ரசிகர் மன்றங்களை அமைத்து, கட்அவுட்டுக்கு பால் ஊற்றுவது, போஸ்டருக்கு கேக் ஊட்டுவது என்று பரபரப்பை ஏற்படுத்தும் சினிமா நடிகர்கள் மத்தியில் இந்த கலைக்குடும்பம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமான குடும்பம்.
கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக போற்றப்பட்ட சிவகுமார், தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை துவங்கி சமூக சேவைகளை செய்யத் துவங்கினார். ஏழைகளுக்கு உதவுவதையே குறிக்கோளாக கொண்டு இயங்கும் இந்த அறக்கட்டளை இன்றுவரை தனது பணியை செவ்வனே செய்து வருகிறது.
அடுத்து... சிவகுமாரின் கலை வாரிசான நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற பெயரில் ஒரு சமூக சேவை நிறுவனத்தை துவங்கினார். இந்த பவுண்டேஷன் சார்பில்தான் சமீபத்தில், ஹீரோவா? ஜீரோவா? என்ற குறும்படம் எடுக்கப்பட்டது. நடிகர்கள் விஜய், சூர்யா, மாதவன், நடிகை ஜோதிகா ஆகியோர் நடித்திருந்த இந்த குறும்படம், பாதியில் பள்ளிப் படிப்பை துறக்கும் மாணவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது.
அப்பா சிவகுமார், அண்ணன் சூர்யா வரிசையில் பருத்திவீரன் கார்த்தியும் அதிரடியாக சமூக சேவையில் ஈடுபடத் துவங்கி விட்டார். ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்கள், ரசிகைகளின் மனதில் முத்திரை பதித்த கார்த்தி எந்தவித ஆரவாரமும் இல்லாமல் தனது பிறந்த நாளை கொண்டாடினார். ரத்ததானம் செய்த கார்த்தி, அடையார் ஒய்.ஆர்,.ஜி. கேர் மருத்துவ மையத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம் காசோலையை வழங்கி மகிழ்ந்தார்.
அதன் பின்னர் சென்னை தி.நகர். பிட்டி தியாகராயர் அரங்கில் நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். விழாவின்போது சென்னையை சேர்ந்த ரசிகர் மன்றங்கள் சார்பாக ஊனமுற்றோருக்கு சைக்கிள்கள், தையல் இயந்திரங்கள், மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள், பேக், பேனா உள்ளிட்டவற்றை நடிகர் கார்த்தி வழங்கினார். பின்னர் ரசிகர்கள் மத்தியில் நடிகர் கார்த்தி பேசியதாவது:-
எங்களை வாழ வைக்கும் ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதன் விளைவுதான் இந்த மக்கள் நல மன்றம். ஏற்கனவே சிவகுமார் அறக்கட்டளை மூலமாக என்னுடைய தந்தையும், அகரம் பவுண்டேஷன் சார்பில் சூர்யாவும் மாணவர்களின் கல்விக்காக பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். என் பங்குக்கு நானும் ஏதாவது செய்ய விரும்பினேன். அதற்கான முதல் படிதான் இந்த விழா. ரசிகர் மன்றம் என்றால் உருப்படாதவர்கள் என்ற பெயரை மாற்றி, சமூக அக்கறையுடையவர்களாகவும், மக்களுக்கு சேவை செய்பவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் மக்கள் நல மன்றம் என்று பெயரிட்டிருக்கிறோம். இந்த அமைப்பின் மூலம் நிறைய நல்ல விஷயங்களை செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு கார்த்தி பேசினார்.
நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய கவுரவ தலைவராக ஞானவேல், தலைவராக பரமு, செயலாளராக வீரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தினமலர் சினி டீம் -