ராஜபாளையம் : அரசின் முறையான அனுமதியின்றி ராஜபாளையம் ஊரணியில் சுற்றுச்சுவர் கட்டுவதை வருவாய்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
ராஜபாளையம் திரவுபதியம்மன் கோயில் அருகே வடுக ஊரணி அமைந்துள் ளது. பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் மண் மேவிக் கிடந்தது. இதை சீர்ப்படுத்தி தூர்வாரினால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் உயரும் என அப்பகுதியில் வசிப்போரும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே தர்மாபுரம் ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் கோயில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் உள்ளிட்டோர், கலெக்டர் சிஜி தாமசிடம் மனுச்செய்து, தங்கள் சொந்த செலவில் தூர்வாருவதற்கு வாய்மொழியாக அனுமதி பெற்றனர். 12 அடிஆழத்திற்கு தூர்வாரும் பணிகள் நடந்து முடிந்தன. பின், சுற்றுச்சுவரை உயர்த்திக் கட்டும் பணி நடந்தது.இந்நிலையில், ஊரணியில் அரசின் அனுமதியின்றி எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று வருவாய்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சுற்றுச்சுவர் கட்டும் பணி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் கூறுகையில், ""ஊரணியை ஆக்கிரமிப்பதற்கான எந்தவிதமான முயற்சிகளையும் நாங்கள் செய்யவில்லை. முழுக்க முழுக்க பொது நலன் கருதி தான், ஊரணியை தூர்வாரினோம். வீடுகளின் இடிபாடுகள், கழிவுகள், குப்பைகளை மீண்டும் ஊரணியில் கொட்டி மெத்திவிடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு கருதி, தற்போது சுற்றுச்சுவர் எழுப்பி வருகிறோம். 390 அடி நீளத்திற்கு சுவர் கட்டப்பட்டுவிட்டது. இன்னும் 65 அடி நீளத்திற்கு சுவரும், "கேட்'டும் மட்டுமே அமைக்க வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு வருவாய்துறையினர் தடை விதித்துவிட்டனர். ஊரணியை பாதுகாக்க நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதுடன், ஊரணியை சர்வே செய்து அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இது தொடர்பாக தாசில்தார் காளிமுத்துவிடம் கேட்டபோது, ""அரசின் முறையான அனுமதியின்றி ஊரணியில் எந்தவிதமான கட்டுமான பணிகளையும் தனியார் யாரும் மேற்கொள்ளக்கூடாது என சிவகாசி ஆர்.டி.ஓ., காசி விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். மீறிச் செயல் பட்டால், அதை ஆக்கிரமிப்பாகதான் கருத வேண் டியிருக்கும்'' என்றார்.
| வாசகர் கருத்து |
என்னையா நீங்கள் ஆர் டி வோ காசிவிஸ்வநாதன் அவருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் (மனு) செய்ய வேண்டியதை செய்வார்.
|
by D மநோகர் ராஜ் ,LONDON,United Kingdom 11/4/2009 3:44:21 PM IST |