மதுரை:வீட்டின் சுவர்களில் நெளியும் சாக்கடை புழுக்கள், குடியிருப்பை சுற்றிலும் அள்ளப்படாத குப்பை, குடிநீரில் சாக்கடை கழிவு, சுகாதாரமில்லாத கழிப்பறைகளின் துர்நாற்றம், கொசுக்களின் பிறப்பிடம், பன்றிகளின் வளர்ப்பிடம், என மாநகராட்சி 5வது வார்டு (பாக்கியநாதபுரம்) மக்கள் சிரமப்படுகின்றனர்.
தத்தனேரி மயானம் பின்பகுதியில் உள்ள, இவ்வார்டில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அடிப்படை வசதிகள் இல்லை. குடியிருப்பை சுற்றிலும் பன்றிகள் திரிகின்றன. சாக்கடை புழுக்கள் வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன. சுகாதார அலுவலர்களிடம் பலமுறை கூறியும் பலன் இல்லை.
மறியல் செய்ய திட்டம்:
கருப்பாயி: கழிவுநீர் வாய்க்கால் அடைபட்டுள்ளதால், வாஞ்சிநாதன் தெருவின் சாக்கடை கழிவுகள் வெளியேற வழியில்லை. சாக்கடைக்குள் வசிக்கிறோம். புழுக்கள் வீட்டின் சுவர்களில் ஊர்ந்து செல்கின்றன. சுகாதார சீர்கேட்டால், காய்ச்சல் ஏற்படுகிறது. நிரந்தர தீர்வு காண மறியல் செய்ய உள்ளோம்.
நாகராஜன்: வார்டின் பல பகுதிகளில் குப்பை அள்ளப்படுவதில்லை. சாக்கடை அடைப்புகளை சிலர் சேர்ந்து நீக்கினோம். "கவுன்சிலரை காணவில்லை' என போஸ்டர் ஒட்ட சிலர் முடிவு செய்துள்ளனர்.
பூமாரி: அந்தோணியார் குறுக்குத்
தெருவில், குப்பை, ஈக்கள், கொசுக்கள், பன்றிகள், சுத்தமில்லாத பொதுக் கழிப்பறை மத்தியில் வசிக்கிறோம். ஓட்டுக்கேட்டு வந்த கவுன்சிலர் பின் வரவில்லை. அவரை காணவில்லை என போஸ்டர் ஒட்ட உள்ளோம்.
அ.தி.மு.க., கவுன்சிலர் தங்கப்பாண்டி: என்னை காணவில்லை, என போஸ்டர் ஒட்டப்போகிறார்களா (சிரிப்பு)?. 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குடிநீர் குழாய்களில் சாக்கடை நீர் கலந்து விடுகிறது. இந்த வார்டில் எந்த வேலையும் நடப்பதில்லை. குறைகளை 87545 96085ல் தெரிவித்தால் உதவ தயார், என்றார்.