புதுடில்லி: இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதை எதிர்த்து, வக்கீல் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை டில்லி கோர்ட், வரும் மார்ச் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளது. போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் குட்ரோச்சி.
வெளிநாட்டில் இருக்கும் இவரை பிடித்துக் கொண்டு வந்து விசாரணை நடத்த, சி.பி.ஐ., மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை என்பதால், அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தீர்மானித்தது. இதுதொடர்பான மனு ஒன்றையும் டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. ஆனால், "குட்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கக் கூடாது' என வலியுறுத்தி, வக்கீல் அஜய் அகர்வால் என்பவர் டில்லி கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது உத்தரவு பிறப்பிப்பதை நேற்றைக்கு தள்ளி வைத்து, கடந்த அக்டோபர் 24ம் தேதி டில்லி கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால், நேற்றைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அதற்கு மாறாக மனு மீது உத்தரவு பிறப்பிப்பதை, வரும் மார்ச் 31ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் காவன் பவேஜா தள்ளிவைத்தார். வழக்கு தொடர்பான உண்மையான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால், இப்போதைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
| வாசகர் கருத்து |