"சென்னை தங்கச்சாலை பகுதியில் ஏழுகிணறு பகுதியில் 1895ம் ஆண்டு முருகேசமுதலியார் பெரிய காய்கறி மார்க்கெட்டை கட்டினார். இந்த மார்க்கெட் 1910ம் ஆண்டு நாடகக்கொட்டையாக மாற்றியமைக்கப்பட்டது. இதில், காளி என் ரத்னம், கிட்டப்பா, டி.கே.சண்முகம்,எம்.ஆர்.ராதா மற்றும் பல நாடகக் குழுவினர்கள் நாடகம் நடத்தினர்.
அதன் பிறகு 1916ம் ஆண்டு தியேட்டராக மாற்றப்பட்டது. "மெஜஸ்டிக்' என்று பெயர் வைக்கப்பட்டது. லாரல் கார்ட்டி, கீததேசம் போன்ற மவுனப் படங்கள் திரையிடப்பட்டன. இத்தியேட்டர் 1931ம் ஆண்டு சினிமா சென்ட்ரல் டாக்கீஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்தியாவில் முதல் பேசும் படமான "ஆலம்ஆரா' படம் இத்தியேட்டரில் திரையிடப்பட்டது. இப்படத்தை பார்க்க தமிழகம் முழுவதிலிருந்தும் மக்கள் ரயிலில் வந்தனர். இதே ஆண்டில் தமிழில் வெளியான முதல் பேசும் படமான, கவிகாளிதாஸ் படமும் இத்தியேட்டரில் வெளியிடப்பட்டது. இந்த தியேட்டர் 1948ம் ஆண்டு ஸ்ரீ முருகன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தற்போதும் படங்கள் திரையிடப்பட்டு வருகிறது.
பாரம்பரியமிக்க இந்த தியேட்டருக்கு கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, காமராஜர், பக்தவச்சலம், இ.வெ.ராமசாமி பெரியார், அண்ணாத்துரை மற்றும் எம்.ஜி.ஆர்.,சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ் உட்பட தமிழ்ச் சினிமாவின் அனைத்து பிரபலங்களும் வந்து சென்றுள்ளனர்.
இத்தியேட்டரை முருகேச முதலியாருக்கு பிறகு, அவரது மகன் வி.எம்.பரமசிவ முதலியார் நடத்தி வந்தார். தற்போது இவரது மகன் பாலசுப்பிரமணியம் நடத்தி வருகிறார். சென்னை பாரிமுனையில் இதே போல பழமை வாய்ந்த பிராட்வே தியேட்டர், நியுபிராட்வே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றும் இயங்கி வருகிறது.
chandrasekar-indian, குவைத்
8/23/2012 6:56:06 PM ISTவெரி கரெக்ட்