மதுரை: உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களை ஒதுக்க கோரிய நால்வருக்கு தலா ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்கும்படி அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல்லை சேர்ந்த தேன்மொழி தாக்கல் செய்த ரிட் மனு:
நான் காந்திஜி நினைவு நடுநிலை பள்ளியில் 1988 முதல் இடை நிலை ஆசிரியையாக பணிபுரிகிறேன். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சமீபத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கான தேர்வை நடத்தியது. மொத்த பணியிடங்களில் 10 சதவீதம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒதுக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுக்கு புறம்பாக அனைத்து பணியிடங்களையும் நேரடியாக நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது தேர்வு முடிந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.
அரசு உத்தரவின்படி 10 சதவீதம் இடைநிலை ஆசிரியர்களை நிரப்பா விட்டால் இந்த வாய்ப்பு பறிபோய் விடும். உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் வழங்க கோரி அக்., 25ல் பள்ளி கல்வி துறையினருக்கு மனு செய்தேன். எனக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி வழங்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது இதுபோல இந்திராணி, லதா மகேஸ்வரி, லட்சுமி பிரபா மனு செய்தனர். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கண்ணன் ஆஜரானார்.நீதிபதி கே.என்.பாஷா, ""மனுதாரர்கள் மனுவை அரசு பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நான்கு பேருக்கும் தலா ஒரு பணியிடம் காலியாக வைத்திருக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.
| வாசகர் கருத்து |