ஆயுதம் செய்வோம்
பிரச்னைக்கு தீர்வு வன்முறை
அல்ல என்ற ஒரு வரிக் கருவைக் கொண்டு உருவாகியிருக்கும்
படம்தான் ஆயுதம் செய்வோம்.
மெக்கானிக்காக வருகிறார் நாயகன் சுந்தர் சி. மெக்கானிக்
வேலையுடன் அவ்வப்போது அடிதடி வேலைகளிலும்
களமிறங்குகிறார். அடிதடியில் டிராபிக் ஜாம் ஆவதால் கைது
செய்யப்பட்டு, மதுரை காந்தியகத்தில் 15 நாட்கள் இருந்து
தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கோர்ட்
உத்தரவிடுகிறது. நடிகர் விவேக்கும் சுந்தர்சியுடன்
காந்தியகத்தில் ஐக்கியமாகிறார். இருவரும் அங்கு தடாலடி
லூட்டியடிக்கிறார்கள். தண்டனை முடிந்து சென்னைக்கு
திரும்பும் சுந்தர்சி, மிண்டும் தனது அடிதடி வேலைகளில்
இறங்குகிறார். அந்த நேரத்தில் முன்னாள் அமைச்சராக வரும்
மணிவண்ணன் மூலம் ஒரு அசைன்மெண்ட் கிடைக்கிறது. அதாவது,
மணிவண்ணனுக்கு எதிராக இருக்கும் நேர்மையான வக்கீல்
விஜயகுமாரிடம் இருந்து முக்கியமான ஆதாரத்தை பறித்து
கொண்டு வரும் வேலை. விஜயகுமாரை விடாமல் துரத்தி,
ஆதாரத்தை பறிக்கும்போது ஏற்பட்ட அசம்பாவிதத்தில்
விஜயகுமார் இறந்து விடுகிறார். இந்த சம்பவம்
சுந்தர்சியின் கண்முன்னே அவ்வப்போது வந்து செல்கிறது.
குற்ற உணர்வு பாடாய் படுத்துகிறது. வக்கீல்
விஜயகுமாரின் நல்லெண்ணத்தை நிறைவேற்ற புறப்படுகிறார்
சுந்தர்சி. அதற்குள் ஆதாரங்கள் வில்லன் கும்பலால்
அழிக்கப்பட்டு விடுகின்றன. அப்போதுதான் வருகிறது
காந்தியடிகளின் அகிம்சை கொள்கை. அகிம்சை வழில் போராடி
விஜயகுமாரின் லட்சியத்தை நிறைவேற்றுகிறார் சுந்தர்சி.
இதுதான் படத்தின் கதை.
ஆக்ஷன் வட்டத்துக்கு சிக்க சுந்தர்சி
முயற்சித்திருக்கிறார். இதில் அவர் பாஸ் மார்க் கூட
வாங்க வில்லை. அவரது குரலும் வில்லத்தனத்துக்கு
எடுபடாமல் போகிறது. தண்டனையை அனுபவிக்க காந்தியகம்
போகும் சுந்தர்சி அங்கு விவேக்குடன் சேர்ந்து அடிக்கும்
லூட்டி சிரிப்புக்கு பதிலாக எரிச்சலையே வரவழைக்கிறது.
காந்திய வழியில் உண்ணாவிரதம் தொடங்குவது புதிய சிந்தனை.
போலீசாரும், ரவுடிகளும் மிரட்டியம் உண்ணாவிரதத்தை
கைவிடமாட்டேன் என்று என்று சொல்லி முரண்டு பிடித்து
சாதிக்கம் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
நாயகி அஞ்சலி கொஞ்சம் தேறியிருக்கிறார். தன்னை உடலில்
ஒட்டுத் துணி இல்லாமல் பார்த்து விட்டார் என்ற
காரணத்துக்காக சுந்தர் சி மீது காதல் மோகம்
கொள்வதெல்லாம் கொஞ்சம் ஒவர். பாடல் காட்சிகளில்
கவர்ச்சியில் இளமை ஊஞ்சல் ஆடுகிறது.
நெப்போலியன் போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனாராக வந்து
போகிறார். நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையா,
நடிக்கவில்லையா? என்று தெரியவில்லை. சில காட்சிகளில்
சிரிப்பு போலீஸ் போலவே தெரிகிறது இவரது கேரக்டர்.
விவேக்கின் காமெடி சுமார் ரகம். அதே நேரத்தில் அதுதான்
அவ்வப்போது ஆறுதல் ரகம். ஸ்ரீகாந்த் தேவா இசையில்
இன்னும் ஒரு வானும்..., கண்டோம் கண்டோம்... மீண்டும்
கேட்கத்தூண்டும் ரகம். படத்தை பாராட்டாவிட்டாலும்,
படத்தை வித்தியாசமாக எடுக்க முயன்ற இயக்குனர் உதயனை
பாராட்டலாம்.
ஆயுதம் செய்வோம் - புதிய சிந்தனை
- தினமலர் விமர்சன குழு -
ஆயுதம் செய்வோம்
அரிவாளால் செய்ய முடியாததை அன்பு செய்து முடிக்கும்.
அஹிம்சையோடு போராடினால் வெற்றி நிச்சயம். கிட்டத்தட்ட எல்லோராலும் முழங்கி
முடிக்கப்பட்ட.. அதே காந்தியத் தத்துவங்கள்தான் கமர்ஷியல் மூலாம் பூசி ஆயுதம் செய்ய
முயற்சித்திருக்கிறார்கள்.
கூலிக்கு ஆள் அடிப்பது, குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளை செய்வதென பக்கா லோக்கல்
பார்ட்டியாக சுந்தர்.சி.
மதுரை காந்தி மியூசியத்தில் சில நாட்கள் தங்கவேண்டும் என்று சுந்தர்சிக்கும்,
விவேக்கிற்கும் நீதிபதி கொடுக்கும் தண்டனை சுவாரஸ்யமான கான்செப்ட். மியூசியத்தின்
பொறுப்பாளராக வரும் நாசரின் நிபந்தனைகளை தாக்குபிடிக்க முடியாமல் திணறும் காட்சிகள்
சிரிப்பை வரவழைக்க தவறவில்லை. மாளவிகாவுக்காக சத்திய சோதனை புத்தகம் படிக்கும்
மாடர்ன் இளைஞன் திடீரென மனம் திருந்துவது அசத்தலான காட்சியமைப்பு. அக்கமார்க் தமிழ்
சினிமா ஹீரோயினாக அஞ்சலி சிரித்த முகத்துடன் சுந்தர்.சியை சுற்றி வருகிறார்.
விஜயகுமாருக்கு தப்பு நடந்தால் தட்டிக் கேட்கும் வக்கீல் கதாபாத்திரம். வார்த்தைக்கு
வார்த்தை வாழ்க வளமுடன் என வசனம் பேசியே நமக்கு கொட்டாவியை வரவழைக்கிறார்.
புலன்விசாணை செய்யும் போலீஸ் அதிகாரியாக நெப்போலியன் படு கம்பீரமாக அறிமுகமாகிறார்.
சரி, ஏதோ பெரிசாக செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்தால் அதிலும் ஏமாற்றம்தான்.
நக்கலும் நையாண்டியுமாக நீண்ட இடைவெளிக்குப்பிறகு மணிவண்ணன் வில்லதனம்
செய்திருக்கிறார். அரசியல்வாதிகளுக்கே உண்டான அழுத்தம் திருத்தமான காட்சிகள்
ஏதுமின்றி சக்கையாக காட்சிகள் நகர்கின்றன. காந்திசிலைக்குக் கீழே உட்கார்ந்து
சுந்தர்.சி செய்யும் தனிநபர் அகிம்சை போராட்டம். வழக்கமான பழைய பாணி, கொஞ்சம்
கொஞ்சமாக அந்த உண்ணாவிரதம் எப்படி போராட்டமாக வெடிக்கிறது என்பதெல்லாம் ரொம்பவே
புதுசு. லகே ரஹோ முன்னாபாய் பாணியில் காந்திக்கு ஜே சொல்லும் கதையை
தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதில் கால்வாசிதான் தேறியிருக்கிறது.
ம்... ஆயுதம் செய்திருக்கலாம், இன்னும் கூர்மையாக.
- குமுதம் விமர்சன குழு -
ஆயுதம் செய்வோம்
ஜெயிலுக்கு போய்வருவதை ஊருக்கு போய் வருவதைப் போல கொண்டாடும் ரௌடி சைதை சத்õவாக சுந.தர். சி. அவர் செய்யும் குற்றங்களுக்கு உடந்தையாக டிராபிக் போலீஸ் விவேக்.
இவர்கள் செய்யும் குற்றங்களுக்குத் தண்டனையாக மதுரை காந்தி மியூசியத்தில் தங்கச் சொல்கிறார் நீதிபதி. அங்கே அவர்கள் மனசுக்குள் நிகழும் மாற்றங்களுக்குத் திரைக்கதை அமைத்து கூடவே கமர்சியல் அம்சங்கள் குழைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் உதயன். அகிம்சை குறித்த அர்த்தமுள்ள பதிவுகள் படத்தின் பலம்.
அநியாத்தைத் தட்டிக்கேட்கும் வழக்குரைஞராக விஜயகுமார். சாகும் தருவாயில் அவர் சொல்லும் வாழ்க வளமுடன் டயலாக் செம டச். அதுவே சுந்தர். சி யின் மனத்தை மாற்றும் முதற்காரணியாக காட்டியிருப்பதில் இயக்குநர் தெரிகிறார்.
கலகலப்புக்கு விவேக். வாயும் வயிறுமா வந்து நிக்கிறோமே இன்றுமா எங்களை போலீஸுனு நம்பலை என தொப்பையை ஆட்டி ஆட்டிப் பேசும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பு வெடி. காந்தி கணக்குக்கு அவர் கொடுக்கும் விளக்கம் கலகல சரவெரடி. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நெப்போலியன். மிடுக்கான போலீஸ் ட்ரெஸ்ஸில் ஸ்மார்ட்.
மாளவிகாவை வைத்து சத்திய சோதனை புத்தகத்தை விற்பதும், சத்தியசோதனையிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொன்னால் அவரோடு சாப்பிடலாம், கை குலுக்கலாம் என்பதும் காந்தியத்தையும் காந்திஜியையும் மலினப் படுத்தகிறது. பெரிய சறுக்கல்.
கதாநாயகியாயக வந்து போயிருக்கிறார் அஞ்சலி. நடிக்க தெரிந்த அவருக்கு வெறும் கவர்ச்சி, காதல் அசைன்மேன்ட் ஏன்?
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் மூணு காசு முட்டாயி மட்டும் இனிக்கிறது. செல்வராஜின் ஒளிப்பதிவு யதார்த்தம். ஆக்ஷன் படத்தில் அகிம்சை பாடம்.
ஆயும் செய்வோம் - இனிக்கும் காரம்
- கல்கி விமர்சன குழு -
|