பிப்., 9 - தை அமாவாசை
நம் தேசத்தில், கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி போன்ற புண்ணிய நதிகள் ஓடுகின்றன. ராமேஸ்வரம், கன்னியாகுமரி என்று கடற்கரை ஸ்தலங்கள் உள்ளன. அமாவாசையன்று, முன்னோரை வழிபட, இந்த தலத்துக்கு சென்று நீராடி வாருங்கள் என்று சொல்கின்றனர். காரணம் என்ன?
சூரியனின் பயணத்தை அனுசரித்து, ஒரு ஆண்டை இரண்டாகப் பிரித்தனர். ஆடி முதல் மார்கழி வரை தென்திசை நோக்கிய பயண காலத்தை, தட்சிணாயணம் என்றும், வடதிசை பயணத்தை, உத்தராயணம் என்றும் சொல்கின்றனர். தட்சிண+ அயனம், உத்தர + அயனம் என்றே இதை பிரிக்க வேண்டும். "ன' என்பது, "ண' ஆகியுள்ளது. தட்சிணம் என்றால், தெற்கு. அயனம் என்றால், பாதை. உத்தரம் என்றால், வடக்கு. பேச்சு வழக்கில் கூட, தெற்கு ரயில்வேயை, தட்சிண ரயில்வே, இந்தியாவின் வடமாநிலத்தை உத்தரபிரதேசம் என்கின்றனர். பிதுர் எனப்படும் நம் முன்னோரின் திசை, தெற்கு. இதனால் தான், ஊரின் தென்திசையில், மயானம் அமைக்கின்றனர்.
சூரியனின் தென்திசை பயண காலமான ஆடி மாதம் அமாவாசையன்று, பிதுர்கள் பூமிக்கு வர ஆரம்பிக்கின்றனர். புரட்டாசி மாத அமாவாசையன்று மொத்தமாக கூடுகின்றனர். இதை, மகாளய அமாவாசை என்பர். தை அமாவாசையன்று, மீண்டும் பிதுர்லோகம் திரும்புகின்றனர். இதனால் தான், 12 அமாவாசைகளும், முன்னோருக்கு திதி கொடுக்க முடியாத சூழ்நிலையில், இந்த மூன்று அமாவாசைகளுமாவது கொடுக்கட்டும் என முக்கியத்துவம் தந்துள்ளனர்.
நமக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒருநாள். இதில், ஆடி முதல் தை வரை இரவு நேரம். இந்த காலத்தில், தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில், நம்மை பாதுகாப்பது முன்னோர்கள். தை முதல் ஆனி வரை பகல் பொழுது. அப்போது தேவர்கள் நம்மை கவனித்துக் கொள்கின்றனர். ஆக, ஆடி அமாவாசையன்று, முன்னோரை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று விடை கொடுத்து அனுப்புகிறோம்.
முன்னோர் நம்மிடம் பெரிதாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களின் தேவை, எள்ளும், நீரும் மட்டுமே. ஆனால், இதை குறிப்பிட்ட புண்ணியத்தலங்களுக்குச் சென்று, ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
கோவில்களும், தீர்த்தங்களும், ஞானிகளின் பாதம் பதிந்தவை. அவர்களது திருவடி மகிமையால், அவை புனிதம் பெறுகின்றன. கடவுள் எப்படி ஆனந்தமாக இருக்கிறாரோ, அதுபோல், ஞானிகளும் எல்லா காலத்திலும் ஆனந்தமாக இருக்கின்றனர். அகத்தியர் தீர்த்தம், குமரி தீர்த்தம். ராமேஸ்வர தீர்த்தம் என்றெல்லாம் சொல்கிறோம். அகத்திய முனிவரின் பாதம் பட்ட இடம், பாபநாசத்திலுள்ள அகத்திய தீர்த்தம். பெருமாளும், லட்சுமியும், ராமன், சீதை எனும் மனிதர்களாகப் பிறந்து, கால் பதித்த இடம் ராமேஸ்வரம். அம்பாள் கன்னி பகவதியாக பிறந்து, பாதம் பதித்த தலம் கன்னியாகுமரி.
ஞானிகள் மற்றும் தெய்வ சம்பந்தத்தால், இங்கே போய் திதி கொடுக்கும் போது, நம் பாவம் மட்டுமல்ல, முன்னோர் செய்த பாவமும் தீர்ந்து, பரம்பரைக்கே நன்மை ஏற்படுகிறது. அது மட்டுமல்ல... அமாவாசையன்று, அன்னதானம், ஆடை தானம், அரிசி, காய்கறி தானம் செய்ய வேண்டும். இதனால், நமக்கு செல்வச்செழிப்பு <உண்டாகும்.
அமாவாசையன்று, சுபநிகழ்ச்சிகளையும் நடத்துவர். "நிறைந்த அமாவாசை' என்று கிராம மக்கள் சொல்வர். அந்நாளில் துவங்கும் சுபநிகழ்ச்சிகளுக்கு, முன்னோரின் ஆசி கிடைக்கும். தன் முன்னோர் மோட்சம் செல்லாமல், திண்டாடுவதைக் கண்ட பகீரதன், கடும் பிரயத்தனம் செய்து, கங்கையையே பூமிக்கு கொண்டு வந்து, அவர்களுக்கு விமோசனம் அளித்தான் என்கிறது புராணம்.
மரியாதைக்குரிய நம் முன்னோரை, தை அமாவாசையன்று வழிபடுங்கள். புண்ணியத் தலங்களில் தீர்த்தமாடுங்கள்; நிறைந்த பலன் பெறுவீர்!
***
தி. செல்லப்பா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.