சென்னை: அ.தி.மு.க., எம்.பி., தினகரனுக்கு எதிராக அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்ற வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து எழும்பூர் பொருளாதார கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அன்னியச் செலாவணி மோசடி செய்ததாக, எம்.பி., டி.டி.வி.தினகரன் மீது மத்திய அமலாக்கப் பிரிவினர் நடவடிக்கை எடுத்தனர்.
இதில், அவருக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்த 45 நாட்கள் கெடு விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அன்னியச் செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த வாரியம், தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை 28 கோடியாக குறைத்தது. 2000ம் ஆண்டு மே மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போர்டு உத்தரவிட்டும், இந்த அபராதத் தொகையை குறிப்பிட்ட நாட்களுக்குள் தினகரன் செலுத்தவில்லை.
இதையடுத்து, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக எழும்பூர் பொருளாதார கோர்ட்டில், மத்திய அமலாக்கப் பிரிவினர் குற்ற வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: அன்னியச் செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியம், 2000ம் ஆண்டு மே மாதம் பிறப்பித்த உத்தரவு இறுதியானது அல்ல. எனவே, தினகரனுக்கு எதிரான இந்தப் புகார் விசாரணைக்கு உகந்ததல்ல. வாரியத்தின் உத்தரவு, தினகரனுக்கு வழங்கப்பட்டதை அமலாக்கப்பிரிவு நிரூபிக்க தவறி விட்டது. மேல்முறையீட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் மனு, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் இன்னும் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இவ்வழக்கில் இருந்து தினகரனை விடுதலை செய்கிறேன். இவ்வாறு மாஜிஸ்திரேட் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
| வாசகர் கருத்து |
sattathil ulla ottaya payanpaduthi criminals thappikiraanga - sattam oru iruttarai
|
by Karthik,singapore,Singapore 11/6/2009 7:33:40 AM IST |