கோபுரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு, "என் வேண்டுகோளுக்கு இணங்கா விட்டால், கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வேன்' என்று மிரட்டிய வாலிபன்.
தொலைக்காட்சி டவர் மீது ஏறி, கீழே இறங்க மறுத்த இளைஞன். இப்படியெல்லாம் செய்திகளைப் படித்திருப்பீர்கள். பொது மக்களின் கவனத்தைக் கவர்வதற்காக, இப்படிப்பட்ட அசட்டுத்தனமான, அபாயமான காரியங்களைச் செய்பவர்கள் இப்போது மட்டுமல்ல... பண்டைக் காலத்திலேயே, பல தேசங்களிலும் இருந்திருக்கின்றனர்.
வித்தை காட்டிப் பிழைக்கும் கூழைக் கூத்தாடிகள்தான், உயரமான மூங்கில் கம்பின் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டு, பிரமிப்பூட்டுவார்கள். அது கொஞ்ச நேரம்தான். ஆனால், சாகசம் புரிவதற்காக இப்படி கம்பத்தின் மீது இரண்டு வாரம் கீழே இறங்காமல் உட்கார்ந்திருந்த வர்களும் உண்டு. இப்போது பலர் பலவிதமான சாகசங்களைப் புரிவது தங்கள் பெயர் கின்னஸ் புத்தகத்தில் வரவேண்டும் என்பதற் காகத்தான். ஆனால், இதோ இவனைப் பாருங்கள்.
ஷிப்ரெக் கெல்வி என்பவன் பன்னிரண்டு நாளும், பன்னிரண்டு மணியும் ஓர் உயரமான கம்பத்தின் மீது நின்று சாகசம் புரிந்திருக்கிறான். இவனைத் தோற்கடிக்கும் விதமாக, டென்வரைச் சேர்ந்த ஸ்பைடர் ஹெயின்ஸ் என்பவர், இன்னும் நான்கு நாள் அதிகமாக, கம்பத்தின் மீது உட்கார்ந்து காட்டி இருக்கிறார்.
கொடிக் கம்பத்தின் உச்சியில் உட்கார்ந்து சாகசம் புரிவது சாமானிய விஷயமல்ல... அடுக்குமாடிக் கட்டடத்தின் உச்சியில் காற்றின் வேகம் எக்கச்சக்கமாக இருக்கும். அதையும் தாக்குபிடித்தபடி அதில் தொத்திக் கொண்டு இருப்பது என்றால்...! இருபத் தெட்டு வயதுப் பெண் ஒருத்தி இந்த அசுர சாதனையை புரிந்திருக்கிறாள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில். "பஸ் பாபி மாக்' என்பது அவள் பெயர். அந்தரத்தியே கொடி மரத்தில் மூன்று வாரம் இருந்திருக்கிறாள்.
தரையிலிருந்து 637 அடி உயரமுள்ள சிகாகோ நகரின் மாரிசன் ஓட்டல் கொடிக் கம்பத்தின் மீது ஜோ பவர்ஸ் என்பவர் 16 நாள் 2 மணி, 35 நிமிடங்கள் அமர்ந்து அசர வைத்து இறங்கி இருக்கிறார். பலன் அவருக்கு 6 பல் போயிற்று கால்கள் வீங்கிப் போயின. நடக்க முடியாமல் பாதத்தின் நரம்புகள் பாழ்பட்டன. தலை முடி சடைபிடித்துப் போயிற்று. நீண்ட தாடி வளர்ந்தது. முகம் கருத்துப் போய், கழுத்து சூரிய வெப்பத்தால் வெந்து போயிற்று! இவ்வளவு அவஸ்தைகளையும் தாங்கிப் கொண்டு அப்படிக் கொடிக் கம்பத்தின் மீது உட்கார்ந்து என்ன சாதனை வேண்டிக் கிடக்கிறது என்கிறீர்களா? மனிதனின் எத்தனையோ வக்கிர புத்திகளில் இதுவும் ஒன்று.
நெப்போலியனின் படையில், எகிப்தில் சாவன் என்றொரு போர் வீரன். அவனிடம் ஒரு சமயம் மேலதிகாரி ஒரு காரியத்தைச் செய்யும்படி கூறினார்.
"அந்த வேலையெல்லாம் செய்ய முடியாது. நான் ரொம்பப் பலவீன மானவன்; வேலை எதுவும் செய்ய முடியாது. பேசாமல் உட்கார்ந் திருக்கவே விரும்புகிறேன்' என்றான்.
அவன் வார்த்தையை ஏற்றுக் கொண்டனர். அவன் விருப்பப்படி, சும்மா உட்கார்ந்திருக்கும் ஒரு பணியைச் செய்யும்படி கூறினர். என்ன பணி?
ஒரு தூணின் உச்சியில் ஒரு பறவையின் கூட்டை அமைத்து, அதில் கோழி முட்டைகளை வைத்து அதன் மீது அமர்ந்து அடைகாக்கும்படி செய்தனர். அவன் விருப்பப்படியே சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிற ஒரு வேலையைக் கொடுத்து விட்டனர் என்று உட்கார்ந்திருந்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிப்பட்டன.
இப்படி கொடிக் கம்பத்திலும், தூணின் உச்சியிலும் உட்கார்ந்து சாதனை புரிந்தவர்களில் ரொம்ப பிரபலமான மனிதன் சைமன் என்பவர்.
அலெக்ஸாண்ட்ரியாவிலுள்ள சலவைக் கல் தூணின் உச்சியில், 69 வருடங்கள் கீழே இறங்காமலேயே அமர்ந்திருந்து, அதிலேயே சமாதியும் அடைந்திருக்கிறார் என்றால் பிரமிப்பாக இருக்கிறதில்லையா? இவர் ஒரு சன்னியாசி. சின்னப் பையனாக இருக்கும் போதே, சைமன் இந்தச் சலவைக் கல்தூண் மீது ஏறி உட்கார்ந்து விட்டார். மூன்றடி குறுக்களவே உள்ள வட்ட வடிவத்தூண் உச்சி, இவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். சிரியா, எகிப்து நாடுகளில் இதுபோன்ற சலவைக் கல் தூண்கள் நிறைய இருக் கின்றன. ஒவ்வொரு தூணும் ஒரு கதை சொல்லக்கூடியவை. கீழே இறங்காமல் பல வருடங்களை இத்தூணின் மீது அமர்ந்தபடியே நாட்களைக் கழிக்கும் சன்னியாசிகளுக்கு உணவை மேலே அனுப்புவார்களாம்!
இப்போது சொல்லுங்கள் கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு “குதிக்கப் போகிறேன்’ என்று கூறுபவர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.