் காரணமாயிற்றாம்!
சமீப காலத்தில், இந்தியாவில் மறைந்து போன விலங்குகள், ஒற்றைக் கொம்புள்ள சிறு காண்டாமிருகம், இரட்டைக் கொம்புள்ள காண்டாமிருகம் ஆகியவை! ஒற்றைக் கொம்புள்ள பெரிய காண்டாமிருகம், நூற்றுக்கணக்கில் தான் குறிப்பிட்ட இடங்களில் நம் நாட்டில் தற்போது காணப்படுகிறது.
நூறு வருடங்களுக்கு முன், இந்தியாவில் வடமேற்கிலுள்ள பாலைவனப் பகுதிகள் தவிர, இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரையிலும், மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து அசாம் வரையிலும், புலி இனம் பரவலாகத் திரிந்து கொண்டிருந்தது.
வடக்கு ஆசியா பகுதியிலிருந்து நம் நாட்டில் புலி இனம் குடி புகுந்தது. இந்தியாவிலிருந்து பூகோள ரீதியில், இலங்கை பிரிந்த பின் தான் இந்தியாவுக்கு புலிக்கூட்டம் வந்திருக்க வேண்டும்; ஏனெனில், இலங்கையில் புலிகள் அநேகமாக இல்லை.
ஈவு இரக்கமின்றி, 19ம் நூற்றாண்டிலிருந்து நம் நாட்டில் புலிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவில், 2,000 புலிகள் இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக கணக்கிட்டு உள்ளனர். இதுவே மிகையான கணிப்பு தான் என்று நான் நினைக்கிறேன்...
வேட்டையாடுவதை ஒரு வீரச் செயலாகவும், பொழுது போக்காகவும் ஐரோப்பிய அதிகாரிகள் மேற்கொண்டதன் விளைவாகவும், துப்பாக்கி பிரயோகம் பழக்கத்துக்கு வந்ததன் விளைவாகவும் புலிகளை அழிக்கும் படலம் ஆரம்பமாயிற்று. மன்னர்களும், மகாராஜாக்களும், பெரிய பிரபுக்களும் இந்த அழிவு செயலில் ஈடுபட்டனர்.
அவ்வளவு ஏன்... எங்க மூதாதையரும் இதே வேலையைச் செய்தவர்கள் தான்...
பெர்ரி என்பவர் ஒரு ஆங்கிலேயர். அவர் தம் நூலில், "1800ம் ஆண்டுக்குள் ஒரு ஆங்கிலோ இந்திய நீதிபதி, 360 புலிகளை சுட்டு வீழ்த்தியிருப்பதாகவும், 1832லிருந்து, 1862ம் ஆண்டுக்கிடையே ஜார்ஜ்பாமர் என்பவர் முன்னவரையும் மிஞ்சி, 1000 புலிகளை சுட்டு வீழ்த்திய பெருமையை பெற்றார்...' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தொகை பெருக்கத்தால், வன நிலங்களில் மக்கள் குடியேறும் நிலை ஏற்படுகிறது. வனங்களின் ஓரங்களில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்த நெருக்கடியில் வாழ புலிகள் தடுமாறுகின்றன.
இயற்கையாக கிடைக்கக் கூடிய தீனி குன்றி விடவே, அண்டை கிராமங்களில் புகுந்து, ஆடு, மாடுகளை கொன்று தின்ன புலிகள் முயற்சிக்கின்றன. இதை தடுப்பதற்காக, புலிகளுக்கு கிராமவாசிகள் விஷம் வைக்கின்றனர். இதனால், புலி இனமே தென் மாநிலங்களில் நசிந்து வருகிறது.
புலிகளை சுடக்கூடாது என்று வனவிலங்குத் துறை தடை விதித்து விட்டது. மனிதன் தான் புலிகளின் விரோதி. அவன் தன்னை மாற்றிக் கொண்டால், இந்நாட்டில் இன்னும் புலி வர்க்கம் பிழைத்து வாழ வழியுண்டு... எனக் கூறி முடித்தார்.
— ஆனால், இன்னமும் சல்மான்கான் போன்ற வேட்டைப்பிரியர்கள் உலா வந்து கொண்டிருக்கும் வரை, புலிகளும், மான்களும் பயந்து தான் வாழ வேண்டும்!
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பெண்கள் தான் தங்களை குறுகிய வட்டத்திற்குள் அடைத்துகொள்கிரகள். வாழ்கையில் முக்கியமான விஷயங்களை சிறியதாகவும், சிறிய விஷயங்களை முக்கியமாகவும் எடுத்து கொள்கின்றனர். பெரும்பாலான பெண்களின் உலகம் உடை,உணவு TV சீரியல் .தன் குடும்பம் சுற்றம் இவைகள் தான்.சமுதாய சிந்தனை இருப்பதே இல்லை. கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் அளவு தான் முதிர்ச்சி இருக்கிறது. உலகில் ஆண் விஞ்ஞானிகள் எத்தனை ? பெண்
விஞ்ஞானிகள் எத்தனை ?.ஒரு சில விதி விலக்கு இருக்கலாம்.
உலகின் எல்லா உயரினங்களின் முதல் கடமை தன் இனவிருத்தி. அதன் பின் தான் மற்றயவை. இதை பெண்களும் முதலில் உணர வேண்டும். ஆண்களுக்கு கருப்பை, முலைகள் இல்லை. இதற்கு புறம்பாக நம் ஆண்களுக்கு சமன் என்ற தேவையற்ற வாதங்கள் தேவையில்லை. பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள். ஆனால் தங்கள் பெண்மையிழந்து ஆண்களை போல் இராணுவ வீரர் போன்ற தொழில்களில் சேர்ந்து ஆணாக மாற முயற்சிப்பது
வேதனைக்குரியது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.