சென்னை: சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ இயக்குனர் பதவி நியமனம் குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பாணைக்கு, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. சென்னை தாம்பரத்தில் உள்ள, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இயக்குனராக பதவிவகித்த பேராசிரியர் பூபதிராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு:
கடந்த 82ம் ஆண்டு, இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறையில் உதவி மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். கடந்த ஆண்டு ஜூலை மாதம், தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டேன். திடீரென்று கடந்த ஆகஸ்ட் மாதம் என்னை பணியில் இருந்து நீக்கி விட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் நான் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. அவ்வாறு இருக்கையில், இந்த வழக்கை முறியடிக்கும் நோக்கில், தேசிய சித்த மருத்துவ இயக்குனர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, கடந்த மாதம் 25ம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வு நடவடிக்கையை அனுமதித்தால் நான் பாதிக்கப்படுவேன். எனவே, இயக்குனர் நியமனம் குறித்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். இயக்குனர் பதவியை நிரப்ப தடை விதிக்க வேண்டும். தேர்வு நடவடிக்கைக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனுவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் கே.இளங்கோ, நிர்வாக உறுப்பினர் சதாபதி ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ரவி, பிரியாரவி ஆஜராகினர். மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
| வாசகர் கருத்து |