எம்.ஜி.ஆருக்கும் - டி.எம்.சவுந்தர் ராஜனுக்கும் இடையே எதிர்பாராத சிறிய, "விரிசல்' ஏற்பட்டிருந்த சமயம் அது. அப்போது சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் தயாரித்த, "நல்ல நேரம்' படத்தில், எம்.ஜி.ஆர்., நடித்துக் கொண்டிருந்தார்.
"நல்ல நேரம்' படத்தில், டி.எம்.எஸ்.,சுக்கு பதிலாக எல்லா பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையே பாட வையுங்கள். ஒரு மாறுதலுக்காகத்தான் இந்த யோசனை...' என்று தேவரிடம் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தார் எம்.ஜி.ஆர்.,
தேவருக்கு இது அதிர்ச்சியைத் தந்தது.
"டி.எம்.எஸ்., ஏன் என் படத்தில் பாடக் கூடாது? அவர் செய்த பாவம்தான் என்ன? அவர் ஏதாவது தவறு செய்திருந்தால் சொல்லுங்கள்; இரண்டு தட்டு தட்டிக் கொண்டுவந்து உங்கள் முன்னாலே கொண்டுவந்து அவரை நிறுத்துகிறேன். ஆனால், டி.எம்.எஸ்.,சை பாட வைக்கக் கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், "நல்ல நேரம்' படத்தை எடுப்பதையே நான் நிறுத்திக் கொள்கிறேன்...' என்றார் தேவர் படபடப்பாக.
அதைக் கேட்டதும் அதிர்ந்து போன, எம்.ஜி.ஆர்., "பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க அண்ணே... உங்க விருப்பப்படியே டி.எம்.எஸ்., பாடட்டும்...' என்றார் சமாதானமாக.
இந்த சம்பவம் பற்றி தேவர், டி.எம்.எஸ்.,சிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, பழைய கால சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார்...
"ஜூபிடர் பிக்சர்ஸ், "கிருஷ்ண விஜயம்' படத்தில் நீ பாடிக்கொண்டிருந்த சமயம்... அந்தப் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். இருவரின் கலைப் பயணமும் கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்திலேயே துவங்கியது. அதே போல, "சுதர்சன்' என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நீயும், நானும் ஒன்றாக நடித்தோமே... ஞாபகம் இருக்கிறதா? இசையிலும், வாழ்விலும் நீ முருகனை நம்பி வந்தாய். கலையுலகிலும், வாழ்க்கையிலும் நானும் அதே முருகனையே நம்பி வந்தேன். இருவரையும் அவனே உயர வைத்தான். ஒரு முருக பக்தனான, டி.எம்.எஸ்.,சுக்கு எந்த குறையும் வராமல் பார்த்துக் கொள்வது, இன்னொரு முருக பக்தனான என் தார்மீக கடமை அல்லவா? அதனால் தான், உனக்காக எம்.ஜி.ஆரிடம் பரிந்து பேசினேன்...' என்றார் தேவர்.
தேவர் உயிரோடு இருக்கும் வரை, தாம் தயாரிக்கும் ஒவ்வொரு படத்திலும் டி.எம்.எஸ்.,சையே பாட வைத்தார்.
இளைய தலைமுறை நடிகர்கள் கமல், ரஜினி, சிவக்குமார் ஆகியோரை வைத்து, "தாயில்லாமல் நானில்லை, தாய் மீது சத்தியம், ஆட்டுக்கார அலமேலு மற்றும் வெள்ளிக்கிழமை விரதம்' போன்ற படங்களை எடுத்த போதெல்லாம் கூட, அவர்களுக்காகவும் டி.எம்.எஸ்.,சை பாட வைத்தார். முருகனையே பரிபூரண கதியாக எண்ணி வாழ்ந்த தேவர், முருகப் பெருமானுக்கு உரிய நாளாகிய சஷ்டியன்று காலமானார்.
நன்றி மறக்காத டி.எம்.எஸ்., தேவரின் பூதவுடல் அருகே அமர்ந்து, ஒரு மணி நேரம் முருக பக்திப் பாடல்களை கண்ணீர் மல்கப் பாடி, தேவருக்கு மானசீகமாக நன்றி மலர்களைக் காணிக்கையாக்கினார்.
— "தேவரின் கலைப்பயணம்' என்ற நூலிலிருந்து...
***
முத்தைப் போல், சங்கும் பல நூற்றாண்டுகளாக இந்தியாவிலும், இலங்கையிலும் வியாபாரத் துறையில் முக்கியமாக இருந்து வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், உலகச் சந்தையில் இந்தியச் சங்குக்கு நல்ல மதிப்பு இருந்தது.
சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி முதலிய பழைய தமிழ் இலக்கியங்களில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தென்னிந்தியாவில் பாண்டியரின் அரசாட்சியில் சங்கு குளித்தலையும், சங்கு வியாபாரம் பற்றியும், பல இடங்களில் குறிப்பிட்டிருந்ததையும் காணலாம். 1292ல், இந்தியாவைக் காண வந்த மார்க்க போலோ, அன்றைய திருநெல்வேலியில் இருந்த, "காயல்' என்ற இடத்தை குறித்து விவரிக்கும் போது, சங்கு குளித்தலை பாண்டிய அரசு, நேரில் கவனித்து வந்தது என்று எழுதி இருக்கிறார். பாண்டியருக்கு பிறகு டச்சுக்காரர், அதன் பின் போர்த்துக்கீசியர் ஆகியோர், இதைக் கவனித்து வந்தனர். பின், கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் ஓங்கவே, சங்கு வியாபாரம் அவர்களின் ஏக போக உரிமையாயிற்று. தமிழகத்தில், தூத்துக் குடியிலிருந்து தான் அதிக அளவு சங்கு கிடைக்கிறது.
— "பெருமைமிகு பாரதம்' நூலிலிருந்து...
***
நடுத்தெரு நாராயணன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.