சென்னை: "ஐகோர்ட் உத்தரவை கவனத்தில் கொண்டு, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சி.பி.ஐ.,யிடம் தமிழ்நாடு வக்கீல்கள் சங்கம் கோரியுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, சி.பி.ஐ., டி.எஸ்.பி.,யை தமிழ்நாடு வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பாஸ்கர், லூயிசா, அப்துல்ரகுமான், மஜீத் உள்ளிட்ட வக்கீல்கள் பலர் சந்தித்து அளித்த மனு:
சி.பி.ஐ., விசாரணை குறித்த இடைக்கால அறிக்கை, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் எங்களுக்கு தெரியாது. ஆனால், சி.பி.ஐ., அறிக்கை பற்றி ஐகோர்ட் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், "வக்கீல்கள் யார் என்பதற்கான அடையாளம், வக்கீல்கள் சங்கங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளது. வக்கீல்களை தாக்கியது, வாகனங்கள் மற்றும் கோர்ட் சொத்துக்களை சேதப்படுத்திய போலீசார் யார் என, சி.பி.ஐ., அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
எட்டு மாதங்கள் கழிந்த பின்னும், போலீசார் யார் என்பதை இன்னும் சி.பி.ஐ., கண்டறிய வேண்டியதுள்ளது' என கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து, நியாயமான விசாரணையை சி.பி.ஐ., நடத்தும் என நாங்கள் நம்புகிறோம். போலீசார் யார் என்பதை அடையாளம் காண, "சிடி'க்களை சி.பி.ஐ.,யிடம் ஏற்கெனவே அளித்துள்ளோம். நீதி நிர்வாகத்தில் குறுக்கீடு செய்த அதிகாரிகள் பற்றி ஐகோர்ட் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் போது, ஐகோர்ட் உத்தரவை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
| வாசகர் கருத்து |