சென்னையில் பிரிட்டிஷார் கட்டிய கட்டடங்கள் அனைத்துக்கும் ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்கப்பட்டது. பின்னரே அந்த கட்டடங்களுக்கு தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டன. அந்த வகையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிராடி காஸில் கட்டடத்துக்கு தமிழில் தென்றல் என பெயர் வைத்துள்ளனர். அதில் தற்போது இசைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டடம் ஜேம்ஸ் பிராடி என்பவரால் 1796ம் ஆண்டு கட்ட ஆரம்பித்து 1798ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 11 ஏக்கர் நிலம் இந்த கட்டடத்துக்கு ஒதுக்கப்பட்டது. 1801ம் ஆண்டு அடையாறு ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்து காரணமாக இந்த வீட்டை ஜேம்ஸ் பிராடி அரசாங்கத்துக்கு விற்றார்.
பி.எஸ்.குமாரசாமி ராஜா மற்றும் சில நீதிபதிகள் ஆகியோர் வசம் இந்த வீடு மாறி, மாறி வந்தது. 1948ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மத்திய கர்நாடக இசைக்கல்லூரி, 1956ம் ஆண்டு முதல் இந்த கட்டடத்தில் செயல்பட துவங்கியது. இதில் முசிறி சுப்பிரமணிய அய்யர், டி.பிருந்தா மற்றும் திருபாம்புரம் சுவாமிநாத பிள்ளை ஆகிய பிரபலங்கள் ஆசிரியர்களாக பணியாற்றினர். நீண்ட காலம் ஆனதால் இந்த கட்டடத்தின் சுவர்கள் சேதமடைந்து வருகின்றன. ஆனாலும் இதன் கவர்ச்சி மட்டும் இன்னும் மாறாமல் உள்ளது.