ஊட்டி: கொடநாடு அண்ணா நகர் வழி பிரச்னையில், எஸ்டேட் நிர்வாகத்துக்கு எதிராக ஊராட்சி தலைவர் பொன்தோஸ், "செக்-போஸ்ட்' அமைத்துள்ளதால், எஸ்டேட் வாகனங்கள் உட்பட பொதுமக்களும் மூன்று கி.மீ., தூரம் கூடுதலாக செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கொடநாடு பகுதியில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அண்ணா நகர், காமராஜர் நகர் ஆகிய கிராமங்கள் உள்ளன. கொடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமங்களுக்கு செல்ல, எஸ்டேட் நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த பிரச்னை தொடர்ந்து வந்த நிலையில், எஸ்டேட் நிர்வாகம் தற்போது, எஸ்டேட் பகுதிகளை "சர்வே' செய்து வேலி அமைத்துள்ளது. இதனால், அண்ணா நகருக்கு செல்லும் சாலை தடைபட்டுள்ளது. இந்நிலையில், எஸ்டேட் பகுதியில் ஜெயலலிதா தங்கும் பழைய பங்களாவுக்கு செல்லும் சாலையில் கொடநாடு ஊராட்சி தலைவர் பொன்தோஸ், "செக்-போஸ்ட்' அமைத்துள்ளதால், எஸ்டேட் வாகனங்கள் உட்பட, பிற கிராம மக்களும் வாகனங்களில் செல்ல வேண்டுமெனில், மூன்று கி.மீ., வரை சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொன்தோஸ் கூறுகையில், ""அண்ணா நகர் வழி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை, இப்பகுதியில் உள்ள செக்-போஸ்டை அகற்ற மாட்டேன்,'' என்றார்.
"கொடநாடு எஸ்டேட்டை அரசு அதிகாரிகளின் முன்னிலையில் முறையாக சர்வே செய்த பின்னர் தான், எங்கள் பகுதியில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. எல்லாமே சட்டப்படி தான் நடந்துள்ளது' என்கிறது எஸ்டேட் வட்டாரம்.
கொடநாடு எஸ்டேட் நிர்வாகம், கொடநாடு ஊராட்சி ஆகியவற்றுக்குள் நடக்கும், "பனிப்போரினால்' கடந்த பல மாதங்களாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், தி.மு.க., - அ.தி.மு.க., தரப்பிலும் அரசியல் "ஆட்டங்களும்' மக்களை முன்வைத்து நடந்து வருகின்றன.
| வாசகர் கருத்து |