செங்குன்றம்:சில மாதமாக கவனிக்கப்படாத மாநகர பேருந்தின் மேல் பகுதியில் உள்ள ஓட்டையை படம் எடுத்ததும், பதறி போன போக்குவரத்து துறையினர் அதை சீரமைக்க, உடனடியாக பணிமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை பெருங்குடி பேருந்து விபத்தை அடுத்து, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் நிலவும் பராமரிப்பு அவலம் வெளியாக துவங்கியது.
இந்நிலையில், நேற்று காலை 11:00 மணிக்கு செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து விச்சூர் சென்று வரும் பேருந்து (வழித்தடம் 57 இ) நிறுத்தப்பட்டிருந்தது. அதில், கிராம பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் ஏறி கொண்டிருந்தனர்.
பேருந்தின் மேற்கூரை பிய்ந்து காற்றில் கையசைத்தது. இதனால், மழை காலத்தில் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாத அளவிற்கு தண்ணீர் அருவியாக கொட்டும். பேருந்தின் இந்த நிலை, புகைப்படமாக எடுக்கப்பட்டது.
உடனே அதை கண்ட போக்குவரத்து துறை ஊழியர் ஒருவர், அருகில் உள்ள நேர பதிவாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தார். உடனே ஒலிபெருக்கி மூலம், அந்த பேருந்தின் வழித்தடத்தை கூறி, அதன் ஓட்டுனர் அங்கு வரவேண்டும் என, ஒரு சில முறை அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் பேருந்து தொடர்பாக உத்தரவிடப்பட்டது.
பேருந்துக்கு திரும்பிய அவர்கள், அதில் இருந்த பயணிகளிடம், மற்றொரு பேருந்தை சுட்டிக்காட்டி, "அந்த வண்டி தான் முதலில் போகிறது. அதில் ஏறி கொள்ளுங்கள்' என்றனர்.
இதையடுத்து பயணிகள் வேறு வண்டிக்கு மாறினர். அப்போது இளைஞர் ஒருவர், ""எதுக்காக வண்டியை திடீர்ன்னு மாத்திட்டாங்க?,'' என்றார்.
அதற்கு மற்றொருவர், சமீபத்தில் வெளியான திரைப் படத்தில், நினைவிழந்த கதாநாயகன் அடிக்கடி பேசும் வசனத்தை போன்று, ""என்னாச்சு...யாரோ போட்டோ எடுத்தாங்க, உடனே பஸ்சை மாத்திட்டாங்க. ஸ்... இந்த ஓட்டைய படம் எடுத்துட்டாங்க போல,'' என்று "கமென்ட்' அடித்து நண்பர்களை சிரிக்க வைத்தார்.
இதையடுத்து, பாதுகாப்பான மாற்று பேருந்தில் பயணிகள் புறப்பட்டனர். பராமரிப்பற்ற பேருந்து 11:45 மணிக்கு, மூலக்கடை வரை (கட் சர்வீஸ்) இயக்கப்பட்டு, மாதவரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.