அன்புள்ள அம்மாவுக்கு—
எனக்கு வயது 24; என் கணவருக்கு 26. நானும், என் கணவரும், ஆறு வருடங்களாக காதலித்தோம். அப்போது, இருவருக்கும், சிறு சிறு மோதல்கள் வரும்; அது, உடனே மறைந்து விடும். நான் யாருடன் பேசினாலும், என்னவர் மிகவும் சந்தேகப்படுவார். நான் அப்படிப்பட்ட பெண் இல்லை என்பதை புரிய வைக்க, என் மீது தீ வைத்துக் கொண்டேன். என்னை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றி விட்டனர். இன்றும் என்னுடம்பில், தீக்காயங்களின் வடுக்கள் உள்ளன. இச்சம்பவத்துக்கு பின், என் நேர்மையான நடத்தையை, என் கணவர் புரிந்து கொண்டார். மூன்றரை வருடங்களுக்கு முன், நாங்கள் இரு வீட்டாருக்கும் தெரியாமல், இந்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம். ஆனாலும், திருமணமானதை வெளிக்காட்டாமல், நாங்கள் இருவரும் அவரவர் வீட்டில்தான் வசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இருவரும், இரு வீட்டாரின் சம்மதம் கிடைக்க காத்திருக்கிறோம்.
என் கணவரின் பெற்றோர், காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். மாமா இந்து; அத்தை கிறிஸ்துவம். என் கணவருக்கு, ஐந்து வயதாய் இருக்கும் போதே, மாமா இறந்து விட்டார். அதன்பின், என் கணவரை கிறிஸ்துவ முறைப்படித்தான் வளர்த்திருக்கிறார் என் அத்தை. ஆனால், பள்ளி சான்றிதழிலும், எங்கள் திருமண சான்றிதழிலும், என் கணவர் இந்து என்றே குறிப்பிடப்பட்டிருப்பார். என் கணவர் விரும்பினால், உடனே கிறிஸ்துவ மதத்திற்கு மாற தயாராக இருக்கிறேன் அம்மா. அவருக்காக நான் பைபிள் வாசித்திருக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன், என் கணவரிடம், "உங்க அம்மாவிடம் பேசி, நாம் சேர்ந்து வாழ, நம் திருமணத்தை ஊரறிய செய்யுங்கள்...' என்றேன். "சரி' என்றாரே தவிர, சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. "என்னுடன் வாழ நினைக் கிறீர்களா... இல்லை என்னை கை கழுவி விட்டு, ஓட நினைக்கிறீர்களா?' என கத்தினேன். நான் போனில் கத்தியதை, அம்மாவுக்கும், நண்பர்களுக்கும், கான்பரன்ஸ் கால் போட்டு, வெட்ட வெளிச்சமாக்கி விட்டார் என்னவர்.
அதை தொடர்ந்து நான் போன் செய்தால், போனை எடுப்பதில்லை. அவரின் நண்பர்களுக்கு போன் போட்டால், அவர்களும் சரியான பதில் சொல்ல மறுக்கின்றனர். கடைசியாக, அத்தையிடம் போனில் கெஞ்சி, கதறி விசாரித்தேன். மகன் எங்கோ கோபித்துக் கொண்டு போய் விட்டான் என, பத்து நாட்கள் இழுத்தடித்தார்.
பதினைந்து நாட்களுக்கு பின், என்னவர் பணிபுரியும் அலுவலகத்திற்கு போனில் பேசினேன். தரைபேசியை கத்தரித்து விட்டு, மொபைல் போன் லைனுக்கு வந்தார். "15 நாட்கள் எங்கு போயிருந்தீர்கள்?' என கேட்டதற்கு, "பெங்களூருவில் இருக்கும் சித்தி வீட்டுக்கு போனேன்...' என்றார். 15 நாட்கள் அம்மாவிடம் பேசினீர்களா என்றேன். "ஆமாம்... பேசினேன்...' என்றார். "நீங்கள் பெங்களூருவில் இருப்பதை, உங்கம்மா சொல்லவில்லையே...' என்றேன்; "நான்தான் சொல்ல வேண்டாம் என்றேன்...' என்றார். இடையில், என்னவரின் அலுவலக நண்பருக்கு போன் செய்தேன். அவர், "உன்னவர், 15 நாட்களாக பெங்களூரு போகவில்லை; தினம் அலுவலகம் வந்து போனார்...' என்று கூறினார்; உண்மை வெளிப்பட்டது.
நான் ஒவ்வொரு முறையும் என்னவருடன் போனில் பேசும் போது, பேச்சை கான்பரன்ஸ் காலில் போட்டு, அம்மாவை கேட்க செய்து விடுகிறார். நான், அவர் அலுவலகத்திற்கு போன் செய்த அன்றே, என் அத்தை, என் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு விவாகரத்து ஏற்பாடு செய்ய சொல்லியிருக்கிறார்; நான் மறுத்தேன்.
ஒரு ஞாயிற்றுகிழமை, என்னவரும், அவர் தாயாரும் எங்கள் வீட்டிற்கு வந்தனர். "பதிவு திருமணம் செய்து, மூன்றரை வருடம் என்னை ஏன் அலைக்கழிக்கிறீர்கள்?' என என்னவரை கேட்டேன். அவர், என் பெற்றோரிடம், "உங்கள் மகள் எனக்கு வேண்டவே வேண்டாம்...' என்றார். "இப்போது வேண்டாம் என்று சொல்லும் இவர், என்னுடன் பலமுறை தாம்பத்யம் வைத்தார்...' என்றேன். "தாம்பத்யம்தானே வச்சுக்கிட்டீங்க... குழந்தை கிழந்தை பெத்துக்கலையே... அவன் வேணான்றான். நீயும் விட்டு விலகிப் போயிடு...' என்றார் அவரின் தாயார். "இந்த காலத்துல அபார்ஷன் செய்துகிட்டு கூட, வேற கல்யாணம் செய்துக்கிறாங்க எனவும் கூறினார்...'
அத்தையின் முறையற்ற பேச்சை கேட்டு, ஊமையாய் வீற்றிருந்த என்னவரை, ஒரு அறை அறைந்தேன்; என் அம்மா என்னை அறைந்தார். என்னவர் வெளியே போய் விட்டார். நான், "என் கணவரை விட்டு விலகுகிறேன்...' என ஒரு கடிதம் எழுதி தரச் சொன்னார் அத்தை; மறுத்தேன். பதிவு திருமணத்தின் ஒரு நகலை தரச் சொல்லி கேட்டனர் என் பெற்றோர்; இன்று வரை என் அத்தை தரவில்லை.
தொடர்ந்து கணவருடன் போன் யுத்தம் செய்தேன். ஒரு தடவை, "ஏன் இப்படி ஒழுங்கீனமாக நடக்கிறீர்கள்?' என கேட்டேன். "இப்படி நடந்தால்தான் நமக்கு சாதகமாய் ஒரு தீர்வு கிடைக்கும்...' என்றார். தன் நடவடிக்கைகளுக்காக மன்னிப்பும் கேட்டார். பாம்புக்கு தலையும், மீனுக்கும் வாலையும் காட்டியபடி என்னிடம் பேச ஆரம்பித்தார் என்னவர். தொடர்ந்து, என்னை விவாகரத்து செய்ய கூறுகிறார் அத்தை.
சமீபத்தில் எனக்கு உடல்நலமில்லாத போது போனிலோ, நேரிலோ என்னை நலம் விசாரிக்கவில்லை. ஆனால், அவரது அண்ணிக்கு உடல்நலமில்லாத போது, அவரை அடிக்கடி, நேரில் போய் பார்த்து வந்திருக்கிறார்.
தன் சம்பள பணத்தை முழுவதும் "அம்மாவிடம் கொடுத்து, கை செலவுக்கு, 10 - 20 ரூபாய் பெற்றுக் கொள்வார். நான், சிறிது பணத்தை நம் எதிர்காலத்திற்காக சேர்த்து வையுங்கள்' என்றேன். இவரும் சம்பள பணத்தில், 2,500 ரூபாய் எடுத்துக் கொண்டு, அம்மாவிடம் கொடுத்திருக்கிறார். அம்மா விஷயமறிந்து, "தாம்தூம்' என்று குதித்திருக்கிறார். இவரும், "எனக்கு தப்பு, தப்பா சொல்லிக் கொடுத்து, குடும்பத்தை பிரிக்க பார்க்கிறாயா?' என்கிறார். பத்து தடவை சேர்ந்து வாழ பிரியமில்லை என்கிறார்; பத்து தடவை சேர்ந்து வாழ பிரியம் என்கிறார் என்னவர்.
நான் எதற்காகவும், யாருக்காகவும் என் கணவரை விட்டுக் கொடுக்க மாட்டேன் அம்மா. இந்த பிரச்னைக்கு தீர்வு சொல்லுங்கள்.
—அன்பு மகள்.
அன்புள்ள மகளுக்கு —
இன்றைய இளம் தலைமுறையினர், தமிழ் சினிமாக்களை பார்த்துதான், வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். "அலைபாயுதே' படம் பார்த்துதான், பதிவு திருமணம் செய்து, அவரவர் வீட்டில் அப்பாவியாக இருந்திருக்கிறீர்கள். நேரம் வரும் போது, இருவர் வீட்டிலும் பேசி, சம்மதம் வாங்கிக் கொள்வோம் என்ற எண்ணம் தான் இருவருக்கும். இது மாதிரியான ரகசிய பதிவுத் திருமணங்கள், மிகவும் ஆபத்தானவை.
உன் கணவன் கிறிஸ்துவ முறைப்படி வளர்க்கப்பட்டாலும், பிறப்பின்படி, சான்றிதழ்படி அவன் இந்து மதத்தை சேர்ந்தவனே. உங்களது திருமணமும், இந்து திருமண சட்டப்படிதான் நடந்திருக்கிறது. உங்கள் இருவரையும் பிரிப்பது எளிதானதல்ல. திருமணத்தின் போது இருவருமே மேஜர். உனக்கு, 21 வயது நிரம்பியிருந்திருக்கிறது. உன் கணவருக்கு 23. திருமணம் ஆன கையோடு தனிக்குடித்தனம் போயிருக்க வேண்டும். அடுத்த, பத்து மாதத்தில், ஒரு குழந்தையை பெற்று, மாமியாரிடம் நீட்டியிருக்க வேண்டும்.
நீ உத்தமி என்பதை நிரூபிக்க தீக்குளித்திருக்கிறாய். அதனால், உன் தோற்றம் மாறி போயிருக்கக் கூடும். அதனால் கூட, உன் கணவன், உன்னுடன் சேர்ந்து வாழ தயக்கம் காட்டலாம். நீ காதல் கணவனை தக்க வைத்துக் கொள்ள, கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும் அது தீர்வாகாது. உன் அத்தைக்கு, உன் மீது வேறு வகையான அதிருப்திகள் பல இருக்கலாம்.
கல்யாணமாகி மூன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன என்ற உரிமையில், நீ, உன் கணவனுடன் சண்டை போடுகிறாய். ஆனால், உன் மாமியாரை பொறுத்தவரை, அவரது தலையாட்டலுக்கு பிறகுதான் உங்கள் கல்யாணம் அவர்கள் வீட்டில் செல்லுபடியாகும் என்ற நிலை. காரியம் ஆகும் வரை, நீ வாயை அடக்காமல், வாயைத் திறந்து சண்டைக்காரி, அடங்காபிடாரி போன்ற பட்டங்கள் பெற்றிருக்கிறாய். உனக்கு சாமர்த்தியம் போதவில்லை. கணவனின் இதயத்தை திருடிய உனக்கு, மாமியாரின் இதயத்தை திருட தெரியவில்லை.
மாமியாரை கன்வின்ஸ் செய்து, மருமகளாக அவர்களது வீட்டுக்குள் நுழைவதுதான் உன் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, மாமியாருக்கு கணவன் கொடுக்கும் பணத்தை குறைத்துக் கொடுக்கச் சொல்லி, மாமியாரிடம் கூடுதல் அவப்பெயர் வாங்கி இருக்கிறாய்.
உன் சார்பில், உனக்காக பேச யாருமே இல்லையா? உன் பெற்றோர், இரும்புக் கோட்டை போல் நிமிர்ந்து நின்று, உன் சார்பாக போராடினால், பிரச்னை தூள், தூளாகி விடும்.
* அம்மாவுக்கு அவர் முழு சம்பளம் தரட்டும். கணவனை, உன் வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்து. முதல் மூன்று வருடங்களில், இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள பார்.
*உன் கணவனோ, மாமியாரோ படிந்து வராவிட்டால், இருவர் மீதும் போலீசில் புகார் கொடுப்பேன் என சொல். கணவர் வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்று, கணவனின் மேலதிகாரியை சந்தி. உங்களின் திருமணம் பற்றி கூறி, சட்டவாரிசாக உன் பெயரை அலுவலகப் படிவங்களில் பூர்த்தி செய்ய வை.
* உன் மாமியாருக்கு, உன் தரப்பு நியாயங்களை உள்ளடக்கிய அன்பு கடிதம் போடு. நீ செய்யாத தவறுகளுக்கும் மன்னிப்பு கேள்.
*கணவனை துரத்துவதை முழு நேரப் பணியாக கொள்ளாமல் வேலைக்கு போ. உன் தற்கொலை எண்ணம் எதிராளிகளுக்கு வெற்றியாகி விடும் - தூர எறி.
*பேச்சைக் குறை; செயலை கூட்டு. கணவரிடம் வாய் சண்டை போட மாட்டேன் என சத்தியம் செய்து கொள். இவள் இல்லாமல் நாம் வாழ முடியாது அல்லது வாழவே விட மாட்டாள் என்ற எண்ணத்தை உன் கணவனுக்குள்
விதை.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
திருமதி கௌசல்யா அம்மா அவர்களுக்கு, இனிய திருமண வணக்கங்கள் ........!
உங்களை வாழ்த்த வயதும் இல்லை, அனுபவமும் இல்லை வணங்குகிறேன் ...
நான் NB தலைப்பில் நான் கேட்ட என்னுடைய அனைத்து கஷ்டங்களுக்கும் நீங்கள் அனைவரும் கூறிய ஆலோசனையின் படி இப்போது என் அம்மா வீட்டில் இருக்கிறேன். இப்போது நான்கு மாதம் என்னோட தாய்மையை என்னால் நன்கு உணர முடிகிறது . நீங்கள் கூறியபடி உங்களுடைய அடுத்த மணி விழாவிற்கு உங்களுடைய 7 வது பேர பிள்ளையுடன்
அன்பு கெளசல்யா மாமிக்கும் மாமாவிற்கும்
திருமண நாள் வணக்கங்கள். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம். பிரார்த்திக்க வயதில்லை. வேண்டுகிறோம். மென்மேலும் பற்பல திருமண நாள் விழாக்களை உங்கள் சொந்தங்களுடனும் எங்கள் பந்தங்களுடனும் கொண்டாட மனமார்ந்த நல்வாழ்த்துகள். உங்கள் ஆசீகளும் அறிவுரைகளும் அன்பும் அரவணைப்பும் என்றென்றும் எங்களுக்குத் தேவை. உங்கள் உடல் நலனையும் மாமாவையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் போதும் ஓய்வு நேரத்தின் போதும் ஆலோசனைகள் சொன்னால் போதும். அழகுச் சேலையில் பேரன், பேத்திகள் படை சூழ, பிள்ளை, பெண்கள் படை சூழ மாமாவுடன் நாணத்துடன் நீங்கள் வெட்கப்புன்னகை சிந்தும் காட்சி என் கற்பனையில் விரிகிறது. ஆயுளும் அன்பும் பெருகவும் நன்றிகள் நவிலவும் கோவில் வழிபாடு, வாழை இலையில் வடை பாயசத்துடன் சாப்பாடு, மலரும் நினைவுகளாய் வாழ்ந்த அனுபவங்களின் அசை, புதிய ஆடைகள் சரசரக்க அனைவருக்கும் ஆசிகள் வழங்க.....அழகாக அரங்கேறுகிறது உங்கள் திருமண விழா. என்றென்றும் நலமாகப் பல்லாண்டு பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறோம்.
சிடி அவர்களுக்கு, மிக்க மகிழ்ச்சி. உங்கள் மனதைப் புரிந்து கொண்ட நீங்கள் பழகிய உங்களவரே உங்கள் கணவராக வரப் போகிறார். வாழ்த்துகள். ஒரு நல்ல வாழ்க்கை அமையப் போகிறது. இந்த வாழ்க்கை ஒரு பொக்கிஷம். அதை நல்விதமாய் வாழுங்கள். உங்கள் திருமணத்திற்கு எங்கள் ஆசீர்வாதங்கள். பாராட்டிய உள்ளங்களுக்கும் தோழர்/தோழிகளின் பிரச்சினைகளுக்குத் தோள்கள் கொடுத்த நண்ப- நண்பிகளுக்கும் வாழ்த்துகள்.
ராணிக்கு,
இந்த பகுதியில் பெரும்பாலும் எல்லோரும் உங்களை சாடி இருக்கிறார்கள். நீங்களே மற்றவர்கள் இதை தவறு என்று கூறுவார்கள் என்று எழுதி இருக்கிறீர்கள். ஆனால் மீனவன் சார் ஒவ்வொரு வரியிலும் உங்களை "தாயே" என்று அழைத்திருக்கிறார்....... எனக்கே இதயத்தில் சுரீர் என்று வலித்தது....... உங்களுக்கும் வலிக்க வேண்டும்.
"அனாதை என்ற எண்ணத்தை உங்களிடமிருந்து அகற்றியவன் அன்னியனானான். உங்களை இன்று மீண்டும் அனாதையாக்குகிறவன் அனைத்தும் ஆனான் .இல்லையா?"
கண்டிப்பாக இந்த கேள்விக்கு உங்களுடைய பதில் வேண்டும். உங்களுக்கு தமிழ் படிக்க தெரிந்தால் மீனவன் சார் பதிலை நீங்கள் படித்தால் நீங்கள் மாறி விடுவீர்கள் எனக்கு நம்பிக்கை இருக்கிறது..........அன்புடன் மாயா......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.