செம்பரம்பாக்கம் : தொடர்மழை காரணமாக சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கி வரும் ஏரி களுக்கு, நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஏரிகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த இரு நாட்களாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. நீர்வரத்து அதிகரிப்பு இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில், நேற்று காலை நிலவரப்படி, 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால், ஏரியில் வினாடிக்கு 1,747 கனஅடி வீதம் நீர்வரத்து காணப்பட்டது. சோழவரம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில், 9 செ.மீ., புழல் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில், 8.4 செ.மீ., செம்பரம்பாக்கம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில், 9.3 செ.மீ., என்ற அளவில் மழை பதிவானது. இதனால், இந்த ஏரிகளுக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால், ஏரிகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நீர்இருப்பு திருப்தி இல்லை தற்போதைய நிலையில், நான்கு ஏரிகளின் மொத்த நீர் இருப்பு, 4.5 டி.எம்.சி., என்ற அளவில் உள்ளது. இவற்றின் மொத்த கொள்ளளவு, 11 டி.எம்.சி., ஆகும். இன்னும், 6.5 டி.எம்.சி., அளவிற்கு குடிநீர் ஏரிகளில் மழைநீரை சேமிக்க முடியும் என்பதால், சென்னை மாநகர மக்கள் குடிநீர் தேவைக்கு கனமழையை எதிர்பார்த்து உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஏரிகளின் தற்போதைய நீர்இருப்பு திருப்தியாக இல்லை. வடகிழக்கு பருவமழை அதிதீவிரமானால் மட்டுமே இந்த ஆண்டு குடிநீர் ஏரிகள் முழுமையாக நிரம்பும். இந்த மாதம் முழுவதும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கோடையில் சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என்று நம்புகிறோம்,' என்றார்.