அன்புள்ள அம்மாவிற்கு—
நான் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் 23 வயது மாணவி. என் பிரச்னையை எப்படி கூறுவதென்றே தெரியவில்லை. நான் பருவம் அடைவதற்கு முன்பே, எனக்குள், "செக்ஸ்' உணர்வுகள் வந்து விட்டது என்று கூறலாம். இருப்பினும், அன்று முதல் இன்று வரை கற்புடனும், கட்டுப்பாடுடனும்தான் இருக்கிறேன்.
எந்த ஆண்மகனை பார்த்தாலும், எனக்குள் ஒருவித தவிப்பு; அதனாலேயே, ஆண்களுடன் அதிகம் பேசுவது கிடையாது. என் குடும்பம், கட்டுப்பாடு மிகுந்த நல்ல குடும்பம். ஆனால், என் சுதந்திரத்திற்கு எப்போதுமே தடை நின்றது கிடையாது.
என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர். என்னால் தனிமையில் இருக்க முடியவில்லை. தவறான வழியில் சென்று விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.
இரவில் தூக்கம் வரு வதில்லை. சிறுவயதில் அலட்சியமாக இருந்து விட் டேன்; ஆனால், இப்போது பயமாக இருக்கிறது. திரைப் படம் கூட பார்க்க முடிய வில்லை. அதில் வரும் காட்சிகள் கூட என்னை சலனப்படுத்துகின்றன.
உளவியல் புத்தகங்கள் கூட படித்து வருகிறேன். மனநோயாக இருக்குமோ என்று கூட பயமாக இருக்கிறது. இரட்டை வாழ்க்கை வாழ்கிறேன் நான்.
கல்லூரியில் ஒரு மாதிரி, வீட்டில் ஒரு மாதிரி போலியாக வாழ்கிறேன் என்றே கூற வேண்டும். யாரிடமும் உண்மையாக சிரிக்கக் கூட முடிய வில்லை. தயவுசெய்து, "திருமணமானால் சரியாகி விடும்' என்று கூறிவிடாதீர்கள். செக்ஸ் உணர்ச்சிகள் தான் அதிகமாக இருக்கிறதே தவிர, உடலுறவில் ஈடுபாடு கிடையாது.
ஆண்களின் கை என் மீது பட்டுவிட்டால், உடனே கோபம் வந்து விடுகிறது. அடிக்கிற அளவுக்கு சென்று விடுகிறேன். ஆனால், இது போலி என்று பிறகு உணர்கிறேன். படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.
எனக்கு இருப்பது மனநோயா அல்லது செக்சிற்கு அடிமையான பெண்ணா? என்று குழம்பிக் கொண்டிருக்கிறேன். தயை கூர்ந்து நீங்கள் தான் தீர்வு கூற வேண்டும்.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. உன் வயதில், பல பெண்களுக்கும் ஏற்படுகிற அதே நிலை தான் உனக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக பயப்படுவதோ, கவலைப்பட வேண்டியதோ இல்லை.
நான் நினைக்கிறேன், உன் வீட்டில் உன்னை மிகவும் கட்டுப்பாடோடு வைத்திருப்பர் என்று...
"ஆண் என்றால் உடலுறவுக்கு ஒரு துணை' என்று மட்டும்தான் உன் மனதில் மிக அழுத்தமாக பதிந்திருக் கிறது.
சிறு வயதில், ஆண் பிள்ளை பக்கத்தில் உட்கார்ந்தால், "காது அறுந்து போகும்' என்றும், ஒரு ஆணுடன் மிக சாதாரணமாக பேசினாலே, அவனுக்கும், அவளுக்கும் ஏதோ கள்ளத் தொடர்பு இருக்கிறது என்பது போலவும், "ஆண் வாடையே இல்லாது வளர்ந்த பெண்தான் உத்தம ஜாதிப்பெண்' என்றும், சொல்லி சொல்லி வளர்க்கிற குடும்பங்கள் உண்டு.
இக்குடும்ப பெண்களுக்கு, ஆணின் மீது ஒரு வித கவர்ச்சியும், ஒருவித பயமும், ஒருவித ஆவலும், அதே சமயத்தில் ஒருவித வெறுப்பும் கலந்து, ஒரு தெளி வான நோக்கம் இல்லாமல் இருக்கும்.
"கல்யாணம் செய்து கொண்டால் சரியாகி விடும் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்' என்று நீயாகவே எழுதியிருக்கிறாய்... அதை பார்த்து சிரித்துக் கொண்டேன் நான். உண்மையிலேயே கல்யாணம் செய்து கொண்டால், உன்னுடைய இந்த நிலைமை மாறித்தான் போகும்.
காரணம் என்ன தெரியுமா?
புரியாத புதிராக, ரகசியங்களை உள்ளடக்கியதாக எல்லாராலும் விமர்சிக்கப்பட்ட, "அந்த' விஷயத்தை, நீயும் அறிந்து கொள்வாய். அதன்பின், பயப்படுவதற்கோ, திருட்டுத்தனமான ஆசைக்கோ இடமே இல்லை.
யோசித்துப் பார்... புது கணவன், அவனிடம் உள்ள அழகு, அறிவு சார்ந்த பேச்சு, இரண்டில் உன்னை முதலில் கவருவது எது? கண்டிப்பாய் அவனின் உருவமும், அழகும் தான். காரணம், அது ஒன்றுதான் பார்த்தவுடன், "பளிச்'சென்று கண்ணுக்கு தெரிகிறது. கண்களின் வழியே மூளையில் பதிவாகி, "ஜிலு ஜிலு'வென முதுகுத்தண்டு வழியாக ஒருவித லாகிரியை உடம்பு முழுக்க பரவச் செய்கிறது. இதுதான் தாம்பத்தியத்திற்கு முதல்படி.
அவன் யார், எப்படிப்பட்டவன், புத்திசாலியா, அசலா, கோபக்காரனா என்பதெல்லாம் அவனுடன் பழக பழகத்தான் புரிகிறது.
புரிந்த பிறகோ, பழைய பிரமிப்பு இல்லை. உற்சாகம் கூட கொஞ்சம் குறைந்து விடுகிறது.
"அவர் தான் வந்திருக்கார்... தானே தட்டை எடுத்து போட்டுண்டு சாப்பிடுவார். நீங்க உக்காருங்கோ...' என்று அடுத்த வீட்டு மாமியிடம் அலட்சியமாய் விமர்சிக்க முடிகிறது.
காலப்போக்கில், அவனது பார்வையே, உனக்குள் கிளப்பிய மோகம் எல்லாம் அழிந்து போய், உன் தோளில் முகம் புதைத்து அவன் தூங்கினாலும் கூட, "த்ச்... நகர்ந்து படுங்களேன்... ஏற்கனவே புழுங்கு கிறது; கரன்ட் வேற இல்ல...' என்று உன்னை முனகச் செய்யும்.
யோசித்துப்பார்... திருமணத்துக்கு முன், உன்னை மணக்கப் போகிறவனிடம் உனக்கு இருந்த கவர்ச்சி, நாணம், ஆசை, பயம் இவையெல்லாம் எங்கே போயிற்று? ஆக, திருமணம் ஆனால் சரியாகப் போய்விடும் என்று சொல்வது எதற்காக என்று புரிகிறதா?
வேறு வழியில்லை. எதையும் நெருங்கிப் பார்க்காமல் இது இப்படித்தான் இருக்கும் என்று உத்தேசமாய் சொல்ல முடியாது. உனக்கோ, ஆண்களுடன் பேசுவதற்கோ, பழகுவதற்கோ உன் வீட்டுச் சூழ்நிலை இடமளிக்காதவாறு இருக்கிறது.
அதனால் தான், இந்த பயமும், விறுவிறுப்பும், மோகமும், உணர்ச்சிப் பெருக்கும். பல ஆண்களுக்கும் கூட இதே போன்ற நிலைமை ஏற்படுவது உண்டு.
பெண்களைப் பார்த்தால் பேச்சு தடுமாறும்; இல்லா விட்டால் வார்த்தை திக்கும்; வேர்த்துக் கொட்டும்; வெட் கமும், சொல்ல முடியாத அவஸ்தையுமாய் தவிப்பர். இதற்குக் காரணம், அவர்கள் இன்னும் பெண் என்கிற புத்தகத்தை திறந்து படிக்க வில்லை என்பதுதான்.
கடைசியாக சின்னதாய், அதே சமயத்தில் ஆன்மிகமாய் ஒரு விஷயம் சொல்லட்டுமா? கடவுளிடம் நாம் பயபக்தி யுடன் இருக்கிறோம்... கார ணம் என்ன? அவர் இருக் கிறாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. இருக் கிறார் என்றால், எத்தனை தலை, எத்தனை கை என்றும் தெரியாது. இல்லை என்று நிச்சயமாகக் கூறி, ஒதுக்கித் தள்ளவும் நம்மால் முடியாது.
இந்த பயமும், பக்தியும், நமக்கு இருப்பதற்கு காரணமே, அவர் இருக் கிறாரா, இல்லையா என்ற சந்தேகத்தினால் தான்.
அவர் இருக்கிறார்; நிச்சயமாக இருக் கிறார்; அதுவும் நமக்குள்ளே இருக்கிறார்; அவரை விட்டு நாம் பிரியவோ, ஓடிப்போகவோ முடியாது என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்ட ஞானிகளுக்கு இந்த பயமோ, பக்தியோ இருக்காது; பதிலாக அன்பும், பிரேமையும்தான் இருக்கும்; உரிமையும், கோபமும் தான் இருக்கும். ஏனெனில், உண்மை, உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கி விட்டது.
ஆதலால், கவலைப்படாதே... வாழ்க்கையில் ஆணும் ஒரு பகுதி என்று நினை. எல்லாமே சரியாகி விடும்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு சாதாரணமான ஆண் தன் மனைவியில் தன் மானசீகக் காதலியைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்கிறான்.ஒரு சாதாரணமான பெண் தன் கணவனில் தன் மானசீகக் காதலனை தேடித்தேடிக்கண்டுபிடிக்கிறாள்.ஒரு ஆணைவிட பெண் தனது மானசீகக்காதலனை மிக மிக எளிதாகக் கண்டுபிடிக்கிறாள். காரணம் பல சமயங்களில் அவளின் எதிர்பார்ப்பு அவனிடம் அவளைச் சுற்றியும் அவனைச் சுற்றியும் மட்டும்தான். அவளுக்குள் அவனது தொலைபேசி அழைப்புகள் உலகிலேயே உன்னதமான இசையாகிவிடுகிறது. அவனது சாப்பிட்டாயா என்ற கேள்வி ஒரு பிரமாதமான விருந்தாகி மனம் நிறைக்கிறது. அவனது உன்னைத் தேடுகிறேன் என்ற வார்ததை இதயம் நனைத்து கண்களில் நீராய் வழிகிறது. எப்பொழுது 5 மணியாகும் எப்பொழுது அவர் வருவார் என்று கண்கள் எங்கிருந்தாலும் காதுகளும் இதயமும் கதவுகளில் காத்துக்கிடக்கின்றன. அந்த நேரத்தில் வீரிடும் ஒரு அழைப்பு மணி ஓசைக்கும், ஒரு கர்ணகடூர பைக்கின் ஓசைக்கும் இந்த உலகின் எந்த ஒரு இசையும் ஈடாகாது.அந்தச் சாயங்காலப் பட்டாம்பூச்சிகள் இரவு முழுவதும் ஒரு மின்மினிப்பூச்சியாய் மனமெங்கும் மின்னும் அந்த அழகை அவளின் படபடக்கும் இமைகளிலும் மின்னும் அந்தக் கண்களிலும் காணலாம். கணவர்களே, அந்தப் பட்டாம்பூச்சிகளை பறக்கவிடுங்கள். இன்னும் சில நாட்கள் அவை பறக்கட்டும். சாயங்காலங்கள் தோளில் சாயுங்காலங்களாகட்டும், மாலைகள் மடிதேடும் தலைகளுக்காகட்டும்.மனைவிகளே,உங்களின் தலைகோதும் விரல்கள் முடிகளின் ஊடாய் மனங்களை வருடட்டும்.விரல்களும் கரங்களும் கதை பேச மௌனங்களே வார்த்தைகளாக ஒரு அந்தி நேரம் குறுநகை கூடிய குறுநடைகளாகும் அந்த மாலைகளில் மனங்கள் பேசட்டும், இரவுகளில் உடல்கள் உரையாடட்டும். இரவுகள் ஒரு இசைக்கச்சேரியாகட்டும்.இரவுகளின் இருட்டுகளும் உறவுகளின் மௌனங்களும் இளம் காலைகள்கூட கொஞ்சம் நீண்டு வெளிச்சமாகிப்போன இரவுகளாகட்டும்.காரணமில்லாத சில முத்தங்கள், மனங்கள் திட்டமிடா அணைப்புகள், தேவையில்லாத சில தீண்டி விலகல்கள்,உடல் கலக்கா சில உதடு சந்திப்புகள், சில செல்ல முடிபற்றியிழுத்தல்கள், பொறுக்கியாய் சில பின்பக்கத்தட்டல்கள், குளியலில் மறந்த துவாலைகளாய் மனைவிகள் ..இவையெல்லாம் அந்தப் பட்டாம்பூச்சிக்கு வண்ணம் சேர்க்கும் சிறகுகளை படபடக்க வைக்கும்.அவளின் மார்புகளிலும் தோளிலும் ஈரமுகம் பதித்து துடைத்துவிட்டு நீங்கள் செல்வீர்களே கணவர்களே, அந்த ஈரம் ஒரு துளிகுறையாது அவளின் மனம் இறங்கி குளிர்விக்கும்....அந்த குளிர்தடாகத்தில் மலராய் மனது மலர, சிறகடித்து வண்ணத்துப்பூச்சிகள் பறக்க ஒரு நந்தவனத்துச் சீதையாய் அவள் உங்களுக்காய் சிதையிறங்கவும் தயாராக இருப்பாள்.....அவற்றிற்கு காதல் வார்த்தைகள்தான் உணவுகள். காசு செலவில்லை காதல் தானே செலவாகும் போகட்டும்.அது ஒரு சாகா நதிதானே..கொஞ்சம் மொண்டு ஊற்றுங்களேன்.மல்லிகைப்பூவாய் இட்லிகளும் ருசியாய் சில சட்னிகளால் எண்ணிக்கையில்லாமல் இறங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் கொஞ்சம் தண்ணீர் குடிக்கும் இடைவெளியில் சொல்லுங்களேன் "அரிசியுடன் மல்லிகையைக் கலந்து அரைத்தாயா" என்று? (இல்லை பாக்கெட் மாவு போட்டவனைத்தான் கேட்கணும் என்று பதில் வந்தால் நான் ஜூட்)வாழ்க்கையில் கொஞ்சம் கவிதை சேருங்கள். காதலில் கொஞ்சம் பொய் சேருங்கள். பொய்யானாலும் வேண்டும் என்று கேட்கும் பெண்ணின் மனம். ஆனால் மறந்தும் பொய்யில் காதலை சேர்த்துவிடாதீர்கள். திருமணத்திற்கு முன்பிருந்த கவர்ச்சி நாணம் ஆசையெல்லாம் போவதின் முதல் காரணம் மேற்சொன்ன பலவற்றை மறப்பதுதான்.......(கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு நடுவுல கொஞ்சம் வழியை விட்டுட்டு வேற ரூட்ல போயிட்டேன்னு நினைக்கிறேன்..)சரி இந்தப் பெண்ணின் பிரச்னைக்கு அடுத்த பத்தியில் வருவோம்....நட்புடன் மீனவன்
அருமையான விளக்கம் . சகுந்தலா அவர்களுக்கு நன்றி ..சகோதரி உங்களுக்கு ஒரு வார்த்தை .. ஆணை விட பெண்ணுக்கு காம உணர்ச்சி அதிகம் . ..நீங்கள் ஒப்புக் கொள்வது போல் பலர் ஒப்புக்கொள்வது இல்லை . இதை இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள் . திருமணமானால் எல்லாம் சரியாகி விடும்.. உங்களை திருமணம் செய்து கொள்ளப் போகும் அதிர்ஷ்ட சாலிக்கு வாழ்த்துக்கள் ..
பருவம் உன்னை பாடாய் படுத்தி கொண்டு இருக்கிறது...இது ஆண்,பெண் இரு பாலருக்கும் உள்ள பருவத்தில் வரும் கிளர்ச்சிகள் தான். இது பற்றி மன நோய் என்று நீயே ஒரு பெயர் வைத்து கொண்டு அதற்குள் அடங்கி விடாதே...உனக்குள் செக்ஸ் உணர்வுகள் அதிகம் ஏற்படும் என்று ஒரு உணர்வு உன்னை உணர்த்தும் போது உன்னுடைய கவனத்தை வேறு திசைக்கு மாற்று. அதாவது புத்தகம் படிக்க...சமையல் செய்ய...இரவு நேரம் என்றால் உன் படிப்பு விஷயம் பெண் நண்பிகள் உடன் பழகுவது பேசுவது அரட்டை அடிப்பது என்று உன் கவனத்தை திசை மாற்றினால் ஓர் அளவிற்கு சரியாகும் என்பதே என் கருத்து....உனக்கும் திருமண வயதை தொட்டு கொண்டுதானே இருக்கிறது....யோசித்து கொள்..
என்னம்மா முதுகலை படிக்கிறேன் என்கிறாய்.தாத்தா பாட்டி அம்மா அப்பா எல்லோரும் வந்த விதம் வளர்ந்த விதம் தானே இது.முதலில் புரியாத புதிராக இருக்கும்.தெரிந்து கொண்டால் இதுவும் வாழ்வியலில் ஒன்று என்று புரிந்து போய்விடும்.இதற்க்கு போய் மனதை அலட்டிக்கொண்டுள்ளாயே இப்பொழுது எல்லாம் கல்லூரிக்கு சென்றால் மாணவர்கள் வாழ்க்கையை படிக்க முயல வேண்டும்.சமூக விஞ்ஞானம் எது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.மன கட்டுப்பாடு வேண்டும்.தனியாக இருக்கும் சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். மனதை படிப்பிலும் மற்ற நேரங்களில் தெய்வ சிந்தனை,குடும்ப வேலை என்று ஒருமை படுத்திக்கொண்டால் அதிகாலை பனித்துளி போல் இக்குழப்பம் மறைந்துவிடும்.கவலை வேண்டாம்.இறையருள் துணை புரியும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.