நல்ல சீலங்கள், நல்ல குணங்கள் வர வேண்டுமென்றால்
நல்ல ஆசாரங்கள் இருக்க வேண்டும். மனசு நன்றாக
இருந்தால் மட்டுமே சீலம் வரும். கெட்டது என்பதே
மனதில் புகாதபடி நல்லது முழுவதும்
நிரம்பியிருந்தால் தான் சீலம் வரும். கண்ணாடியைப்
பார்க்கிறோம். அழுக்காக இருந்தால் பார்க்க
முடிகிறதா? சுத்தமாகத் துடைத்து விட்டுப்
பார்த்தால் நன்றாகத் தெரியும். கண்ணாடி சுத்தமாக
இருப்பதுடன் அசையாமல், நிலையாகவும் இருக்க வேண்டும்.
அப்போது தான் உண்மை பிரகாசிக்கும். சித்தம் என்பது
ஒரு கண்ணாடி போன்றது. பரம்பொருள் தான் உண்மை!
உலகைப் படைத்த அவனைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால்,
நம்முடைய சித்தத்தை அழுக்கில்லாமல், ஆடாமல்,
அசையாமல், நிலையாக வைத்துக் கொள்ள வேண்டும்.