Advertisement
எல்லாரிடமும் குறைபாடு உண்டு
ஆகஸ்ட் 10,2008,
16:47  IST

* உணவுக்கு ஆசைப்படும் எலி, பொறியில் அகப்பட்டு தவிப்பதுபோல, மாயையான ஆசைகளை விரும்பி அதில் மாட்டிக் கொள்ளாதீர்கள். ஆசையில் சிக்கிக்கொண்டவர்கள் பொறாமை, கர்வம் போன்ற துன்பங்களை அனுபவிக்கின்றனர். இதனால் வாழ்க்கை யே நரகமாக மாறிவிடுகிறது. நீங்கள் சொர்க்கத்தில் வாழ இக்குணத்தை விட்டுவிடுங்கள்.



* ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பரமாத்மாவின் சக்தி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிலத்திற்குள் பல சக்திகள் வெளிவராமல் முடங்கியிருப்பதைப்போல, இந்த சக்தி வெளிப்படாமல் மறைந்து கிடக்கிறது. அறியாமை இருக்கும் வரையில் இந்த சக்தி வெளிப்படாமல்தான் இருக்கும்.



* ஒருவன் எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும், அறிவில் சிறந்தவனாக இருந்தாலும், ஏதேனும் ஒரு விஷயத்தில் அவன் வேறு சிலருக்கு ஏதாவது ஒரு வகையில் குறைந்தவனாகவே இருப்பான். இதுவே, இயற்கை நியதி. எனவே, கற்றவர் கல்லாதவரையும், பணக்காரர்கள் ஏழையையும் இழிவாக நடத்துவது தவறானது.



* தனது விருப்பப்படி செயல்படும் ஒருவர், அச்செயலால் ஏற்படும் எந்த நஷ்டங்களையும் இன்பத்துடனேயே ஏற்றுக்கொள்வார். ஏனெனில், அவர்தான் அந்த துன்பத்திற்கு முழு பொறுப்பாளி ஆகிறார். இவ்வாறு செயல்படுவர் முழு சுதந்திரத்துடன் இருக்கிறார். மற்றொருவர், சுற்றத்தாரின் விருப்பப்படி செயல்களை செய்து அதில் இன்பங்களையே பெற்றாலும், அவர் அடிமையாகவே இருக்கிறார். நீங்கள் சுதந்திரம் பெற்றவர்களாகவே இருங்கள்.

பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement