மதுரை : மதுரையின் அடையாளமான கடம்பமரங்களை மீண்டும் நட வனத்துறையினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு காலத்தில் நீர்க்கடம்ப மரங்களால் சூழ்ந்திருந்த மதுரை, "கடம்பவனம்' என அழைக்கப்பட்டது. படிப்படியான நகரமயமாக்கலினால் அவை அழிக்கப் பட்டன. எஞ்சியுள்ள கடம்பமரங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோவில் மலையில் மட்டுமே இன்றும் சாட்சியாக உள்ளன. நீர்க்கடம்பு, வெள்ளைக்கடம்பு, மஞ்சள் கடம்பு வகைகள் உள்ளன. இதன் தாய்நாடு இந்தியா. புனிதமரமாக கருதப்படுகிறது. இவை தேக்குபோன்று தடிமரங்கள், பர்னிச்சர்கள், காகிதம் தயாரிக்க பயன்படுகிறது. நீர்க்கடம்பு வளர அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது மதுரையில் நீர்வளம் குறைந்து வருவதால் அதை வளர்ப்பது மிகவும் கடினம். அதற்கு மாற்றாக வெள்ளைகடம்பை மதுரையில் வளர்க்க வனத்துறையினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி ஆரோவில் இருந்து 500 வெள்ளைக் கடம்புமர நாற்றுக்களை வாங்கி மதுரை அருகே வேம்பரளி வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் நட்டுள்ளனர். இவை ஆறு ஆண்டுகளில் நன்கு வளர்ச்சியடைந்ததும் விதையை சேகரித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும். பின் நாற்றுக்கள் உற்பத்தி செய்து மதுரையில் கடம்பமரம் நடப்படும். விதை கடுகு அல்லது எள் போல் இருக்கும். ஒரு கிலோவில் 90 ஆயிரம் விதைகள் இருக்கும். இதன் பாகங்கள் மருத்துவ குணம் கொண்டவை. விதை தலைவலியை குணமாக்கும். பழம் ரத்தத்தை சுத்திகரிக்கும். மரப்பட்டைகள் மனிதர்களின் உடல்வலி, காய்ச்சலை போக்கும். இலைகள்கால்நடைகளுக்கு உணவாகின்றன.
| வாசகர் கருத்து |