அட்சயாவுக்கு பொருத்தம் கலைமாமணி கிருஷ்ணகுமாரி நரேந்திரனின், அபிநயா நாட்டியாலயாவின் கலை வாரிசு அட்சயா அருண்குமார். நாட்டிய கலையை தனஞ்செயனிடமிருந்து துவங்கி, கிருஷ்ணகுமாரியிடம் பட்டை தீட்டப்பட்டு, நாட்டிய தாரகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வருட இசை விழாவில், சென்னை கல்சுரல் அகடமிக்காக, ராமராவ் கலாமண்டபத்தில், தன் நடன நிகழ்ச்சியை, மூஷிக வாகனன் கணபதியை பணிந்து துவக்கினார். முற்றிலும், வித்தியாசமாக முத்தான பாடல் மீனாட்சி சுந்தரம் இயற்றியது. பல அற்புதமான பாடல்களை, அள்ளி அள்ளி பொக்கிஷமாக கொடுத்தவர்.
முதல் பாடலாக, அட்சயாவுக்கு நடன அமைப்பு செய்து கொடுத்தது சிறப்பு (ரட்சமாம் சரணாகதம் - நாட்டை) "ரட்சமாம் சரணாகதம் என்னைக் காத்தருள்வாய் நின் காலடி பணிந்து போற்றுகிறேன்' என்று பத்மநாபனை பட்சி வாகனனாக, அனந்த சயனனாக என்று பரந்தாமனை, நான் மட்டுமல்லாது அனைத்து ரிஷிகள், தேவ முனிகள் என்று, இவரது புகழை யாரெல்லாம் துதித்து வணங்கியவர்கள் என்பதை, தன் நடனத்தில் கங்கை நீரை சொப்பினுள் அடக்குவது போல் காட்டி விட்டார் அட்சயா.
அடுத்த பாடல், சியாமா சாஸ்திரியின் மிகப் புகழ் பெற்ற பைரவி ராக காமாட்சி எனத் துவங்கும், ஸ்வர ஜதி. மிகப் பெரிய அற்புதமான, கடினமான பாடல் மிச்ர சாபு தாளத்தில் அமைந்ததை எடுத்து, ஆடத் துவங்கினார். பொதுவாக, நடனமாடும் பலர் பாட்டு கற்றுக் கொள்வதில்லை. ஆனால், பாட்டை முறைப்படிக் கற்றுக் கொண்டு, நடனம் ஆடினால் எப்படி இருக்கும் என்பதை, அட்சயாவின் நடனத்தில், நம்மால் எளிதில் பார்க்க முடிந்தது.
கிரிஜா ராமசுவாமி குரலிசையில், அட்சயாவுக்குப் பக்க பலமாக அமைய (வயலினில் எம்.எஸ்.கண்ணன், குழலில் தேவராஜ்) விறுவிறுப்பாய் அமைந்தது. காமாட்சியை, காஞ்சியிலே எப்படி கொலு வீற்றிருப்பாள் என்பதை, சியாமா சாஸ்திரி பாதாதி கேசவ வர்ணனையை அனுபவித்து எழுதினாரோ, அதை தன் மனதில் வரிந்து, புரிந்து ஆடினார். யோகி சுராஜானந்தா இயற்றியுள்ள பெஹக் ராக, "முருகனின் மறுபெயர் அழகு' என்ற அற்புதமான பாடலுக்கு, அட்சயாவின் நடனம் அற்புதம்.
தெய்வங்கள் முருகனின் அழகைக் கண்டு வியந்ததை, விருத்தமாக பாடலில் கொடுத்து, பாடலை துவங்கினார் அட்சயா.
"முருகனின் மறுபெயர் அழகு' பாடலின் சரண வரிகளில், துறவியாய் நின்ற திருவான முருகனை பழனியில் கொண்டு நிறுத்தி, தரிசனம் கொடுத்தார் தன் நடனத்தில். குன்னக்குடி வைத்தியநாதன் இயற்றிய, ரேவதி ராக தில்லானாவை இறுதியாக கொடுத்தார். பொதுவாக, தில்லானாவின் இறுதியில் சாகித்ய பகுதி இருக்கும். இதில், துவக்கத்திலேயே ஜதியுடன், காயத்ரி மந்திரத்தை பாடலாக இணைத்து கொடுத்து கணபதி, முருகன், லட்சுமி, முத்துக்கிருஷ்ணன் என்று, முக்கியமான காயத்ரி மந்திரங்களுக்கு விளக்கம் கொடுத்து ஆடி, நாதப்ரம்ம மய இறைவனுக்கு, தன் நடனத்தால் மகிழ்வித்து பூஜை செய்தார்.
பாடப் பாட ராகம், ஆட ஆட அபிநயம் என்று அட்சா புரிந்து கொண்டு ஆடியதால், நல்ல நடனத்தை கொடுக்க முடிந்தது.
- ரசிகப்ரியா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.