அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படும் பொருட்கள்தான் ஆச்சரியத்தைத் தரும். சென்னை, பாந்தியன் ரோட்டில் உள்ள அரசு அருங்காட்சியகக் கட்டடமே அற்புதமான கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டு. எழும்பூர், கன்னிமரா நூல்நிலைய வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்படுகிறது.
இவ்வளாகத்தில் உள்ள தேசியக் கலைக்கூடம் சிவப்புக் கற்களால் கட்டப்பட்ட மிக அற்புதமான கட்டடம். இந்தோ- இஸ்லாமியக் கட்டடக்கலையின் அற்புதமான இக்கட்டடத்துக்குச் செல்ல தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனுள் இருந்த ஓவியங்கள், பிரம்மா சிலை, வெண்கலச் சிலைகள் அருகிலுள்ள அரசு அருங்காட்சியகத்தினுள் வைக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக் கலைப்பொருட்கள் முதல், தற்காலத்துப் பொருட்கள் வரை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தென்னிந்திய அரசு வம்சத்தவர்களின் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெண்கல உலோகச் சிற்பங்கள், விலங்கியல் மற்றும் புவியியல் பகுதிகள் அபூர்வமான தகவல்களைக் கொண்டுள்ளன.
அமராவதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை இங்கு வைக்கப்பட்டுள்ளது. தேசிய கலைப்பொருட்கள் பகுதியில் 10ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரையிலான கலைப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. 16, 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த முகலாய ஒவியங்கள்; ராஜஸ்தானி ஓவியங்கள், தக்ஷிண கலைப்பொருட்கள் என ஏராளமான அரிய பொருட்களின் களஞ்சியமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கிறது. அருங்காட்சியக வளாகம் பல்வேறு பிரிவுகளாகச் செயல்படுகிறது. ஒவ்வொரு கட்டடடத்திலும் வெவ்வேறு விதமான பொருட்களைப் பார்க்க முடியும். 17,18ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்களையும் இங்கு காண முடியும். இவற்றின் மூலம் அக்கால கட்டத்தில் தெருக்கள், வீடுகளின் அமைப்பு, உடைகள், பயன்படுத்தப்பட்ட ஜட்கா வண்டிகளின் உருவமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்ள இந்த அருங்காட்சியகம் உதவுகிறது.