சிலருக்கு உடல்ரீதியாக சிறுபாதிப்பு வந்துவிட்டாலே போதும். ""ஐயோ! இறைவா! என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய். என்னைச் சோதிப்பதே உனக்கு வாடிக்கையாகப் போய்விட்டதே!'' என்று புலம்பித் தீர்க்கிறார்கள். இறைவனிடம் நமக்கு தேவையானதைக் கேட்பதில் தவறில்லை. இருப்பினும், இப்படி புலம்புபவருக்கு சில நாட்களுக்கு முன்பு, ஏதோ ஒரு நன்மை நடந்திருக்கும். ஒருவர் கார் வாங்கியிருப்பார், இன்னொருவர் வீடு வாங்கியிருப்பார். ஒரு பெண்மணி நகைகள் வாங்கியிருப்பார். அப்போதெல்லாம், இறைவனுக்கு நன்றி சொல்லக்கூட மறந்த இவர்கள், கஷ்டம் வந்ததும் மட்டும் இறைவனிடம் புலம்புவார்கள். ஆனால், இந்த சம்பவத்தைக் கேட்டால், இவ்வாறு புலம்புவது சரியா, தவறா என தெரிய வரும். ஒருசமயம் மதீனா நகரத் தெரு ஒன்றில், பார்வைற்ற தொழுநோயாளி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த ஹலரத் உமர் பாரூக் (ரலி) அவர்கள், தன் பக்கத்தில் இருந்த நாயகத்தோழர்களைப் பார்த்து, ""இம்மனிதர் மீது இறைவனின் நிஃமத்து உண்டா?'' என்று கேட்டார்கள். உடனே நாயகத்தோழர்கள்,""பார்வையற்றவராகவும், உடல் முழுக்க தொழுநோய் பாதிப்பும் உள்ள இம்மனிதருக்கு அப்படி என்ன நிஃமத் இருக்கிறது?'' என்றார்கள். உடனே ஹலரத் உமர்பாரூக்(ரலி) அவர்கள், ""அவருக்கு அல்லாஹுத்த ஆலா சிறுநீர்க்குழாயைச் சரியாகக் கொடுத்திருப்பதால், அதற்காக இவரும் அல்லாஹ்விற்கு நன்றி செ<லுத்த வேண்டும்,'' என்றார்கள். எனவே, ஒவ்வொரு மனிதனும் இறைவனுக்கு நன்றி செலுத்த கடன்பட்டவனாகவே இருக்கிறான். தெரிந்து கொண்டீர்களா! கஷ்டமாக இருந்தாலும் கூட, அப்போதும் நமக்கு இருக்கிற ஏதோ ஒரு வசதிக்காக இறைவனுக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தியே தீர வேண்டும். சோதனைகளை புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவனின் அருள் மிகவும் உயர்ந்தது என்பதை உணர வேண்டும். அப்படியானால் தான்இறைவனின் கருணைக்கு நாம் பாத்திரமாவோம்.