Advertisement
கண்ணன் வந்தான் தேரிலே....
செப்டம்பர் 29,2009,
14:14  IST

ஓர் கனவு கண்டேன். அதில் என் கண்கள் துயில் கொள்ளவில்லை. நனவோடு நின்றிருந்தேன். அடர்ந்த காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன். வானவெளியில் நிலவொளி வீசிக் கொண்டிருந்தது. சுனைகளும், பொய்கையும் சூழ்ந்திருக்கும் குன்றினைக் கண்டேன். குன்றத்தின் மீது தனியாக நின்றிருந்த பொன்தேரில் குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. தேரின் முன் பாகன் வீற்றிருந்த காட்சியைக் கண்டு ஒரு கணம் திகைத்தேன்.
ஏனெனில், "ஓம்' என்னும் பிரணவத்தை சொல்லிக் கொண்டு, மன்மதனைப் போன்ற அழகுடையவனும், பீமனைப் போன்ற திறம் கொண்டவனும்,தெய்வீக அருள் பொங்கும் விழிகளை உடையவனும், நெஞ்சில் வஞ்சம் கொண்ட எதிரிகளை பயந்தோடச் செய்யும் நீலநிறக் கண்ணனைக் கண்டேன். அவன் சாரதியாய் நின்ற தேரில் வீற்றிருந்த விஜயனையும் கண்டேன்.
கண்ணன் என்னும் மன்னன் சொன்ன வார்த்தைகளை செவிகளால் மடுத்தேன். உறவுகளைக் கொல்ல அஞ்சிய விஜயனைப் பார்த்து ""உண்மையைச் சொல்கிறேன் உனக்கு! அர்ஜுனா! வாடி நிற்காதே! கடமையைச் செய்! அதில் உண்டாகும் பலனை எதிர்பாராதே! அதனால் உனக்கு இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை'' என்று அவன் சொன்னான். அந்தக் கண்ணன் சொன்னதை நாம் பின்பற்றுவோமே!
-பாரதியார்

பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement