** ஆர்.ராஜேந்திரன், மதுரை: என் நண்பர் ஒரு பட்டதாரி! "மாதச் சம்பள வேலை வேண்டாம்; விவசாயத்தில் ஈடுபடப் போகிறேன்...' என்கிறார். அவர் முடிவு சரிதானா?
சரிதான்; வரவேற்கிறேன்! எல்லா விவசாயிகளையும் போல, செக்கு மாடு மாதிரி செயல்படாமல், இயற்கை உரம், மருந்து என மாறி, பயிர் செய்தால், அதிக விலை கிடைக்கும். இவ்வகை தானியங்களையும், காய், கனிகளையும் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க தயாராக உள்ளனர் மக்கள்!
***
* சி.பாண்டியம்மாள், தேனி: ஜோதிடம், வாஸ்து, நியூமராலஜி - எவ்வளவு தூரம் நம்பலாம்?
திண்டுக்கல், என். கவியர” என்ற வாசகர் எழுதிய கேள்வி இதோ: நான் பிறந்த போது எனக்கு ஜாதகம் கணித்தவர், "67 வயதில் மரணம்' எனக் குறிப்பிட்டுள்ளார்; எனக்கு இப்போது, 69 ஆகி விட்டது... உயிருடன் இருக்கிறேன்; திடகாத்திரமாக உள்ளேன்! ஜோதிடம் பொய்த்து விட்டதே... உங்கள் பதில் என்ன எனக் கேட்டுள்ளார்! உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா?
***
* சே. கோவிந்தசாமி, கம்பம் : ஒரு, "மேக்கப் மேனால்' எப்படி பல கோடிகளைப் போட்டு சினிமா தயாரிக்க முடிகிறது?
இண்டஸ்டிரியில் நன்கு அறிமுகமான நபர் எவராக இருந்தாலும், பெரிய நடிகர், டைரக்டரின் கால்ஷீட்டைப் பெற்று விட்டால், கோடிகளைக் கடனாகக் கொடுக்க, சேட்டுகள் தயாராக உள்ளனர். சரத்குமாரின், "திவான்' கமல்ஹாசனின் "பம்மல் கே. சம்மந்தம்' மற்றும் "பஞ்ச தந்திரம்' படங்களை தயாரித்த தேனப்பன், சினிமாக்காரர்களுக்கு சாப்பாடு பரிமாறுபவராக இருந்து, புரொடக்ஷன் மானேஜராகி, பின், தயாரிப்பாளர் ஆனவர் தான்!
***
* பி.என்.லிங்கராஜ், தாம்பரம்: இறந்தவர்களின் சிலை, புகைப்படம், சமாதி முன் விழுந்து நமஸ்கரிப்பதால் பலன் அதிகமா அல்லது உயிருடன் உள்ளவர்கள் முன், நேரடியாக விழுந்து நமஸ்கரிப்பதில் பலன் அதிகமா?
இரண்டாவதில் தான் பலன் அதிகம்; எப்பவும் இல்லை என்றாலும், ஏதோ அவ்வப்போதாவது நிச்சயம் பலன் கிடைக்கிறது என்பதை, கண்ணெதிரே கண்டு கொண்டு தானே இருக்கிறோம்!
***
** ஆர்.வேலுச்சாமி, விழுப்புரம் : பட்டமும், பட்ட மேற்படிப்பும் படித்த இளைஞர்கள், வேலையின்றி, தன்னம்பிக்கை இழந்து, சோர்வாக எதிர்காலத்தை நினைத்து பயப்படும் இன்றைய நிலை பற்றி...
தாம் படித்து விட்டோம் என்ற நினைப்பே, "என் தகுதிக்கு ஏற்ற வேலை அல்ல இது' என கிடைக்கும் பல வேலைகளையும் உதறித் தள்ளத் தூண்டுகிறது! பட்டங்களைப் பெற்ற இவர்களுக்கு, உண்மையிலேயே பல விஷயங்களில் அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. இதை, அவர்கள் சுய சோதனை மூலம் அறிந்து கொண்டால், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறக்கும்!
***
* டி.மதுரா, திருநகர் : தங்கள் குழந்தைகளை, தாங்களே மட்டம் தட்டிப் பேசும் பெற்றோர் பற்றி...
மனோதத்துவம் அறியாதவர்கள்... இதனால், அக்குழந்தையின் மனநிலை எவ்வாறு பாதிக்கும் என்பதையும், அதனால், அவர்களின் எதிர்காலம் பாழ்பட்டுப் போகும் என்பதையும் அறியாதவர்கள். இப்படிப்பட்ட பெற்றோர், சிறந்த மனோதத்துவ மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்!
***
**எஸ்.சந்திரசேகர், நெல்லை: சொத்து பிரச்னை விரைவாக முடிய, அடி தடி, பஞ்சாயத்து, கோர்ட் இம்மூன்றில் எதை தேர்ந்தெடுக்கலாம்?
கோர்ட்: சம்பந்தப்பட்டவர்களின் பேரன் - கொள்ளு பேரன் காலத்தில் தான் முடிவு தெரியும்!
பஞ்சாயத்து: அப்பத்தை பங்கு போட, குரங்கிடம் சென்ற பூனைகளின் கதையாகி விடும்!
அடி தடி: "மாமியார் வீட்டு' விருந்தாளியாக்கி விடும்!
- சம்பந்தப்பட்டவர்கள், விட்டுக் கொடுத்து, தமக்குள்ளே பேசி முடிப்பதே சிறந்த வழி!
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.