திரு.வி.க., நகர் : தகுந்த இடம் கிடைக்காமல், திரு.வி.க., நகரில் செயல்பட வேண்டிய போலீஸ் ஸ்டேஷன், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரவள்ளூரில் செயல்பட்டு வருகிறது. இதனால், புகார் கொடுக்க வரும் பொதுமக்கள், பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டியுள்ளது.
திரு.வி.க., நகர் பஸ் நிலையம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது. கடந்த 2007ம் ஆண்டு அந்த இடத்தை, மாநகராட்சியின் தேவைக்காக கோர்ட் மூலம் கைப்பற்றியது.போலீஸ் ஸ்டேஷன் அமைப்பதற்காக பல கட்டடங்கள் வாடகைக்கு கோரப்பட்டது. ஆனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு இடம் கொடுக்க பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை.இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரவள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் மேல் தளத்தில் திரு.வி.க., நகர் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது.இதனால், புகார் கொடுக்கச் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்ட திரு.வி.க., நகர் போலீஸ் ஸ்டேஷன், இன்று வரை அங்கேயே செயல்பட்டு வருகிறது.இப்பகுதியில் தகராறு, அடிதடி சம்பவங்கள் நடந்தாலும் போலீசார் உடனடியாக வர முடிவதில்லை.புகார் அளிக்க, ஐந்து கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழிப்பறி, கொலை, கொள்ளை என ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.பல்வேறு காரணங் களுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு இடம் கொடுக்க இப்பகுதி மக்கள் தயங்குகின்றனர். இதுகுறித்து, மாநகராட்சியும் கண்டுகொள்வது இல்லை. காவல் துறை உயர் அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், இங்கு ஸ்டேஷன் அமைவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
இந்நிலையில், வியாசர் பாடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மேயர் சுப்ரமணியனிடம், புளியந்தோப்பு துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் கிங்ஸ்லி, திரு.வி.க., நகர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க இடம் கோரினர்.அதற்கு மேயர், "மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுங்கள் பரிசீலனை செய்கிறோம்' என்றார்.திரு.வி.க., நகர் பகுதி மக்களின் இரண்டு ஆண்டு கோரிக்கையான போலீஸ் ஸ்டேஷன் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
| வாசகர் கருத்து |