Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

04.தீபாவளிச் சத்தியம்! ( க.ப.அறவாணன்)


எந்த ஒன்றும், அது எத்துணைச் சிறப்புடையதாக இருந்தாலும் தொடர்ந்து நிகழ்த்தப்படும்போது அது வெறும் சடங்கு சம்பிரதாயமாக இளைத்து விடுகிறது. அப்படி நிகழக் கூடாது; ஆனால், அப்படி நிகழுகிறது. காரணம், தலைமுறை இடைவெளி தான்.

 

ஒன்று தோன்றிய போதும், அதை ஒட்டிய சமீப காலங்களில் போதும், அவற்றால் சாதக, பாதகங்களை அனுபவிக்கும் மக்கள் தலைமுறை மறையும்போது அதனோடு மூலத் தோற்றத்தின் முதன்மையும் குறைந்து விடுகிறது; சில சமயம் மறைந்தும் விடுகிறது. இதன் பின்னணியில் அரசியல் காரணிகளும் இருக்கின்றன; சமுதாயக் காரணிகளும் இருக்கின்றன.

ஒரு காலத்தில் இந்தியாவில் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள இங்கிலாந்திலிருந்து ஆண்ட பிரிட்டீஷ் சாம்ராஜ்ய ராஜா, ராணிகளின் பிறந்த நாட்கள் மிகப் பெரியனவாகக் கொண்டாடப்பட்டன; இன்று அவ்வாறு கொண்டாடப்படுவதில்லை.

 

அடிப்படை: அரசியல் காரணம். அது போலவே பழைய தமிழகத்தில் மலர்க் கோலமிட்டு ஆவணி மாதம் கொண்டாடப்படும் ஓண விழா தமிழர் அனைவராலும் சேர, சோழ, பாண்டியர் என நில, குல வேறுபாடு இன்றிக் கொண்டாடப்பட்டது. பின்னாளில் அவ்விழா மலையாளிகள் மட்டும் கொண்டாடும் விழாவாகச் சுருங்கிப் போயிற்று. அடிப்படை: சமுதாய அரசியல்.
 

பெரும்பாலும் விழாக்களை உலக அளவில் கொண்டாடி வரும் ஐரோப்பியக் கிறிஸ்தவர், அராபிய, இஸ்லாமியர், சீன தேசத்துச் சீன மக்கள், இஸ்ரேலிய யூத மக்கள் முதலானோரிடையே இப்படி அடிப்படை மாற்றங்கள் நிகழுவதில்லை. அவரவர் கொண்டாடும் ஒவ்வொரு விழாவுக்கும் உரிய சத்தியங்களும், தத்துவங்களும் முற்றுமாக ஒதுக்கப்படுவதில்லை. எனவே தான் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றில் அம்மக்கள் நிறம் இழக்காமல் நிமிர்ந்து நிற்கின்றனர்.
நம்மிடமும் அந்தப் பழக்கம் ஊன்றி நிலை பெற வேண்டும். சான்றாகத் தீபாவளித் திருவிழாவின் அடிப்படை புத்தாடை உடுத்துதல், பல்வேறு இனிப்புகளைச் செய்து உண்ணல், பட்டாசு வெடித்தல் ஆகியன மட்டுமல்ல, கொடியவர்களையும், சமுதாயத்துக்குத் தொடர்ந்து கொடுமை செய்து வருபவர்களையும் போரிட்டுக் கொடியவர்களுக்கும், கொடுமைக்கும் கடவுள் முடிவு கட்டிய விழா நாளாகும்.


தீமை வீழ்த்தப்பட்ட நாள் எவ்வளவு பெரிய திருவிழாவாக நம் நாட்டில் நம் முன்னோரால் தீபாவளி எனும் பெயரில் நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளித் திருவிழாவின் தத்துவம் என்ன? தீமையை ஒழிப்பது, தீயோரை ஒடுக்குவது, தீமையையும், தீயோரையும் வளர விடுவதன்று; வாழ விடுவதன்று நோக்கம். இந்த நோக்கத்தைப் புரிந்து கொள்ளவும், போற்றவும் தீபாவளி திருநாளில் நாம் ஒவ்வொருவரும் சத்தியம் மேற்கொள்ள வேண்டும்.


 
BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        |   மின்னஞ்சல்   |  | 

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in