Advertisement
கடமையே பெரிய வேள்வி
ஆகஸ்ட் 28,2008,
19:32  IST

குழந்தைக்குத் தாய் பேசக் கற்றுக் கொடுக்கிறாள். பேச வேண்டியது குழந்தையே. ஆசான் மாணவனுக்குக் கல்வி போதிக்கிறார். கற்று அதன்படி நடக்க வேண்டியது மாணவனின் கடமையே. இறைவனை மனக் கண்ணின் முன் நிறுத்தி அவனோடு ஒன்றி விடுவது மனிதனின் கடமை.



உன் கடமைகளைச் சரிவர ஆற்ற வேண்டி பிரார்த்தனை செய். கட்டாயம் உன் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்ப்பார். இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, கடமையை மறந்து விடாதே. மாட்டுக்காரன் மேய்ச்சல் காட்டுக்கு ஓட்டித்தான் போவான். மேய வேண்டியது மாடுதானே! உன் கடமையை செய். பலனுக்காக கையேந்தாதே. அதுவே பெரிய வேள்வி ஆகும்.



புடலங்காயில் ஒரு சுமையைக் கட்டினால் வளையாது நீண்டு வளரும். மனிதனுக்கும் கடமை என்னும் சுமையைக் கட்டினால், வளையாது நேராக வாழ்வான். நீ எங்கு சென்றாலும் உன் கடமையைச் செய். உன்னுள் இருந்த நான் வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்.



ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் இறைவன் உன்னுடன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள். நீ அவனுக்கு மிகவும் நெருக்கமானவன். கண் இமைகள் விழியைக் காப்பது போல, இறைவன் உன்னைக் காப்பாற்றுவான். அவன் உன்னை விட்டு விலகமாட்டான். நீயும் அவனை விட்டு விலக முடியாது. இந்த நிமிடத்திலிருந்து எதையும் எதிர்பார்த்துச் செயல்படாதே! மாறாத அன்புடன் உன் கடமையைச் செய்.

 

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement