சென்னை: "அரசு கொள்கை முடிவெடுக்கும் வரை, தமிழக பள்ளி கல்வித்துறை நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் கலந்து கொள்வதை தடுக்க முடியாது' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007-08ம் ஆண்டு வரை சி.பி.எஸ்.இ., மூலம் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் தொழில் படிப்புகளில் சேருவதற்கு மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. எனவே, மாநில பள்ளி கல்வித்துறை நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள சி.பி.எஸ்.இ., மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின், 2008-09ம் ஆண்டு முதல் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், சி.பி.எஸ்.இ., நடத்தும் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம், பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவில், "தமிழக பள்ளிக் கல்வித்துறை நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில், 2008-09ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., மாணவர்களை அனுமதிக்க முடியாது' என கூறப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர். பள்ளி கல்வித்துறை நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என, அவர்கள் கோரினர். இம்மனுவை விசாரித்த ஐகோர்ட், பள்ளி கல்வித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
தடையை நீக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் கூறப்பட்டதாவது: சி.பி.எஸ்.இ., மாணவர்களை, தமிழக பள்ளி கல்வித்துறை நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதித்தால், மாநில பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். மாநில கல்வித் துறை நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இரு வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால், மாநில கல்வி திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு ஒரே வாய்ப்பு தான் கிடைக்கிறது. எனவே, இந்த தடையை நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
இம்மனுக்களை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: பள்ளிக் கல்வி முறைகளில் வேறுபாடு செய்வதை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கவில்லை. நான்கு வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை ஒரே வகுப்பாகத் தான் கருதுகிறது. சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இரட்டிப்பு சலுகை கிடைக்கிறது என, தமிழக அரசு கூறும் காரணம் நிற்காது. ஏனென்றால், விளையாட்டு துறையை ஊக்குவிப்பதற்காகத் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் படித்தாலும், மாநில கல்வி திட்டத்தின் கீழ் படித்தாலும் அது தேவையற்றது. சி.பி.எஸ்.இ.,யில் படிக்கும் மாணவர்கள், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு மாநில கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும் மாணவர்களை விட அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதையும் ஏற்க முடியாது. மாநில பள்ளியில் பயிலும் மாணவர்களை, சி.பி.எஸ்.இ., நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை என்கிற காரணத்தை வைத்து, சி.பி.எஸ்.இ., மாணவர்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது.
இவ்வழக்கில் எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு கொள்கை உருவாக்க, தேவைப்பட்டால் ஒரு குழுவை நியமிக்கலாம். அத்தகைய கொள்கை உருவாக்கும் வரை, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் யாரையும் தமிழக பள்ளி கல்வித்துறை நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதை தடுக்க முடியாது.
சி.பி.எஸ்.இ., நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என, தமிழக கல்வித் துறையின் கீழ் பயிலும் மாணவர்களோ, பெற்றோர்களோ, பள்ளிகளோ மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. அனைவரையும் கலந்தாலோசித்து ஒரு கொள்கையை வகுத்தபின், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தகுந்த குழுவை அமைத்து வழிமுறைகளை உருவாக்குவது தமிழக அரசை பொறுத்தது. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
| வாசகர் கருத்து |