மதுரை: மதுரை சிறுவாலையை சேர்ந்த ஞானசவுந்திரன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: எனக்கும், எனது மனைவி செல்விக்கும் விவாகரத்து ஆனது. ராஜேந்திரன் என்பரை செல்வி திருமணம் செய்தார். எனது மகள் பிரசன்னாதேவி ஓ.சி.பி.எம்., பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.
செல்வி தனது தம்பி அதீஷ் கண்ணனுக்கும், பிரசன்னாதேவிக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். இதனால், அடிக்கடி பள்ளிக்கு சென்று தொந்தரவு செய்கின்றனர். திருமணம் செய்ய பிரசன்னாதேவிக்கு விருப்பம் இல்லை. எனது மகளை வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக மாற்றுச்சான்று வழங்கும்படி பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டேன். அவர் மறுக்கிறார். மாற்றுச்சான்று வழங்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட வேண்டும், என மனுவில் கோரியிருந்தார். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ராகுல், ஸ்டாலின் ஆஜராயினர்.
இம்மனு நீதிபதி கே.என். பாட்ஷா முன் விசாரணைக்கு வந்தது. பெற்றோர் பிரச்னையால் குழந்தையின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. எனவே, மாற்றுச்சான்று வழங்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவிடுவதாக தீர்ப்பு கூறினார்.
| வாசகர் கருத்து |