புதுடில்லி: விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாததால், சமாஜ்வாடி பொதுச் செயலர் அமர் சிங்கிற்கு, டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட் வாரன்ட் பிறப்பித்துள்ளது. சமாஜ்வாடி பொதுச் செயலர் அமர் சிங், கடந்த 2007ல், பருன் குமார் வர்மா என்பவருக்கு எதிராக டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார்.
அதில், வர்மா தன்னை அச்சுறுத்தி பணம் பறிக்க முயற்சிப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் போது, அமர் சிங் நேரில் ஆஜராகவில்லை. இது குறித்து கோர்ட் சார்பில் பல முறை அறிவுறுத்தப்பட்டும், அவர் ஆஜராகாமல் இருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோதும், அமர் சிங் ஆஜராகவில்லை. இதையடுத்து, அமர் சிங்கிற்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து, மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது.
இதற்கிடையே, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு, அமர் சிங் எழுதியுள்ள கடிதத்தில், "உ.பி.,யில் கழிவுநீர் அகற்றும் பணிக்காக விடப்பட்ட டெண்டரில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும், இதில், உ.பி., முதல்வரின் செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப் படுவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
| வாசகர் கருத்து |