Advertisement
அன்பு ஒளி பரவட்டும்
அக்டோபர் 30,2008,
08:52  IST

* நாம் நம் கடமையைச் செய்கிறோம் என்பதை மட்டுமே எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதில் வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வியில் முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே கடமையைத் தள்ளிப் போடக் கூடாது. அப்பொறுப்பினை ஆண்டவனிடம் ஒப்படைத்து விட வேண்டும். இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் வெற்றி தோல்விகள் எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை.
* இருண்ட அறையில் அசுத்தமும், தூசியும் நிறைந்து இருக்கும். நாளடைவில் தேள், பாம்பு போன்ற விஷஜந்துக்களும் ஒளிந்து கொள்ள ஏதுவாகும். அதே அறையை சுத்தமாக்கி, கதவு ஜன்னல்களைத் திறந்து வைத்தால் வெளிச்சமும், நல்லகாற்றும் வர வழியுண்டாகும். அதுபோல, மனம் என்னும் வீட்டில் காமம், கர்வம், பொறாமை போன்ற விஷஜந்துக்களை நுழைய விடாமல் அன்பு என்னும் ஒளியை பரப்புங்கள். தூய்மை என்னும் காற்றையும் நிரப்புங்கள்.
* கண்ணிமையில் பூசிய கருநிற மை கண்ணுக்குள் படிவதில்லை. நீரில் இருக்கும் தாமரை மலர் சேற்றினைத் தீண்டுவதில்லை. கடவுளை முற்றிலுமாக உணர்ந்த மனிதர்கள் உலகவாழ்வில் ஈடுபட்டாலும், அவர்கள் மனம் அதில் ஈடுபடுவதில்லை. எப்போதும் இறைவனையே எண்ணிக் கொண்டு இருப்பர்.

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement