கேள்வி: முந்தைய கம்ப்யூட்டர் மலர் ஒன்றைப் படிக்கையில், தற்காலிக பைல்களைச் சேமித்து வைக்கும் டைரக்டரியிலிருந்து நாமாக பைல்களை நீக்கலாம் என்று எழுதி உள்ளீர்கள். தற்காலிக டைரக்டரி ஏன், எதற்கு ஏற்படுத்தப்படுகிறது? தேவை இல்லை எனில், முதலிலேயே நீக்கிவிடலாமே? சற்று விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்.கிருபாகரன், தேனி.
பதில்: டெம்பரரி டைரக்டரி (temp directory) என்பதில் தான், கம்ப்யூட்டர் செயல்பாட்டில் உருவாகும் அனைத்து தற்காலிக பைல்களும் சேமித்து வைக்கப்படுகின்றன. தற்காலிக பைல்கள் என்பவை, உங்கள் வெப் பிரவுசர் அல்லது மற்ற புரோகிராம்கள், தாம் வேகமாக இயங்குவதற்காக உருவாக்கும் தற்காலிக பைல்களாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் www. dinamalar.com என்ற இணைய தளத்தினைப் பார்த்தால், ஒவ்வொரு முறையும் இதே முகப்பு பக்கத்திற்குச் செல்ல விரும்புவீர்கள். இந்த பக்கத்தின் நகல் ஒன்று, உங்கள் கம்ப்யூட்டரில் தற்காலிக பைலாகச் சேவ் செய்து வைக்கப்படும். அடுத்த முறை இதே தளத்திற்கு நீங்கள் செல்ல முயற்சிக்கையில், இந்த தற்காலிக பைல் மூலம், உடனடியாக அந்தப் பக்கம் தரப்பட்டு, அதிலிருந்து பின்னர் மற்ற இணையப் பக்கங்கள் தேடப்படும். உங்கள் வெப் பிரவுசர், இவ்வாறு நீங்கள் செல்லும் அனைத்து தளங்களுக்கும் தற்காலிக பைல்களை உருவாக்கும். பொதுவாக, இந்த பைல்கள், அவற்றை உருவாக்கும் புரோகிராம்களினால் நீக்கப்படும். அந்த புரோகிராம் இடையே கிராஷ் ஆனால், இவை கம்ப்யூட்டரிலேயே தங்கும். சில புரோகிராம்கள், இந்த பைல்களை நீக்காமல் அப்படியே உங்கள் கம்ப்யூட்டரில் வைத்திருக்கும்.
இதில் என்ன வேடிக்கை என்றால், இது போன்ற தற்காலிக பைல்கள், அவை சார்ந்த செயல்பாட்டின் வேகத்தை அதிகப்படுத்தும் அதே நேரத்தில், நிறைய பைல்கள் இவ்வாறு தேங்குவதால், உங்கள் கம்ப்யூட்டரின் செயல்திறன் வேகம் குறையும். எனவே தான், இவற்றை நீக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த பைல்கள் நீக்கப்பட்டாலும், பிரவுசர் அல்லது புரோகிராம் இயங்குகையில் வேகமாகவே தான் இயங்கும். இந்த தற்காலிக பைல்களை நீங்களாக, டெம்ப் டைரக்டரி சென்று நீக்கலாம். அல்லது சிகிளீனர் போன்ற புரோகிராம் மூலமும் நீக்கலாம்.
கேள்வி: கம்ப்யூட்டரில் அதிக நேரம் பணி புரிந்தால், கண்களுக்கு சுமை ஏற்பட்டு நாளடைவில் தீங்கு ஏற்படும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?
ஆ. சிங்கராஜ், தேவாரம்.
பதில்: ஆம், இது உண்மையே. ஏனென்றால், நீங்கள் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், போட்டோக்களைப் பார்த்து ரசிக்கையில், முக்கியமாக கேம்ஸ் விளையாடுகையில், திரைக் காட்சியைத் தொடர்ந்து உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். அப்போது கண்களை இமைப்பதனை வெகு நேரம் நிறுத்திவிடுகிறீர்கள். கண்களைச் சிமிட்டாமல் தொடர்ந்து இருப்பது நல்லதல்ல. இது கண்களுக்குச் சுமையை அளிக்கும். அண்மையில் வெளி நாட்டில் இயங்கும் Centers For Disease Control என்ற அமைப்பு இது குறித்த அறிக்கையில் ஒரு தீர்வினை வெளியிட்டுள்ளது. அதற்கு 20:20:20 எனவும் பெயரிட்டுள்ளது. ஒவ்வொரு
20 நிமிடங்களுக்கு ஒரு முறை, கம்ப்யூட்டரிலிருந்து கண்களை எடுத்து, உங்களுக்கு முன்னால் 20 அடி தூரத்தில் உள்ள பொருள் ஒன்றை 20 நொடிகள் பார்க்கவும். உங்கள் கண்கள் தாமாக சிமிட்டிக் கொள்ளும். இந்த பதிலை உங்களுக்கு எழுதுகையில், என் கண்களில் சோர்வு தென்பட்டது. நான் உடனே 20:20:20 தீர்வினை மேற்கொண்டேன். சரியாகிவிட்டது. நீங்களும் இதே வழியினைப் பின்பற்றலாமே!
கேள்வி: நான் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ள சாம்சங் கேலக்ஸி மொபைல் போன் பயன்படுத்துகிறேன். இதில் குறிப்பிட்ட எண்களிலிருந்து வரும் எஸ்.எம்.எஸ். செய்திகளை வரவிடாமல் தடுப்பது எப்படி? பலமுறை முயன்றும் வழி தெரியவில்லை.
எஸ். ரோஸ்லின் கனி, சென்னை.
பதில்: மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் சில வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து ஸ்பேம் மெயில்கள் இப்போதெல்லாம் தடை இட்டாலும் வந்து கொண்டே இருக்கின்றன. இதனால், நம் மொபைல் போன் இன் பாக்ஸில் நிறைய ஸ்பேம் மெயில்கள் தங்குகின்றன. நாமாகத்தான் நீக்க வேண்டியதுள்ளது. அப்படியே நீக்கினாலும், மீண்டும் வரத்தானே போகிறது என்கிறீர்களா? ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களுக்கு இதற்கான தீர்வு தரும் புரோகிராம் ஒன்று உள்ளது.
உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில், Google Play store (Android market) செல்லவும். அல்லது போன் பிரவுசர் வழியாக play.google.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். Google Play store அடைந்தவுடன் அதில் “SMS blocker” என டைப் செய்து தேடவும். அல்லது நேரடியாக https://play.google.com/ store/apps/details?id=com.smsBlocker&hl=en என்ற முகவரிக்குச் செல்லவும். கூகுள் பிளே ஸ்டோரில் எஸ்.எம்.எஸ். தடுக்க கிடைக்கும் பல புரோகிராம்கள் காட்டப்படும்.
ஆனாலும், என்ற நிறுவனம் தரும் புரோகிராம் மிகவும் பயனுள்ளதாகவும், விளம்பரத்தில் தரப்பட்டிருக்கும் செயல்பாட்டினைச் சரியாக மேற்கொள்வதாகவும் உள்ளது. இதனை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்தவுடன், இயக்கி app preferences page என்ற பக்கத்திற்குச் செல்லவும். இங்கு SMS blocking என்பதிலும் Spam auto blocking என்பதிலும் On என அமைக்கவும். Country code என்ற இடத்தில் இந்தியாவிற்கான குறியீடான 91 என்பதனை அமைக்கவும். (மற்ற நாடுகளின் குறியீடுகளை அறிய http://countrycode.org/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.) இனி, ஸ்பேம் செய்திகள் வரும்போது அவை தடுக்கப்படும். குறிப்பிட்ட எண்களில் இருந்து வரும் செய்திகளைத் தடுக்க, “Block” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். “Add New” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். அவை: போன் முகவரி புக்கிலிருந்து எண் தேடி எடுத்து அமைத்தல், எஸ்.எம்.எஸ். வந்த பெட்டியிலிருந்து எண் தேடி அமைத்தல், மற்றும் நாமாக எண்ணை அமைத்தல். இங்கு எண்ணை அமைக்க வேண்டும்.
அடுத்ததாக, “Filter” என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இங்கு குறிப்பிட்ட சொல் அல்லது சொற்களை அமைத்து, அவை உள்ள செய்திகளை ஸ்பேம் பெட்டிக்கு அனுப்ப செட் செய்திடலாம்.
கேள்வி: நான் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன். என் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோடில் வைத்திட ஒரு ஷார்ட் கட் உருவாக்கி, டெஸ்க்டாப்பில் வைத்து இயக்க விரும்புகிறேன். முடியுமா?
எ.சி. சுப்பையா, மதுரை.
பதில்: கம்ப்யூட்டரைத் தூங்க வைக்க, ஒரு சிறிய மந்திரக் கோலினை டெஸ்க் டாப்பில் வைத்து இயக்கும் ஐடியா சூப்பர் தான். இதனை மிக எளிதாக மேற்கொண்டு அமைக்க முடியும். நோட்பேடினை (Notepad) இயக்கவும். அதில் கீழ்க்காணும் வரிகளை வரிசையாக அமைக்கவும்.
powercfg h off
rundll32.exe
powrprof.dll,SetSuspendState 0,1,0
powercfg h on
இதன் பின் File சென்று, Save As என்பதில் கிளிக் செய்திடவும். “Save as type” என்று உள்ளதனை அடுத்துள்ள கீழ்விரி மெனுவினை கிளிக் செய்திடவும். இங்கு All Files என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இடது பக்கம் உள்ள favorites menu வில், டெஸ்க்டாப் என்பதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் “File name:” என்பதில் பைல் பெயரை sleep.cmd என அமைக்கவும். பின்னர் சேவ் செய்திடவும். இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் sleep என்ற பெயரில் ஒரு ஐகான் இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டர் “தூங்கச்” செல்லும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்கையில், அது கம்ப்யூட்டரை ஸ்லீப் மோடுக்கு எடுத்துச் செல்லாமல், ஹைபர்னேட் (hibernate) வகைக்கு எடுத்துச் சென்றால், அந்த புரோகிராமினை நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டராக இயக்க வேண்டும். மீண்டும் ஸ்லீப் ஐகானில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Run as Administrator” என்பதற்கு அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை அமைக்கவும். இனி உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் ஐகானைத் தொட்டவுடன் “தூங்கத்” தொடங்கும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.